ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2018

"அகஸ்தியரின் உணர்வு கொண்டு தான்... இந்த உலகில் இனி நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடியும்...!"


உங்களை நீங்கள் திரும்பிப் பாருங்கள். கோபிப்பது நீங்களா...? வேதனைப்படுவது நீங்களா...? இல்லை... சந்தப்பத்தால் நுகரும் உணர்வுகள் தான் நம்மை இயக்குகிறது.

கஷ்டமான நிலைகளோ வேதனையோ நுகரப்படும் போதெல்லாம் அது உள் புகுந்து தீமைகளைச் சேர்த்திடாது தீமைகளை உருவாக்கிடாது அருள் ஒளி என்ற உணர்வை நீங்கள் நுகர்ந்து தீமைகளை அகற்றி அல்லது தனக்குள் இணைந்த தீமைகளை மாற்றி அமைத்தல் வேண்டும்.
1.அழுத்தமான எண்ணெய்ப் பிசுக்குகளை மண்ணெண்ணெய்யைக் (KEROSENE) கொண்டு தான் நீக்குகின்றோம்.
2.தண்ணீரைக் கொண்டு அதைக் கழுவ முடியாது.

இதை போல தான் அருள் ஞானி அகஸ்தியனின் உணர்வினை உங்களுக்குள் கலந்து அவன் கண்ட மெய் உணர்வின் தன்மையை நீங்கள் பெற்று உங்கள் உடலுடன் ஒட்டிய தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு விஞ்ஞான அறிவு கொண்டு இன்னது இன்னது என்று சொல்லி முழுமையின் நிலைகளை ஊட்டுவது போன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மையையும் அவன் தீமைகளை நீக்கிய மெய் உணர்வின் தன்மையையும் உங்களுக்குள் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே வருகின்றோம்.

உங்களுக்கு முன்னாடி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி உள்ளது. நஞ்சை ஒளியாக மாற்றி முழுமை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் நாளை வரும் எதிர்காலத்தில் இந்தத் தியானத்தில் உள்ளோர் உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் அருகில் உள்ளோர்களுக்கும் இதைச் சொல்லி அவர்கள் உணர்வுகளிலும் பதிவாக்க வேண்டும். பின்
1.இந்தத் தியானத்தின் பொது விதிப்படி
2.நீங்கள் வெளியிட்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவர்களையும் நுகரச் செய்து
3.அவர்களுக்குள்ளும் தீமையை வென்றிடும் உணர்வுகளை வளரச் செய்வது நம் தலையாயக் கடமையாக இருத்தல் வேண்டும்.

ஏன்…? உயிரே கடவுள். நுகர்ந்ததை உடலாகச் சிவமாக உருவாக்குகின்றது உயிர். ஈசன்  வீற்றிருக்கும் ஆலயம் அந்த உடல் என்ற நிலைகளில் ஒவ்வொருவரும் எண்ணி அங்கே பகைமை உணர்வு போகாதபடி உயர்ந்த ஞானத்தைச் சொல்லி அந்த உணர்வை அங்கே பதிவாக்கினால்
1.அந்த ஆலயத்தைப் பரிசுத்தமாக்க நம் உணர்வுகள் செயல்படும்.
2.அதே சமயத்தில் நாம் எண்ணும் இந்த உணர்வுகள் நமக்குள் தீமைகள் புகாது தடுக்க இது உதவும்.
3.நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள்.

உலகம் முழுவதும் நடப்பதை நாம் இருந்த இடத்திலிருந்தே டி.வில் பார்ப்பது போல் ஒவ்வொரு நிமிடமும் மெய் உணர்வுகள் வளர்ச்சியாகி உலகில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் பரவச் செய்து உண்மையின் இயக்கத்தை அறியும் நிலைகள் எல்லோருக்கும் வரும்.

இதைப் படித்துணர்ந்தோர் அனைவரும் அருகிலுள்ளோர் ஒரு கூட்டமைப்பாக இருந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை ஏங்கிப் பெறத் தியானிக்க வேண்டும்.
1.உலகில் படர்ந்துள்ள நச்சுத் தன்மை நீங்க வேண்டும்.
2.மக்கள் மத்தியில் இருளை அகற்றும் அருள் ஒளி பெற வேண்டும்.
3.உலக மக்கள் அனைவருக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
4.நாம் ஏகக்காலத்தில் ஏங்கிப் பெற்று இந்த உணர்வலைகள் ஏகோபித்த நிலையில் படரச் செய்யப்படும் போது
5.எந்தப் பகுதியில் இதைப் பெருக்குகின்றோமோ நாம் வாழும் அப்பகுதியில் எந்தத் தீமையும் வராது பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்தப் பூமியில் பரவியுள்ள அசுர உணர்வுகளை மாற்றிடவும் விஞ்ஞான அறிவில் வந்த தீமைகளை மாற்றிடவும் பக்தி என்ற நிலையில் மதத்தால் உருவாக்கப்பட்ட வெறி கொண்ட தாக்கும் உணர்வுகளை மாற்றிடவும் ஒவ்வொருவருக்குள்ளும் பேரருள் என்ற உணர்வினை உருவாக்க வேண்டும் என்று உங்கள் உயிரான ஈசனை வேண்டுங்கள்.

அந்தச் சக்தி ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உலக மக்கள் ஒவ்வொரு உடலை ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு அபிஷேகியுங்கள்.

இவ்வாறு அபிஷேகித்து உங்கள் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு அமுதாகக் கொடுத்து அருள் உணர்வை வளர்க்கும் ஊட்டச் சக்தியாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.

டாக்டர்கள் உடல் நலிந்தால் சத்துள்ள உணவை ஊட்டச் சத்தாக்கி உடலைப் பெருக்கச் செய்கின்றனர். அதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியை ஊட்டச் சக்தியாகக் கொடுக்கின்றோம். உங்களை அறியாமலேயே அதைச் சேர்க்கின்றோம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமயம் பூமியின் தன்மைகள் நீண்டு செல்லப்படும் போது அதன் உணர்வுகள் முட்டை வடிவாகி தலை கீழாகப் பிரளும் சந்தர்ப்பத்தில் அகஸ்தியன் அதனை மாற்றி அமைத்தான்.

அதனின் நிலைகள் தான் இன்று வரையிலும் இயங்கிக் கொண்டுள்ளது. ஆனாலும் இன்று விஞ்ஞான அறிவால் பூமியின் ஓசோன் திரை கிழிக்கப்பட்டு பல விஷத் தன்மைகள் இங்கே பரவிக் கொண்டிருக்கின்றது.

இதை நாம் மறுபடியும் சீரமைக்க வேண்டும் என்றால் அந்த அகஸ்தியன் உணர்வின் தன்மை கொண்டு தான் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்... ஏற்படுத்த முடியும்...!

கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படிச் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்து மனிதனாக உருவாக்கியது போல் மனிதனான பின் இந்த நச்சுத் தன்மையை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிய அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து
1.விஞ்ஞான அழிவிலிருந்து வரும் பேரழிவிலிருந்து மீள வேண்டும்.
2.இந்தப் பூமியின் நிலைகளைக் காத்திட வேண்டும்.

விஞ்ஞான அறிவிலிருந்து வரும் பேரழிவிலிருந்து உங்களை மீட்டு இனி பிறவி இல்லா நிலையை அடைய வேண்டும் என்ற இந்த ஆசையைத்தான் நீங்கள் வளர்க்க வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) பதிவு செய்ததை உங்களுக்குள்ளும் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.
1.காலம் நெருங்க நெருங்க...
2.உங்களை நீங்கள் காத்து...
3.உங்களைச் சார்ந்தோர் நிலைகளையும் காத்து...
4.அவர்கள் அவரைச் சார்ந்தோரைக் காத்திடவும்...
5.யாம் உபதேசித்த அந்த அகஸ்தியனின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகியது நிச்சயம் நினைவுறுத்தும்...!