ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 18, 2017

“அத்வைதம்” – கண்களுக்குப் புலப்படாதது (சூட்சம சக்தி) கண்களுக்குப் புலப்படக்கூடிய பொருளாக எவ்வாறு உருவாகின்றது என்று உணர்த்தியவர் ஆதிசங்கரர்

சூட்சம நிலையில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் அலைகள் (சுவாசம்) அது எவ்வாறு செயல்படுகின்றது என்ற நிலையில் ஆதிசங்கரர் பாடுகின்றார்.

“ஐகிரி நந்தினி… நந்தித மேதினி…
விஸ்வ விநோதினி… நந்தினிதே…”
ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இருப்பது ஐந்து அறிவின் புலனறிவுதான். அதாவது ஒரு வெப்ப காந்தமும் அது எடுத்துக்கொண்ட உணர்வின் சத்தும் சேர்க்கப்படும்போது மூன்று.

ஒரு வெப்பத்திற்குள் மறைந்திருக்கக்கூடிய காந்தம் அது ஈர்க்கும் சக்தி. அந்த வெப்பத்தை உருவாக்கும் அணுவின் தன்மையை அது பொருளைக் கொடுத்தவுடன்
1.உருவாக்கவும் செய்கின்றது.
2.அது மற்றதை மறைக்கவும் செய்கின்றது.

ஒரு மரத்திற்குள் வெப்பம் இருக்கும்போது அது உருப்பெறுகின்றது.

மரம் புவியின் ஈர்ப்பைவிட்டு நகர்ந்து விட்டால் அதற்குள் இருக்கக்கூடிய சக்தியைக் காயச் செய்கின்றது. ஆக இரு வேலைகளைச் செய்யும்.

நமக்குள் ஒரு உணர்வின் தன்மையை மறைத்து மாய்த்துவிட்டு, ஒன்றைத் தனக்குள் எடுத்து அது வளர்க்கச் செய்யும்.

ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும்போது ஒரு கருவின் தன்மை மாய்த்துவிட்டு ஒரு சக்தியின் தன்மையை உருவாக்கும்.

இந்த வெப்பத்திற்கு – மூன்று சக்தி. அதைப்போன்று நாம் எந்தக் குணத்தின் தன்மையை எடுத்துக்கொண்டோமோ இந்த உணர்வின் சக்தி அணுவுக்குள் சேர்க்கப்படும்போது அணுவின் தன்மை அந்த மணத்தை வெளிப்படுத்தும்.

அதே சமயம் அந்த உணர்வின் தன்மை ஒரு பொருளுக்குள் சேர்ந்தவுடன் இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு இயக்கும். ஆக ஐந்து.
1.வெப்பம் – உருவாக்கும் சக்தி
2.காந்தம் – ஈர்க்கும் சக்தி
3.விஷம் – இயக்கும் சக்தி
4.மணம் – 1,2,3 சேர்ந்து பிறிதொன்றைக் கவர்ந்தது
5.உணர்வு – 1,2,3 கவர்ந்த மணத்தை அங்கே இயக்கமாக்குகின்றது.., உணர்ச்சி.

இதைப்போன்று மனிதனுக்குள் புலனறிவு ஐந்து.
“ஐகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ விநோதினி நந்தினிதே”
என்று சொல்லும்போது ஐந்து புலனறிவுகள்.

நாம் சுவாசிக்கும் இந்த உணர்வின் தன்மைகள் எந்த குணத்தைக் கொண்டு சுவாசிக்கின்றோமோ அதே உணர்வின் தன்மை தன் உயிருடன் சேர்க்கப்படும்போது “விஸ்வ விநோதினி”

“ஐகிரி நந்தினி” நம் உடலைச் சுற்றி வருகின்ற சுவாசத்தை நாம் சுவாசித்தவுடன் நாம் உயிரின் நிலைகளில் சுவாசித்து நம் உயிரில் பட்டவுடன் அதே ஐந்து உணர்வுதான் நந்திதமேதினி விஸ்வ விநோதினி.

நாம் சுவாசித்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை “சூட்சம நிலையாக” (கண்களுக்குப் புலப்படாமல்) ஆற்றல் மிக்க சக்தியாகச் செயல்பட்டு அது எவ்வாறு அணுக்களாக உடலாக விளைகிறது என்ற நிலையை
1.தனக்குள் உள் நின்று அதை உணர்ந்து
2.அத்வைதத்தின் தத்துவத்தை அன்று ஆதிசங்கரர் ஒலிபரப்பினார்

இயற்கையில் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி, எவ்வாறு உடலுக்குள் நின்று செயல்படுகிறதென்று உணர்த்தினார்.

1.சூட்சமமாக மறைவான நிலையில் இருப்பது
2.அது பல உணர்வுகள் சேர்த்து ஒரு பொருளாகும்போது,
3.திடப்பொருளாக எவ்வாறு ஆகின்றது என்ற
4.இந்த உண்மையினுடைய நிலைகளைத்தான் கண்டுணர்ந்தார் மெய்ஞானி ஆதிசங்கரர்.