ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 19, 2017

காசைக் கொடுத்துவிட்டு கஷ்டங்களையும் துன்பங்களையும் வேதனைகளையும் முறையிடும் இடமல்ல ஆலயம் – அதையெல்லாம் நீக்கும் ஆற்றலைப் பெற்றுத் தரக்கூடிய “ஞானப் பொக்கிஷங்கள் ஆலயங்கள்”

ஆலயங்களிலே சிலை வைத்திருக்கின்றார்கள் என்றால் அந்தச் சிலைகளுக்குள் 1008 குணங்களின் தன்மையைக் காவியமாகப் படைத்திருக்கின்றர்கள் ஞானிகள்.

அந்தக் குணத்தின் சக்தியாக அந்தத் தெய்வம் என்ன செய்கிறது என்று காட்டுகின்றார்கள்.

ஆலயத்திலுள்ள தெய்வச் சிலைகளை நாம் பார்க்கும் பொழுது
1.தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும்
2.அதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் மனிதனுக்குள் விளைய வைத்த ஒரு உணர்வின் தன்மையை ஒரு மனிதனுக்குள் இயக்கப்படும்போது அது எவ்வாறு இயக்குகிறது என்பதை அறிந்துணர்ந்து ஆற்றல்மிக்க சக்தியாகப் பெற்று அந்த ஆற்றல் என்ன செய்கிறது என்று அங்கே ஆலயத்தில் உணர்த்தினார்கள்.

பல ஆற்றல்களைப் பெற்றுத் தன் உடலுக்குள் ஒளியான உணர்வுகளை விளைய வைத்து விண் சென்ற அந்த மெய் ஞானிகள் சமைத்த அனுப்பிய உணர்வின் அலைகள் இந்த ஆலயங்களில் உண்டு.

ஞானிகளின் ஆற்றல்கள் இன்றும் பரவிக் கொண்டுள்ளது. அதை நாம் பெறுவதற்காகத்தான் ஆலயங்களில் தெய்வங்களாகச் சக்தியாகக் காட்டினார்கள்.

நமக்குள் செயல்படும் “உணர்வின் (அணுவின்) செயல் இது தெய்வம்” என்று மனித உடலின் உணர்வினுடைய நிலைகளை அதைச் “சக்தியாக – பெண்மையாக” ஆலயங்களில் உருவாக்கிக் கொடுத்தனர்.

1.அந்தக் குணத்தை நீ பெற்று... “தெய்வமாகு...” என்று தான் சொன்னார்கள்.
2.யாரும் கோவிலுக்குச் சென்று இவ்வாறு வேண்டுவது இல்லை.

அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுகிற பொழுது அந்தத் தெய்வம் நல்லது செய்கிறது.

ஆலயங்களில் காட்டியபடி அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் மகரிஷிகளின் அருள் ஒளியை நாம் பெற்றோம் என்றால் அந்தக் குணத்தின் தன்மை கொண்டு நாம் தெய்வமாகின்றோம்.

ஆகவே “நீ நன்றாக இருப்பாய்.., நல்ல நிலையில் இருப்பாய்.., அனைவரும் மகிழ்ந்த நிலை பெறவேண்டும்” என்று எண்ணி அந்த ஆலயத்தில் வேண்டினால் நல்லதாக இருக்கும்.

ஆனால் கோவிலுக்குச் சென்று
1.என் பிள்ளைக்காக நான் பாசமாக இருக்கின்றேன் என்ற நிலையில்
2.“என் பிள்ளை இப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றானே... தாயே...!” என்று வேதனைப்பட்டு
3.அதை நாம் சுவாசித்தால் எப்படி இருக்கும்?
4.பாலுக்குள் விஷத்தை ஊட்டி
5.அந்தப் பாலைக் குழந்தைக்கு ஊட்டினால் எப்படியோ அப்படித்தான் இது அமையும்.

ஏற்கனவே விஷமாக இருப்பதால் தான் குழந்தை சிரமப்படுகின்றது.

கோவிலுக்குச் சென்று அங்கே இன்னும் கொஞ்சம் வேதனைப்பட்டு அந்த விஷத்தை உட்கொண்ட நிலையில் நம் கண் ஒளிகளிலும் ஆக புலனறிவு ஐந்திலேயும் பாய்ச்சினால் சரியாகுமா...! ஆகாது.

அதி வேகமாக நீங்கள் வேதனைகளைக் கூட்டி அதே உணர்வின் நஞ்சை உங்கள் உடலுக்குள் சேர்த்துக் கொள்கின்றீர்கள். இது தான் அங்கே நடக்கின்றது.

இப்படிச் சுவாசிக்கும் நஞ்சான உணர்வுகள் அனைத்தும் உயிரிலே பட்டவுடன் அது பிரம்மமாக நம் உடலாகச் சிருஷ்டித்துவிடுகின்றது. அந்த வேதனையான உணர்வுகள் குழந்தையை இயக்கி இன்னும் கொஞ்சம் அவனைக் கஷ்டப்படச் செய்யும்.

இதைத்தான் எல்லா மகரிஷிகளும் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

1.நம் உடலின் தன்மையை ஆலயமாக அமைக்கப்பட்டு
2.அந்த ஆலயத்திற்குள் குணத்தின் சிறப்பின் தன்மையை அங்கே வெளிப்படுத்திக் காட்டினார்கள்.
3.தெய்வ குணங்களை நாம் நுகரும்படி அதைச் சுவாசிக்கும்படிக் காட்டினார்கள்.

ஆனால் அரசர் காலங்களில் இதையெல்லாம் மறைத்துவிட்டு சரணாகதி தத்துவமாக தெய்வங்களுக்கு நீ இதைப் படைத்தால் அது நமக்குச் செய்யும் என்று காட்டி “நல்லதைப் பெறும் மார்க்கத்தையே” தடைப்படுத்திவிட்டார்கள்.

அதன் வழிகளில் தான் இன்றும் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

காசைக் கொடுத்துவிட்டு... சாமியிடம்... “நீ எதை எனக்குச் செய்து கொடு” என்ற நிலைகளில் தான் நம்முடைய பக்தி இருக்கின்றது.

சற்று சிந்தித்துப் பாருங்கள்...!

ஞானிகளால் அமைக்கப்பட்ட ஆலயங்கள் சாதாரணமானவை அல்ல. அருள் ஞானத்தை மனித குலத்திற்கு வாரி வழங்கும் “பொக்கிஷங்கள்” தான் ஆலயங்கள்.