ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2018

நாட்டுச் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன...?


நாமெல்லாம் மகிழ்ந்திட வேண்டும் என்றும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தன்னைத்தானே அர்ப்பணித்த தியாகிகள் நம் நாட்டில் நிறையப் பேர் உண்டு.

தன் குடும்பத்தையும் எண்ணாது தன் சகோதரர்கள் குடும்பத்தைக் காத்துக் கொள்வார்கள்... அவர்கள் இருக்க நமக்கு ஏன் பயம்...? என்ற நினைவு கொண்டு தான் அவர்கள் செயல்பட்டார்கள்.

1.நம் நாட்டு மக்கள் அனைவரும் தெளிந்திட வேண்டும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.தன் உடலையே அர்ப்பணித்து அதனின் நிலைகள் கொண்டு உயிர் நீத்துச் சென்ற
3.அந்த ஆன்மாக்கள் அனைத்தும் இங்கே காற்றிலே தான் சுழன்று கொண்டு இருக்கின்றது.

இன்றைய நிலையில் சுதந்திர வேட்கையான உணர்வுகள் நம் நாட்டிலே அற்றுப் போயிருப்பதால் நமது நாடு... நமது மக்கள்... நமது சகோதரர்கள்...! என்று எண்ணிச் செயல்பட்ட அந்த உயிரான்மாக்கள்
1.மறு பிறவி எடுக்க முடியாத நிலைகளிலும்
2.இன்னொரு உடலுக்குள் புகுந்து
3.அவர்கள் கண்டுணர்ந்த நல் உணர்வுகளை வழி நடத்திடும் நிலையும் இல்லாதே போய் விட்டது.

அதே போன்று ஒருவருக்கொருவர் பிரித்தாளும் நிலைகளில் இருந்து மக்களைக் காத்திட வேண்டும் என்ற எண்ணங்களை ஓங்கி வளர்த்துக் கொண்ட மகாத்மா காந்திஜியின் எண்ணத்தையும் எடுக்க நாம் யாரும் துணியவில்லை.

“நாம் எல்லாம் ஓர் இனம்...! நம் நாட்டைக் காத்திட வேண்டும் என்ற நிலையில் உயிர் நீத்த பகத்சிங் போன்ற ஏனைய எத்தனையோ பேர் இருந்தாலும் அவர்களைப் போல எண்ணங்கள் கொண்டுள்ளோரும் இன்று யாரும் இல்லை.

அவர்களை ஒத்த எண்ணங்கள் இருந்திருந்தால் அந்த உயிர் நீத்தோரின் ஆன்மாக்கள் அவர்களை ஒத்த எண்ணத்தைக் கொண்ட உடலுக்குள் புகுந்து
1.அவர்கள் செய்த வீரிய உணர்வின் நிலைகளில்
2.நம் நாட்டைக் காத்திடும் உணர்வின் எண்ணங்கள் இன்று ஓங்கி வளர்ந்து இருக்கும்.
3.காலத்தால் அத்தகைய நிலைகள் வழித் தொடராதபடி ஆகிவிட்டது.

நாமெல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று நாட்டுப் பற்றுடன் உயிர் நீத்த அந்த உயிரான்மாக்கள் இன்றும் பூமியில் பிறவியற்ற நிலைகள் சுழன்று கொண்டு இருக்கின்றது.

இருப்பினும் இன்று விஞ்ஞான உலகில் அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றலை வளர்த்துக் கொண்ட நிலையில் கதிரியக்கச் சக்திகளைப் பாய்ச்சப்படும் போது அந்தக் கதிரியக்கங்கள் நம்மைக் காத்திட்ட அந்த உயிராத்மாக்களின் உணர்வின் தன்மையை அழித்து விடுகின்றது.

ஆனால் அந்த உயிராத்மாக்கள் இன்னொரு மனித உடலுக்குள் புகுந்திருந்தால் மக்களைக் காத்திடும் வலு கொண்டு நல் வழி காட்டி இருக்கும். நம்மைச் சகோதர உணர்வுடன் வாழச் செய்து கொண்டிருக்கும்.

அப்படி இல்லாதபடி விஞ்ஞான அறிவால் அணுவைப் பிளந்து கதிரியக்கச் சக்தி கொண்டு
1.அதை வெடித்தவுடனே ஒரு நொடிக்குள் உடலை அழிப்பது போன்று
2.உயிராத்மாவுடன் சேர்த்துக் கொண்ட சிந்தித்துச் செயல்படும் நல்ல மனித உணர்வுகளையும் அழித்து விடுகின்றது.

அதனால் நம்மைக் காத்தருளிய அந்த உயிரான்மாக்கள் குறுகிய உணர்வு கொண்டு புழுவாகவும் பூச்சியாகவும் அடுத்துப் பிறக்கும் நிலை ஏற்படுகின்றது.

நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு அவ்வாறு உயிர் நீத்த உயர்ந்த எண்ணம் கொண்ட அந்த உயிராத்மாக்கள் விஞ்ஞான அறிவின் அடிப்படையிலே அணு விசையால் தாக்கப்பட்டு விஷம் தோய்ந்து விட்டது.

ஏனென்றால் மெய் ஞானிகள் காட்டிய நெறிகளை நாம் கடைபிடிக்காததனால் இந்திய மண்ணில் தோன்றிய அத்தகைய உயர்ந்த ஆன்மாக்கள் புழுவாகவும் பூச்சியாகவும் பிறக்கும் நிலை உருவாகி விட்டது.

விஞ்ஞான அறிவால் தீமைகள் வந்தாலும் அதிலிருந்து நம்மை மீட்டிடும் உணர்வாக மெய் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி உலக மக்கள் அனைவரும் மொழியால் மதத்தால் பிரித்தாளாதபடி “நாம் அனைவரும் சகோதரர்கள் என்றும்... ஆண்டவனின் பிள்ளைகள் என்றும்...! ஒன்றி வாழ்தல் வேண்டும்.

நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலையில்
1.மதமல்ல நமக்குச் சொந்தம்
2.இனமல்ல நமக்குச் சொந்தம்
3.மொழியல்ல நமக்குச் சொந்தம்
4.அனைத்து மக்களின் “நட்பு கொண்ட உணர்வே நமக்குச் சொந்தம்...! என்ற நிலைகள் கொண்டு
5.நாம் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும்.

உலகில் உள்ள ஏனைய மக்கள் உடல்களிலும் தீமைகளை உருவாக்கும் உணர்வுகள் விளையாது தீமைகளை அகற்றிடும் மெய்  ஞானிகளின் உணர்வுகள் உட்புகுந்து மனிதன் என்ற நிலையில் சிந்தித்துச் செயல்படும் அந்த உணர்வின் ஆற்றல்கள் வளர்ந்திட வேண்டும் என்ற நினைவினை ஒவ்வொருவரும் நமக்குள் ஆழமாகப் பதியச் செய்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் தீமைகள் அணுகாதபடி நம்மைக் காத்திட்ட நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட
1.அந்தத் தியாகிகளின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அனைத்து உயிரான்மாக்களையும்
2.நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்
3.அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

தீமையான உணர்வுகள் நம் யாரையும் அடிமைப்படுத்தாதபடி நல்ல உணர்வுகள் என்றுமே சீராக இயங்குபடியான சுதந்திரத்தை நாம் அனைவரும் பெறுவோம்.