ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2018

உங்கள் உயிர் தான் உங்கள் கஷ்டத்தைப் போக்குகின்றது...! எப்படி...?


எத்தனையோ நிலைகளிலிருந்து வரும் தீமைகளை நீக்குவதற்கு உங்களுக்கு உபாயமும் சக்தியும் கொடுக்கிறோம். அதை நீங்கள் தான் தியானத்தின் வழியாகச் சுவாசித்து எடுத்து உங்களுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பதிலாக என்னை நினைத்துக் கொண்டு “சாமி தான் (ஞானகுரு) செய்து கொடுப்பார்...! என்று என்னிடம் கஷ்டத்தைச் சொல்வதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

ஏனென்றால் நீங்கள் எண்ணியது எதுவோ உங்கள் உயிர் அதையே தான் உருவாக்கும். கஷ்டம் போக வேண்டும்... கஷ்டத்தைப் போக்க வேண்டும்...! என்று எண்ணினீர்கள் என்றால் உங்கள் உயிர் அந்தச் சக்தியை உருவாக்கித் தரும் என்று பல முறை சொல்கிறேன்.

1.இந்தக் காற்றில் எல்லாச் சக்திகளும் இருக்கிறது.
2.உங்களால் அதிலிருந்து பிரித்து எடுக்க முடியும்.
3.தீமையை உங்களால் போக்க முடியும்.
4.அந்த அருளைப் பெருக்கக்கூடிய தகுதி உங்கள் ஆறாவது அறிவுக்கு உண்டு.

இதைத் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி உங்கள் ஆறாவது அறிவின் சக்தியைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் நாம் எதை இச்சைப்பட வேண்டும்...?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைபட்டால் அது உடலுக்குள் செல்லும் போது கிரியையாகி அது ஞானத்தின் வழி கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சரியான வழியில் நடத்தும்.

தீமையை நுகர்ந்த அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் புருவ மத்தியில் எண்ணி விட்டால் தீமைகள் உள்ளுக்குள் போகாமல் தடுத்துக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால் நமக்கு முன்னாடி இருக்கும் ஆன்மாவில் வலுவாகச் சேர்கிறது.

1.தீமைகளையோ துன்பங்களையோ வேதனைகளையோ நாம் சந்திக்கும் பொழுதெல்லாம்
2.இப்படி எச்சரிக்கை பண்ணி விட்டால் தீமைகளை இழுக்கும் திறன் குறைகின்றது.
3.நம் சுவாசத்தின் வழி உடலுக்குள் தீமைகள் போவதில்லை.

உங்கள் ஆன்மா தூய்மை அடைகின்றது. அருள் சக்திகள் உங்களுக்குள் பெருகுகின்றது. தீமையை நீக்கும் இந்தப் பேராற்றலை உங்கள் உயிர் ஜீவ அணுக்களாக உடலுக்குள் உருவாக்குகின்றது.

உடல் நலம் பெறுவீர்கள். சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெறுவீர்கள். மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுவீர்கள்.

இதைத் தான் மடி மீது வைத்து வாசற்படி மீது அமர்ந்து நர நாராயணன் இரண்யனைப் பிளந்தான் என்று சொல்வது.