ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 27, 2017

கூட்டுத் தியானம் ஏன் செய்ய வேண்டும்...?

தனித்து நாம் தியானமிருந்து சக்திகள் ஆற்றல்கள் அனைத்தையும் பெறவேன் என்றால்
1.சாதாரண மனிதனுக்கு அத்தகைய வலு இல்லை
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதியில்லை.

நாம் தனி மனிதனாக அமைந்தாலும் கூட்டுத் தியானங்களில் இருந்து அதன் துணை கொண்டு வலுவான எண்ணத்தின் உணர்வு கொண்டு நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அப்படி வலுவான பின்தான் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் எண்ணும் எண்ணங்கள்
1.மகரிஷியின் அருள்சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால்
2.”அந்த நிமிடமே…” கவரும் தன்மை வருகின்றது.

ஆகவே ஒரு சமயம் கூட்டுத் தியானத்தில் இருந்துவிட்டு அடுத்துத் தனித்த நிலைகளில் நாம் பெறுவோம் என்ற  நிலைகள் இல்லாதவாறு அடுத்தடுத்து வாரத்தில் ஒரு நாள் இந்தக் கூட்டுத் தியானங்கள் செய்து “ஒவ்வொரு நிமிடமும்… நமக்குள் செருகேற்றும் தன்மையை…” வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வாரத்திலும் ஆங்காங்கு அன்பர்கள் பத்து பேரானாலும் இருபது பேரானாலும் கூட்டுத் தியானங்கள் செய்து பழகிக் கொள்ளுங்கள்.

அதே சமயத்தில் மாதத்தில் ஒரு நாள் “பௌர்ணமி அன்று” மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் வருபவர்கள் இங்கே கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ளலாம்.

இங்கே வர இயலாதவர்கள் தன் அருகிலே பத்து நூறு பேர் இருந்தாலும் அங்கே பௌர்ணமியன்று ஒரு கூட்டமைப்பாக இருந்து இதே போல் கூட்டுத் தியானங்கள் இருக்க வேண்டும்.

அவ்வாறு கூட்டுத் தியானமிருந்து உங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை
1.உங்கள் வலுக்கொண்ட எண்ணத்தால்
2.அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு
3.எளிதில் விண் செலுத்த முடியும்,
4.”மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தினால்தான்”
5.உங்கள் எண்ணம் துரித நிலைகள் கொண்டு விண்ணை அடையும்.

அதன் மூலம் விண் சென்ற அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் பூமியில் படர்ந்திருப்பதை எளிதில் கவர்ந்து நமக்குள் அந்த உரமாகச் சேர்த்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு நமது வாழ்க்கையில் இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளை அகற்ற “அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாம் பெற வேண்டும்” என்று ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நமக்குள் செலுத்துவோம் என்றால் தீமைகள் அனைத்தும் அகலுகின்றது.

அதே சமயம் நம் எண்ணம் கூர்மையாக விண்ணை நோக்கிச் செல்கின்றது. நமது உடலுக்குள் அந்த மகரிஷியின் அருள் சக்தி “உரமாக” வலுப் பெறுகின்றது.

நாம் உடலுடன் (உயிருடன்) இருக்கும் “இந்தச் சிறிது காலத்திலேயே” இந்த உடலுக்குள் நாம் அந்த மகரிஷியின் அருள் சக்தியை வலுப் பெற்றதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த உடலை விட்டு உயிரன்மா சென்றால் “எந்த மகரிஷியின் எண்ணங்களை…” நாம் அடிக்கடி எடுத்தோமோ அவர் ஒளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஒளி நட்சத்திர சப்தரிஷி மண்டலங்களுடன் நம் உயிரான்மா இணைந்துவிடும்.

அங்கே இன்னொரு உடல் பெறும் உணர்வலைகள் கரைந்து அந்த ஒளியுடன் ஒளியாக நாம் என்றும் நிலைத்து நின்று பத்தாவது நிலையான “கல்கியின் நிலையை” அடைகின்றோம்.

தனித்து இந்தச் சக்தியை எவரும் பெற முடியாது. அதை வளர்க்கவும் முடியாது. கூட்டமைப்பாக இருந்து “எல்லோரும் பெறவேண்டும்…” என்ற உணர்வை இணைத்தால் தான் அதைப் பெறும் தகுதி கிடைக்கும்.