ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2017

விண்ணிலிருக்கும் அகஸ்தியன் ஸ்டேசன் (FREQUENCY - அலைவரிசை)

சூரியன் இந்த பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்குகின்றது. அதே சமயத்தில் சூரியன் தனது அரவணைப்பில் ஓர் இயக்கச் சக்தியாகவும் மாற்றுகின்றது.

இதே போன்று அந்த  27  நட்சத்திரங்களின் உணர்வினைப் பேரொளியாக மாற்றிக் கொண்டிருக்கும் சூரியனைப் போன்று
1.அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்தறிந்து, 
2.நமது பூமி துருவத்தின் வழி கவர்ந்து நமது பூமிக்குள் பரவச் செய்யும்
3.உயர்ந்த சக்தியினைக் கவரும் ஆற்றல் பெற்றான்.

27 நட்சத்திரங்களும் அது தூசியாக மாற்றி சூரியன் கவரப்படும் பொழுது, அது போகும் பாதையில் நமது பூமியும் இதைக் கவர்ந்து நமது பூமிக்குள் இந்த நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதும்பொழுது இடி மின்னலாக மாறுகின்றது.

மேகக் கூட்டத்திற்குள் எதிர் நிலையான நட்சத்திரங்கள் மோதும்பொழுது இடி, மின்னலாக மாறி, கூடியுள்ள மேகங்களைக் கலைத்து மற்றொரு இடத்தில் மழையாக வருவதை அகஸ்தியன் அறிந்துணர்ந்தான்.

அவ்வாறு அந்தத் துருவத்தின் ஆற்றலை 27 நட்சத்திரங்களின் உணர்வினை அவனுக்குள் பெறப்பட்டு அவன் உடலில் பேரொளியாக மாற்றும் அணுக்களை வளர்த்து கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து அதை உருவாக்கிக் கொண்டார்கள்.


இந்த உடலை விட்டுச் சென்றபின் எதன் முகப்பை அறிந்துணர்ந்து தமக்குள் உருவாக்கினரோ
1.துருவத்தின் எல்லையாக அமைந்து
2.துருவ நட்சத்திரமாக இன்றும் அமைந்துள்ளார்கள்.

பிற மண்டலங்களிலிருந்து எடுக்கும் அந்த 27 நட்சத்திரங்கள் கவரும் அதிலிருந்து வரும் துகள்களைச் சூரியனைப் போன்று துருவ நட்சத்திரம் அதைக் கவர்ந்து பேரொளியாக மாற்றிக் கொண்டே உள்ளது.

சூரியன் ஒரு காலம் அழியலாம், உயிராகி உணர்வுகள் ஒளியானபின் இந்தச் சூரியக்குடும்பம் அழிந்தாலும் இந்தத் துருவ நட்சத்திரம் அழிவதில்லை அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் அழிவதில்லை.

இதைத்தான்  “வேகா நிலை” என்று மாமகரிஷிகளும் ஞானிகளும் காரணப் பெயர் வைத்துக் கூறுகின்றனர். பரிணாம வளர்ச்சியில் அகஸ்தியன் இருளை அகற்றி நஞ்சினை வென்று பேரொளியாக மாற்றியதைத்தான் “வேகா நிலை” என்பது.

துருவ நட்சத்திரம் நம் பிரபஞ்சம் மட்டுமல்ல அகண்ட அண்டத்தில் எத்தகைய இடி, மின்னல்கள் வந்தாலும் அதைத் தனக்குள் கவர்ந்து பேரொளியாக மாற்றிக் கொண்டே உள்ளது.

அதனைப் பின்பற்றிச் சென்றவர் அனைவரும், அது சமைக்கும் உணர்வுகளை உணவாக உட்கொண்டு இன்று “சப்தரிஷி மண்டலம்” ஆறாவது அறிவு ஏழாவது நிலையாகப் பெற்றுள்ளனர்.

இதைத்தான் ஞானிகள் “சப்தரிஷி மண்டலம்” என்று காரணப் பெயர் வைத்துக் கூறுகின்றார்கள்.

நமது வாழ்நாளில் எத்தகைய செல்வமோ நமது உடலோ கூட வருவதில்லை. எனவே அருள் ஞானிகள் பெற்ற உணர்வை நமக்குள் வளர்த்து விட்டால் இந்த உடலை விட்டுச் சென்றபின்
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு அழைத்துச் சென்று
2.நம் கூட வருவது நமது உயிர் ஒன்று மட்டுமே.

ஆகவே அந்த ஒளியின் உணர்வாக நம்மை வளர்த்து நாம் “வேகா நிலை” அடைகின்றோம், இது உயிரின் கடைசி நிலை.

ஆகவே நாம் அத்தகைய சக்தி பெற நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில்
1.அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற சக்தியும்
2.அகஸ்தியனாக இருந்த பொழுது கண்டுணர்ந்த விளைய வைத்த உணர்வுகளும்
3.துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து துருவனானபின் தனக்குள் அறிந்த வானுலக ஆற்றல்களும்
4.துருவன் கண்ட பிரபஞ்சத்தின் இயக்கமும் அகண்ட அண்டத்தின் ஆற்றலை அறிந்திட்ட நிலையும்
5.திருமணமானபின் துருவ மகரிஷியாகி இரு உணர்வும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி உருப்பெறச் செய்த உணர்வின் ஒளி அலைகளும் வெளி வந்ததைச்
6.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளதை நாம் அனைவரும் பெறுவோம்.

நமது பூமியில் இவ்வாறு அகஸ்தியன் கண்டுணர்ந்த வெளிப்பட்ட மூச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு நம் பூமியில் படர்ந்துள்ளதை நமது குரு எனக்குள் நுகரும்படி செய்தார்.

இன்று “TV”, ரேடியோக்களில் நாம் பார்க்கிறோம் என்றால் எதை எந்தெந்த ஸ்டேஷனில் ஒலிபரப்பு செய்கின்றனரோ அந்த அலைகளைக் குவித்து அங்கே ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றீர்கள்.

இதைப்போல அகஸ்தியன் தனக்குள் விளைய வைத்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.  இந்த ஸ்டேஷனை நீங்கள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நுகர்ந்தறிய வேண்டும் என்று உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.

உங்கள் எண்ணங்களை இவ்வாறு ஊடுருவிச் செலுத்தினால் அகஸ்தியமாமகரிஷியின் உணர்வின் ஒளி அலைகளைக் கவர்ந்து உங்களுக்குள் உயிர் உணர்த்தும்.

"அகஸ்தியருடன் தொடர்பு கொண்டு" அவரின் ஆற்றல்களை நீங்கள் பெறலாம்.