ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2017

“சாப அலைகள்” எப்படி ஒருவரை அழிக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் - நடந்த நிகழ்ச்சி...!

வாடிப்பட்டியிலிருந்து ஒரு பையன் வந்தான். அந்தப் பையனுக்கு பத்து வயதுக்கு மேல் ஆனவுடன் உடலெல்லாம் அப்படியே சுருங்கிக் (முடங்கி) கொண்டே வந்துள்ளது.

இங்கே எம்மிடம் வந்தால் சரியாகும் என்று அழைத்து வந்திருந்தார்கள்.

முதலில் நன்றாக நடந்து கொண்டிருந்தான். இப்பொழுது இந்த மாதிரி ஆகிவிட்டது. உடலில் இப்பொழுது எதுவும் வேலை செய்யவில்லை என்றார்கள்.

அப்பொழுது நான் சொன்னேன். உங்கள் மூதாதையர் யாராவது இதே வயதில் கை கால் எல்லாம் அடித்து முடங்கி “அதனால் இறந்திருக்கின்றார்களா...!” என்றேன்.
1.யாராவது அப்படி இறந்திருந்தால்
2.அந்த மாதிரித்தான் “இதுவும் இருக்கும்” என்று சொன்னேன். போய்க் கேட்டு வாருங்கள் என்றேன்.

எனக்குத் தெரியாமல் அது எப்படி இருக்கும்? யாரும் இல்லையே… என்றார்கள்.

நன்றாக விசாரித்துக் கொண்டு வாருங்கள் அப்புறம்தான் என்ன என்று பார்க்க முடியும் என்று சொல்லி அனுப்பினேன்.

அப்புறம் அவரைச் சேர்ந்த ஆட்கள்.., “ஆமாம்… நீங்கள் சொன்ன மாதிரி நடந்திருக்கிறது” என்றார்கள்.

ஒரு பெண் இருந்தது. அவர்கள் ஆசைப்பட்டு ஒருவருக்கொருவர் ஏதோ ஆகவில்லை போலிருக்கின்றது.

அவர்கள் ஆசாரி. அதனால் அந்தப் பெண்ணைச் சுத்தியலில் அடித்துப் போட்டு நகையெல்லாம் கழட்டிக் கொடு என்று சொல்லி ஒரு குழியைத் தோண்டி அதிலே போட்டுக் கொன்று விட்டார்கள்.

“அடப்பாவிகளா…! என் குடும்பம் எப்படி இப்படி ஆனதோ உன் குடும்பமும் ஆகும்…” நான் வேதனைப்பட்டேனோ…, “உன் குடும்பமும் உருப்படியாகாமல் போய்விடும்” என்று அங்கே சாபமிட்டது.

அதற்குப் பின் ஒரு பெண் வாரிசு வந்தால் அந்தப் பெண் குழந்தை எங்கே போனாலும் கல்யாணம் ஆகி அந்த வயதானால் துடிக்கத் துடிக்க இறந்து போகும்.

ஆண் வாரிசு என்றால்  அந்தக் கை கால் முடங்கிக் கொண்டே வரும். அது எப்படிக் குறுகி இறந்ததோ அதே மாதிரி இறக்கும்.

இது கரு வழி. இது சாபம்.

நாம் நினைக்கின்றோம் ஒருவரை அடித்து நொறுக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று.
1.ஆனால் சாகும் பொழுது என்ன ஆகும்…?
2.அந்த அலைகள் எல்லாம் உடலுக்குள் வரும். 
3.இதிலிருந்து “யாரும்” தப்ப முடியாது.

நாம் நினைக்கலாம் எல்லாம் கெட்டிக்காரத்தனமாகச் செய்துவிட்டோம் என்று. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் மனிதனாகப் பிறந்த பின் எப்படியெல்லாம் ஆகின்றோம் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதைப் பற்றி அதிகமாகவும் சொல்ல முடியாது. சொன்னால் பிறகு பயந்து போய்விடுவீர்கள்.

ஏனென்றால் “தவறு செய்துவிட்டால்… அதன் பின்பு என்ன ஆகும்…” என்று ஒரு உதாரணத்திற்கு உங்களுக்குத் தொட்டுத் தொட்டுக் காண்பிக்கின்றோம்.

எல்லாம் இப்பொழுது மன தைரியமாக இருப்பீர்கள்.

ஆனால் வீட்டில் சிறிது குறை என்றால் அது கடினமாக ஆகிவிட்டால் “உன்னால் தான் இப்படி ஆகிறது” என்று ஒருவருக்கொருவர் சாபமிடும் நிலைகள் ஆகின்றது.

அதிகமாகி வளர்ந்துவிட்டால் அடித்துக் கொல்லும் நிலைக்கே வந்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிய அந்த மகரிஷிகளைப் பற்றிய உணர்வுகளைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு நொடியிலேயும் உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம்  ஞாபகப்படுத்துகின்றோம்.

ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டதென்றால் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த உணர்வை வலுவாக்கிய பின் மகரிஷிகளின் அருள் சக்தியால் “அவர்களுக்கும் நல்லதாக வேண்டும்..” என்று சொல்லிப் பழக வேண்டும்.

உங்கள் ஆன்மாவைத் தூய்மை செய்யும் ஆயுதத்தைதான் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

குருநாதர் எமக்குக் கொடுத்தார். அதே மாதிரி உங்களைப் பக்குவப்படுத்தி ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம்.
1.இது வாக்கு தான்.
2.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.