ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 18, 2018

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “தன்னைப் பற்றிச் சொன்னது…!”


இன்றல்ல அன்றல்ல… இந்த உலகம் உதித்த நாள் முதற்கொண்டே உங்களுக்கும் எனக்கும் (நான் சந்தித்த எல்லோருக்கும்) தொடர்பு உண்டு. பல பிறவியிலும் உங்களுடன் நான் இருந்தேன்…. வழி வழியாகத் தொடர்பு உள்ளவர்கள் தான் நாம் எல்லோருமே…!

மனித உடலின் உருவம் பெற்றவுடனே இராமாவதாரத்திலேயே பெரும் தொடர்பு உடையவர்கள் நாம். இராமாவதாரத்தில் வான்மீகி முனிவனாகிவிட்டேன். வான்மீகியாக இருந்த அக்காலத்திலேயே நான் எய்திய தியான நிலையினால் நான் வான்மீகியில் விட்ட குறையினால் அடுத்த அவதாரம் எய்தினேன், கிருஷ்ணாவதாரத்திலும் என் ஆசை பூர்த்தி அடையவில்லை.

அரசனாகவும் அவதரித்தேன். ஆண்டியாகவும் அவதரித்தேன். இம்மக்களுக்கு உணர்த்திடப் பல கதைகள் வழியிலும் செப்பிவிட்டேன். பல பல அவதாரங்களையும் எடுத்திட்டேன்.

எந்த நிலையிலும் எந்த உடலுக்கும் சென்றிடும் பல பாக்கியம் பெற்றேன். பல உடல்களை எடுத்து அந்த உடல்களின் வழியில் பல உண்மை நிலைகளையும் உணர்த்தினேன். இந்த உலகம் முழுவதும் பல உடல்களை.. பல உருவங்களைப் பெற்றிட்டேன்.

1.பார்த்தேன்… பார்த்தேன்…! இந்த உலக மக்களின் உள்ளத்தையும் சுவாசத்தையும் பார்த்தேன்…!
2.பல பாவகள் செய்தவனையும் பார்த்தேன்.
3.பல பஜனைகள் செய்தவனையும் பார்த்தேன்.
4.பரந்தாமனைப் பழித்தவனையும் பார்த்தேன்.
5.உள்ள (மனது) நிலையில் பஜனை செய்தவனும் பரந்தாமனைப் பழித்தவனும் ஒரே சுவாச நிலையில் தான் இருக்கின்றார்களப்பா…!

இம்மனிதர்களை மாற்றத்தான் இக்காலம் தோன்றிய நாள் முதலே இக்கலியில் இங்கு வந்துள்ளேன் பாடம் புகட்ட…! கடைசியில் பைத்தியமாகவும் (ஈஸ்வரபட்டர்) இருந்தேன். பார்த்து எடுத்தேன் ஒரு சிஷ்யனை…! (வேணுகோபால சுவாமிகள் – ஞானகுரு).

அவன் வழியில் உணர்த்துகின்றேன் பல நிலைகளை…! இந்த உலகில் உள்ள பல பாகங்களிலும் ஒவ்வொரு வழியிலும் என் வழியை உணர்த்துகின்றேனப்பா. இப்பொழுது நான் யார் என்று புரிகிறதா…?