ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 3, 2017

ஞானிகள் காளிக்கு முன் “புலியை” ஏன் வாகனமாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்? உன்னை நான் “தொலைத்துக் கட்டிவிடுகிறேன் பார்” என்பார்கள் - விளக்கம்

ஒரு நல்லதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் சாமி கும்பிடக் கோவிலுக்குச் செல்கின்றோம். ஆனாலும் சாமிக்குப் பலி கொடுத்தால் அது நம்மைக் காக்கும் என்ற எண்ணத்தில் சிலர் பலி கொடுக்கின்றார்கள்.

காளியைப் பார்த்து இந்தக் காளிக்குப் பலி கொடுத்தால் அந்த வலு கொண்டு “காளி என்னைக் காப்பாற்றுவாள்” என்ற இந்த உணர்வு தான் வருகின்றதே தவிர நல்லதை எண்ணி எடுக்க முடியவில்லை.

காளியின் சிலை கோபத்தின் சொரூபமாக இருக்கின்றது. காளியின் வாகனமோ புலி. அந்த மிருக குணம் என்ன செய்யும்? அது தான் நம்மை வழி நடத்துகிறது.

புலி மற்ற உயிரினங்களை இரக்கமற்றுத் தாக்கிக் கொன்று புசிப்பது போன்று நமது கோபத்தின் உணர்வுகள் நம் உடலிலுள்ள மனிதனாக உருவாக்கிய நல் உணர்வின் அணுக்களை இரக்கமற்றுத் தாக்கிக் கொன்று அடுத்து மனித சரீரத்தைப் பெறும் தகுதியை இழக்கச் செய்கின்றது.

1.காளியை வணங்கி வருபவர்களைப் பாருங்கள்.
2.கோபம் பயங்கரமாக வரும்.
3.எதை எடுத்தாலும் அவர்கள் சொல்லக்கூடிய… பேசக்கூடிய பேச்சு என்ன செய்யும்?
4.அவர்கள் சொல் மற்றவர்களை மடங்கச் செய்யும்.
5.அப்பொழுது இவர்கள் ஜெயித்த மாதிரிப் போவார்கள்.
6.உன்னைத் தொலைத்துக் கட்டிவிடுகிறேன் பார்…” என்பார்கள்

அவர்களிடம் யாராவது பேச முடியுமா என்றால் முடியாது. எல்லோரும் ஒதுங்கிக் கொண்டே போவார்கள். இந்த உணர்வுகள் கடைசியில் என்ன செய்யும் என்று அவர்களுக்கே தெரியாது.

“உன்னைத் தொலைத்துக் கட்டுகிறேன் என்று எண்ணும் பொழுது அந்தத் தொலைத்துக் கட்டும் உணர்வுகள் நல்ல குணத்தைத் தொலைத்துக் கட்டி அந்தக் காளியின் ரூபமாகக் கொதிப்படைந்து இரத்தக் கொதிப்பாக மாற்றி என்னால் முடியவில்லையே தலை சுற்றுகிறதே…” என்ற நிலை வருகிறது.

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டப்படுகின்றது. ஆகவே நாம் எதுவாக ஆக வேண்டும்?

ஏனென்றால் எத்தனையோ கோடிச் சரீரங்கள் எடுத்து இன்று மனிதனாக இன்று வந்திருக்கின்றோம். இதையெல்லாம் எங்கே கொண்டு போய் மாற்றும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஏனென்றால் குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் எமக்குக் கொடுத்த அனுபவத்தில் கண்ட பேருண்மைகளை உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

1.உலகம் எப்படி இயங்குகிறது என்றும்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு இயக்குகிறது என்றும்
3.,உயிரின் வேலை என்ன என்றும் சொல்கிறோம்.

அறியாமல் வரும் தீமைகளிலிருந்து விடுபட உங்களையெல்லம் துருவ நட்சத்திரத்துடன் நேரடியாக இணைக்கின்றோம். அதிலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கின்றோம்.

ஆகவே கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஒருவருக்கொருவர் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானித்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

கணவன் மனைவி இரண்டு உணர்வும் இவ்வாறு ஒன்றாகின்றது. உயிரின் உணர்வில் ஒளி பெறவேண்டும் என்று எண்ணும்பொழுது “ஒளியாகின்றது”. அதாவது
1.இரண்டு உடல்களிலிருந்து கருவாக்குகின்றது.
2.இரண்டு உயிரும் ஒன்றாகின்றது.
3.ஒன்றான பின் ஒளியாக மாறும் திறன் பெறுகிறது.