ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2017

“சீதா கடைசியில் மண்ணுக்குள் போகிறது” ஏன்...?

1.பல தாவர இன சத்துக்களை எடுத்து வளர்ந்து மனிதனாக வளர்ந்தாலும்
2.உயிருடன் ஒன்றி உணர்வுகள் ஒன்றாகி
3.வேறொரு உடலை உருவாக்குகின்றது.
4.இது இயற்கையின் நியதி.

ஆனால் அதே சமயத்தில் எந்தத் தாவர இனத்தை எடுத்து உணர்வுகள் உட்கொண்டதோ மீண்டும் பூமிக்குள் அடைகிறது என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றது.

எதன் உணர்வைத் தன்னுடன் சேர்த்ததோ அது உயிருடன் ஒன்றி அந்த உணர்வுக்கொப்ப அது மாறுகின்றது.

சீதாவோ தன் கணவனின் உணர்வு கொண்டு கலக்கமில்லாத உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின்
1.எந்த உயிரின் பண்பைத் தனக்குள் எடுத்ததோ
2.அந்தச் சொர்க்கம் என்ற நிலைகளைத் தன் உணர்வின் உறுதி கொண்டு
3.ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இணைந்தது என்பதை
4.சொல்லாமல் சொல்லிக் காட்டுகின்றனர்.

சீதா என்ற நிலை இராமனிடம் பட்ட துன்பங்களும் அது எண்ணாதபடி அதன் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது எத்தனையோ இன்னல்களை இராவணனிடத்தில் பட்டது.

சீதா பட்ட இன்னல்கள் இன்னது என்று சொல்ல முடியாது.

அத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக் கொண்டு உயிரின் உணர்வின் தன்மையை உண்மையை நிலைப்படுத்திய அந்த உணர்வுகள்
1.இந்த உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா
2.சொர்க்கத்தை அடைந்தது.
3.இந்த உடல் என்ற சீதா பூமிக்குள் மண்ணைப் பிளந்து
4.மீண்டும் மண்ணுடன் மண்ணாக மற்றவைகளுக்கு உணவாக மக்கியே விட்டது.

இதை இராமாயாணத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

அதை இன்னும் நமக்குப் பக்குவப்படுத்தி ஞானிகள் காட்டிய நிலைகளை அவரவர்கள் சுயநலன்களுக்காக அரசர் வாழ்ந்த நிலைகளில் சித்தரித்துவிட்டார்கள்.

தன் அரசு தன் ஆட்சி என்ற நிலைகளில் மக்களைத் தனக்குள் அடிமைப்படுத்தப் பயன்படுத்திக் கொண்டார்கள். உண்மையின் உணர்வை நாம் அறியப்படும் நிலைகள் காலம் காலமாக மறைந்து விட்டது.

இப்பொழுது அதை குருநாதர் காட்டிய வழிகளில் யாம் வெளிப்படுத்தினாலும் இது என்ன புதிராக இருக்கின்றது என்ற எண்ணத்தில் பார்க்கின்றார்கள்.

இராமன் என்பது எண்ணங்கள். சீதா என்பது சுவை. சீதாராமன் தான். இராமாசீதா அல்ல. இராவணன் என்பது நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எடுத்துக் கொண்ட ஒலிகள் (நாதங்கள்). லவ குச என்பது நஞ்சை வென்று உயிருடன் ஒன்றி ஒளியான “விண்ணுலக ஆற்றல்”

நாம் கவர்ந்து கொண்ட உணர்வின் சுவை உயிரிலே பட்டபின் நாதங்களாக… உணர்ச்சிகளாக… எண்ணங்களாக அது எப்படி இயக்குகின்றது”  அந்தந்த எண்ணத்தின் இயக்கமாக நம் வாழ்க்கை எப்படியெல்லாம் அமைகிறது? பல பல மாற்றங்கள் ஆகிக் கொண்டேயிருக்கின்றது.

ஆக மனித உடலின் கடைசி முடிவையும்… உயிராத்மா அடைய வேண்டிய எல்லையையும்… இராமாயணத்தில் வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார்.
1.உடல் அழியக்கூடியது. உடல் நமக்குச் சொந்தமல்ல.
2.உயிர் என்றும் அழிவதில்லை. உயிர் தான் நமக்குச் சொந்தமானது.

விண்ணிலிருந்து வந்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சத்துகளை எடுத்து பல உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகின்றது.

மனிதனான பின்பு அனைத்தையும் அறியும் அறிவாக ஒளியின் உணர்வாக வளர்ந்து “விண் செல்ல வேண்டும்” என்பதே நம் சாஸ்திரங்கள் நமக்கு உணர்த்திய பேருண்மைகள்.