ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 17, 2017

உலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றிட “அகஸ்தியனின் உணர்வைப் பரவச் செய்யுங்கள்” – மரணமில்லாப் பெரு வாழ்வு பெற்றிடுங்கள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் “அணுவின் ஆற்றலை” அறியும் நிலை வந்ததால் தான் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயர் வந்தது.

அவன் வாழ்ந்து வளர்ந்து சுழன்று வந்த இடமான இந்த இடத்திலிருந்து தான் (பாபநாசம்) அதைப் பேசுகின்றோம்.

ஏனென்றால் அகஸ்தியரின் மூச்சலைகள் இங்கே பரவியுள்ளது. அவன் தாய் கருவிலே பெற்ற உணர்வின் தன்மை கொண்டு தாவர இனச் சத்தை அறியும் மலைப்பகுதியிலே சுற்றி வளர்ந்தான்.

1.பல கோடித் தாவர இனங்களை நுகர்ந்தான்.
2.தீமைகளை வென்றிடும் அருள் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்தான்.
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நிலைத்து நிற்கும் நிலையும்
4.இருளை வென்றிடும் உணர்வின் தன்மை தன் உடலில் வளர்த்துக் கொண்டான்.

(பாபநாசம்) இந்த மலைப்பாங்குகளில் தான் சுழன்றான்.

ஆகவே அவனுடைய நினைவாற்றலை நாம் கொண்டு வரப்படும் பொழுது இங்கே அமர்ந்துள்ள நாம் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது
1.உங்கள் கண்ணின் நினைவலைகள் அங்கே அகஸ்தியன் பால் செல்லும்.
2.அந்த உணர்வினை நுகரும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்கின்றது.
4.இரத்தத்தின் கலந்த அகஸ்தியனின் உணர்வுகள் கரு முட்டைகளாக விளையத் தொடங்கும்.

அந்த உணர்வின் தன்மை தனக்குள் இது எவ்வளவு நேரம் நீடித்து எண்ணுகின்றீர்களோ அந்த உணர்வின் கருவாக உருவாகும் தன்மைகள் உருப்பெறும்.

அவ்வாறு உருப்பெறச் செய்ய வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

நமது குருநாதர் இப்படித்தான் எம்மைக் காட்டிற்குள் அலையச் செய்து ஒவ்வொரு நிமிடத்திலும் உணர்ச்சிகளை ஊட்டி அதனின் பருவத்தில் இயங்கச் செய்து அந்த உணர்வுகளை எனக்குள் அணுக்கருக்களாக உருவாக்கும் உணர்வை உருவாக்கினார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டியது போன்று நீங்களும் அதைப் பெறவேண்டும். அந்த உணர்வின் அணுக்கருக்களாக உங்களுக்குள் விளைய வேண்டும். நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும்.

இந்த உலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றி அந்த அகஸ்தியரின் உணர்வை நீங்கள் பரப்ப வேண்டும்.

உலகில் எந்த மூலையில் இருப்பினும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும் அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இவ்வாறு
1.நம்மைக் காத்து
2.நம் குடும்பத்தைக் காத்து
3.எல்லோரையும் காத்திட வேண்டும்.
4.நம் நாட்டையும் இந்த உலகையும் காக்க வேண்டும்.
5.இந்த மனித இனத்தைக் காக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைதல் வேண்டும்.
6.மனிதன் என்ற உணர்வுகள் ஒன்று சேர்த்து இணைத்தால் தான்
7.”மரணமில்லாப் பெருவாழ்வு” என்ற நிலைகளில் வாழ முடியும்.

நீங்கள் அனைவரும் அந்த மரணமில்லாப் பெரு வாழ்வு வாழவேண்டும் என்ற ஆசையில் தான் இதை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

இதை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளுங்கள்.