
பாச உணர்வின் இயக்கத்தைக் காட்டினார் குருநாதர்
ஒரு சமயம் யாம் வசித்த ஊரில் காலரா எனும் வியாதி பரவியது. ஊரில் உள்ள பலர் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்தனர். அது சமயம் எமக்குத் தைரியம் அதிகம் இருந்தது.
அதனால் காலரா
வியாதியால் தாக்கப்பட்டு இறந்த பலரை… அதாவது சுமார் 20 அல்லது 30 பிணங்களைத் தூக்கிச் சுடுகாட்டில் போட்டு
வந்தோம். ஆனால் அது சமயம் இது போன்ற பணிக்கு பயந்து யாரும்
வரவில்லை.
அப்போது எமது தந்தையைப் பெற்ற அம்மாவிற்கு அதாவது எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது. உறவினர்கள் சிலர் அவரைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய்விட்டார்கள்.
பாட்டிக்கு காலரா நோய் வந்துவிட்டது… அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்று யாம்
கேள்விப்பட்டதும் எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்படத் தொடங்கியது.
காலராவில் இறந்த 30 பிணங்களைத் தூக்கிப் போட்டோம்…
அப்பொழுது எமக்கு ஒன்றும் ஆகவில்லை. எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்து விட்டதே…! என்று எமது உணர்வில் சிறிது இடம் கொடுத்தவுடனே எமக்கும் காலரா வந்துவிட்டது.
குருநாதர் இந்தச் சம்பவத்தைப் பின்னாட்களில் எமக்கு நினைவுபடுத்தி…
1.நீ தைரியத்துடனும் வலிமையுடனும்
காலராவில் இறந்தவர்களைத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய்… உனக்கு ஒன்றும் ஆகவில்லை…!
2.ஆனால் உன்னுடைய
பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது என்று எண்ணியவுடனே “உனக்கும் காலரா நோய் வந்துவிட்டது…”
3.மனிதரிடத்தில் உணர்வு என்ன வேகமாக வேலை செய்கின்றது என்று பார்த்தாயா…? என்று
கேட்டார்.
ஆனால் காலராவால்
தாக்கப்பட்ட “பாட்டியின் மீதான எண்ணம் வந்தபின் தான்…” எமக்கும் காலரா நோய் வந்தது என்று குருநாதர்
சொன்ன பின் தான் யாம் தெரிந்து கொண்டோம்.
மதுரை சுப்பிரமணியபுரத்தில் ஒரு வாய்க்கால் இருக்கும். இப்பொழுது அந்த இடத்தில் மேம்பாலம் கட்டியிருக்கின்றார்கள். அந்த வாய்க்காலில்
தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுமே யாம் அந்த வாய்க்காலுக்குச் சென்று விட்டோம்.
வாய்க்காலில் கால் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்தால், அது நடக்காத காரியமாக இருந்தது. ஏனென்றால் வயிற்றுப் போக்கு நிற்காமல் போய்க் கொண்டிருந்தது.
பிறகு ஒருவாறாகச்
சமாளித்து ஹோட்டலுக்குச் சென்று “தயிர் சாதம் கொடுங்கள்…” என்று சொல்லித் தயிர் சாதம் வாங்கிச்
சாப்பிட்டோம். மனதில் யாம் ஒரு பயில்வான் என்று எண்ணித் தயிர் சாதத்தை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் தயிர் சாதத்தை
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு விட்டது.
ஹோட்டலுக்குள்ளேயே நடந்து விட்டது, பிறகு மறுபடியும் வாய்க்காலுக்கு வந்து அமர்ந்து அலசிக் கொண்டிருந்தோம்.
ஒரு சந்தர்ப்பத்தில் எமக்குத் தைரியம் சிறிது குறைந்தது. ஆனாலும் தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு “என்ன பண்ணிவிடும் பார்க்கலாம்…” என்று இருந்தோம்.
பசித்தால் இன்னும் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடலாம் என்று எண்ணினோம். ஏனென்றால் தயிர் குளிர்ச்சி…! தயிர் சாதம் சாப்பிட்டால்
சரியாகிவிடும் என்று இருந்தோம்.
அதனால் தயிர் சாதம்
வாங்கிச் சாப்பிட்டோம். ஆனால் சாப்பிட்ட சாதம் வயிற்றுப் போக்கால்
முழுது முழுதாக வெளியே சென்றது.
எமது கண் முழியெல்லாம் உள்ளே சென்று விட்டது.
சரி நாம் இந்தத் தண்ணீரிலேயே உள்ளே சென்று விடுவோம் போலிருக்கின்றது. பாட்டியையும்
பார்க்க முடியாது போலிருக்கின்றது… என்று எண்ணினோம். நடந்த நிகழ்ச்சி
இது.
காலரா வியாதி பரவியதால் ஊரை விட்டே நிறையப் பேர் ஓடிவிட்டனர். பண்டம் பாத்திரங்களை அப்படி
அப்படியே போட்டுவிட்டு தாம் தப்ப்பித்தால் போதும் என்று
ஓடிவிட்டனர்.
வாய்க்காலை ஒட்டி ஒரு பாலம் இருந்தது. அதில்
போய் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது அந்தப் பாலத்தின் வழியாக வண்டி
ஓட்டிக் கொண்டு ஒருவர் வந்தார்.
அவர் எம்மைப் பார்த்து… “என்னய்யா… இப்படி உட்கார்ந்திருக்கின்றாய்...?” என்று கேட்டார்.
காலராவில் இறந்தவர்களைத் தூக்கிப் போட்டு
வந்தேன்… இப்பொழுது எனக்கே காலரா வியாதி வந்துவிட்டது…! என்று அவரிடம்
கூறினோம்.
“அட.. நீ என் வண்டியில் ஏறி உட்கார்…” என்று கூறி எம்மை அவருடைய வண்டியின் பின்
சீட்டில் அமரச் செய்து அவருடைய கரும்புக் காட்டிற்கு
அழைத்துஅ சென்றார். கரும்பைப் பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொடுத்து “நன்றாக மூக்குப் பிடிக்கச் சாப்பிடு” என்று கூறினார்.
அவர் கொடுத்த கரும்புச் சாறைக் குடித்தபின் எமக்கிருந்த காலரா நோய், எங்கே போனதென்றே தெரியவில்லை. யாம் பூரண குணம் அடைந்தோம். காலராவிற்கு மருந்து கரும்புச் சாறு. இன்னும்
கரும்புச் சாறு கொடுக்கச் சொல்லிக் குடித்து விட்டு அங்கிருந்து வந்தோம்.
எமது உடல்நிலை குணமானவுடனே… “சும்மா இருக்கவில்லை…” ஊர் முழுவதும் சுற்றி மக்களிடம் யாசகம் கேட்டுப் பெற்றுக் காசு சேர்த்துக் கரும்புச் சாற்றை வாங்கி காலராவால் பாதிக்கப்பட்ட
அனைவருக்கும் கொடுத்தோம்.
ஏனென்றால் யாம் அப்பொழுது தேசிய இயக்கத்தில் இருந்ததால் பொது சேவையில் ஆர்வமுடன் ஈடுபட்டு “நீ குடி… நீ குடி…” என்று எல்லோருக்கும் கரும்புச் சாறு வாங்கிக் கொடுத்தோம்.
அதன் பின் காலரா நோயும் ஊரை விட்டே ஓடிப்போயிற்று.
இது ஒரு சந்தர்ப்பம்…! அப்பொழுது தான்
சொன்னார் குருநாதர்.
1.“டேய்…! உன்னைக்
காப்பாற்றுவதற்கு அப்பொழுது நான் தான்டா வண்டியில் வந்தேன்…”
2.நீ செத்துப் போவாய்… என்று எண்ணினாய், ஆனால் நீ சாகக் கூடாது என்று நான் வந்தேன்…! என்று கூறினார்.
எமக்கிருந்த காலரா நோய் நீங்கிய பின் ஆசனம் செய்வது பயில்வான் தனம் செய்வது என்பதெல்லாம் எம்மால் முடியாமல் போய்விட்டது.
யாம் சாதரணமாக மதுரையில் ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை உடல் பயிற்சிக்காக ஓடுவோம். ஓடியபடியே திருப்பரங்குன்றத்திலிருந்து
ஆண்டாள்புரம் வரை திரும்பி வருவோம்.
ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் 6 மைல் இருக்கும். அதன் பிறகு காலை 6 மணிக்கு மில்லிற்கு வேலைக்குப் போவோம்.
இது போன்று இருந்த யாம் காலரா நோய்
தாக்கியவுடனே எமக்கும் காலரா நோய் வந்துவிட்டது.
பாட்டியை எண்ணினாய்… என்ன ஆனது உனக்கு…? என்று கேட்டார் குருநாதர்.
1.குருநாதர் சொன்ன பின் தான் உணர்வின் இயக்கத்தை யாம் அறிந்தோம்.
பிறகு தான் எமக்குத் தெரிந்தது.
2.குருநாதர் சொல்லவில்லை என்றால் எமக்கு ஒன்றும் தெரியாது.
இறந்தவர்களை எல்லாம் தைரியமாகத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய். ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் தாக்கிவிட்டதே…! என்று
ஏங்கினாய், உடனே இதன் உணர்வு உன்னிடத்தில் என்ன
வேலை செய்தது…? என்று தெரிந்து கொண்டாயல்லவா…! என்று கேட்டார் குருநாதர்.
இது போன்ற உணர்வுகள் ஒவ்வொன்றையும் எமக்கு
அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.