ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 29, 2017

முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய “தலையாயக் கடமை”

நாம் சிறு வயதினராக இருக்கும் பொழுது நமது முன்னோர்கள் நாம் அனைத்துத் துறையிலும் சிறந்து இருக்க வேண்டும் என எண்ணி நமக்கு பல வகைகளிலும் பாசத்தைக் காட்டி நல் அறிவினை ஊட்டி வளர்க்கின்றனர்.

ஆனால் நமது முன்னோர்கள் நமக்கு எடுத்துச் சொல்லும் உயர்ந்த சிறந்த அறிவுரைகளை ஒதுக்கிவிட்டு மாற்றுக் கருத்துக்களில் நாட்டம் செலுத்தி அதன் வழி செல்லும் பொழுது நமது முன்னோர்கள் வேதனை அடைகின்றனர்.

நாம் சொன்னபடி செய்யவில்லைதவறான பாதையில் செல்லுகின்றானே..., “உருப்படுவானா...?” என்று கோபமும் வேதனையும் கலந்த சொற்கள் அவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன.

நாம் எல்லா நிலைகளிலும் உயர்ந்து சிறப்புற வேண்டும் என்ற அவர்களுடைய பாச உணர்வுகளும் நம்மிடத்தில் பதிவாகின்றன.

அதே சமயத்தில் அவர்கள் சொல்லை மதிக்காது செயல்பட்ட நிலைகளில் அவர்கள் வெளிப்படுத்திய கோப உணர்வுகளும் நம்மிடத்தில் பதிவாகின்றன.

ஒரு செடி எதிர்மறையான சூழ்நிலையைச் சந்திக்கின்ற பொழுது, தன்னுடைய வளர்ச்சியை இழக்கின்றது.

அது போன்றே நமது முன்னோர்கள் நம் மீது பற்று பாசத்துடன் இருந்தாலும் அவர்களுடைய அறிவுரைகளை மறுத்து இயங்குகின்ற பொழுது அவர்கள் கோப உணர்வு கொண்டு நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம் சலிப்பு  வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் அவர்களிடம் உருவாகின்றன.

இவ்வாறு நம் மீது பாசமாக இருக்கும் அவர்களின் உணர்வின் எண்ண உணர்ச்சியின் அணுத்தன்மையில் இப்படிப் பாசம் கோபம் ஆத்திரம் என உணர்வுகள் மாறி மாறி அமைவது என்பது அவர்களின் உடலில் சீரற்ற நிலைகளை உருவாக்கி நோய்களை" அவர்களிடத்தில் உண்டாக்கிவிடுகின்றது.

மேலும் அவர்களுடைய ஆன்மா சீரற்ற நிலையில் நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம் கலக்கம் வேதனை சஞ்சலம் என்ற உணர்வுகளை அவர்கள் சுவாசிக்க நேர்ந்து அவர்களுடைய சரீரத்தில் இத்தகைய எண்ண அலைகளே அதிகமாக விளைகின்றது. நல்ல உணர்வுகள் விளைவதே இல்லை.

உதாரணமாக நல்ல வயலைப் பண்படுத்தி, நல்ல விதைகளை ஊன்றினாலும் அதனிடையே களைகள் உருவாகி ஓங்கி வளர்கிறது.

அதைப் போன்றுதான் பாச உணர்வுகள் உள்ள இடத்தில் சிறிதளவு வெறுப்பிற்கு இடமளிக்கும் பொழுது அங்கே வெறுப்பான உணர்வுகளே அதிகமாகி பாச உணர்வுகளை மங்கச் செய்துவிடுகின்றன.

இவ்வாறு நம் குடும்ப வாழ்க்கையில் வேதனையுறச் செய்யும் சந்தர்ப்பங்களை அறிந்து அவற்றை விலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் முன்னோர்களின் உயிரான்மா நம் குலத்தெய்வமான அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து என்றும் நிலையான ஒளிச்சரீரம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி உந்தித் தள்ள வேண்டும்.

நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்என்ற கீதையின் தத்துவப்படி   நம் முன்னோர்கள்  எதைப் பெறவேண்டும் என்று ஏங்குகின்றோமோ அதனை நாமும் பெறுகின்றோம். 

நம்முடைய முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தின் ஒளிவட்டத்தில் கலந்து நிலையான ஒளிச்சரீரம் பெறவேண்டும்  என்று நாம் எண்ணி ஏங்குகிற பொழுது நமது முன்னோர்களும் ஒளிச்சரீரம் பெறுகின்றனர்.

அதனின் பயனாக நாம் நம் உணர்வின் சக்தியை விண்ணை நோக்கிச் செலுத்தினோமானால் நம் முன்னோர்களின்  உயிரான்மாக்களை விண் செலுத்த உதவிய  நம்முடைய நினைவுகள் துரித நிலையில் இயங்கி  அங்கே செல்ல ஏதுவாகும். அதன் மூலமாக
1மகா ஞானிகளின் உணர்வைத் துரித நிலையில் நாம் ஈர்க்கவும்
2.நம்மிடத்தில் வருகின்ற தீமைகளை அந்த விநாடியே அகற்றவும்
3.நமக்குள் உணர்வின் சக்தியைப் பழக்கவும்
4.மெய்ஞானிகளின் உணர்வை நம்மிடத்தில் வளர்க்கவும்
5.அந்த உணர்வுகள்  ஒளியின் சரீரமாக வளரவும் உதவி செய்கின்றன.

மேலும் ஒளி கண்டு இருள் விலகுவது போன்று அங்கே இருளுக்குள் இருக்கக்கூடிய பொருள் தெரிவது போன்று  நமது வாழ்வில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுகின்றோம்.

சப்தரிஷி என்பவர் யார்? 

ஆறாவது அறிவின் துணை கொண்டு தீயவுணர்வுகளை மாய்த்து நல் உணர்வுகளை வளர்க்கச் செய்யும் தன்மை வாய்ந்த ஏழாவது அறிவினை தன்னிடத்தில் பெற்றவர்களைச் சப்தரிஷி என்று நாம் அறிந்துணர முடியும்.

அத்தகைய தன்மை வாய்ந்த சப்தரிஷிகளின் சிறப்பை நம் முன்னோர்கள் பெற வேண்டும் என்று  நாம் தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானிக்கும் பொழுது நாமும் அத்தகைய ரிஷியின் தன்மையைப் பெறுகின்றோம். சிறிது காலத்திற்காவது  நமது முன்னோர்களை எண்ணித் தியானித்திடும் பொழுது அவர்கள் சப்தரிஷி தன்மை பெற்று விடுகின்றனர்.

அதைத் தொடர்ந்து நீங்களும் ரிஷித்தன்மையைப் பெறுகின்றீர்கள். நீங்கள் ரிஷியாக வேண்டும் என்றால் முதலில், உங்கள் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்என்பதை உணரவேண்டும்.

விஞ்ஞானி ஒரு இராக்கெட் மூலம் செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்புகின்றார். பின் அந்தச் செயற்கைக் கோளின் துணை கொண்டு விண்ணின் நிலையைப் பூமியில் பெறுகிறார்.

அது போன்று நாம் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை நமது எண்ணத்தின் வலுக் கொண்டு விண்ணிற்கு அனுப்பும் பொழுது அந்த ஆன்மாக்கள் பெறும் ஆற்றலை நாம் பெறமுடியும்.

பிறகு அருள் ஞானிகளின் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா. எங்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் ஈஸ்வரா. நாங்கள் பார்ப்பவரெல்லாம்  நலம் பெறவேண்டும் ஈஸ்வரா என்று நாம் எண்ணி இந்த உணர்வின் சக்தியை நம்மிடத்தில் வளர்க்க வேண்டும். 

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் அன்னை தந்தை காட்டிய நல்வழி அனைத்தையும் செயலாக்கி அவர்கள் எண்ணிய நல் உணர்வுகள் எங்களுக்குள் விளைந்து நாங்கள் பார்ப்பதெல்லாம் நலமும் ஆக்கமான எண்ணங்கள் எங்களுக்குள் விளைந்திட வேண்டும்.

எங்கள் சொல்லிலும் செயலிலும் புனிதம் பெறும் தன்மையாகவும் அவர்கள் காண்பித்த நல்வழியின் நிலைகள் எங்களுக்குள் ஆளவும் வளரவும் வேண்டுமென நாம் தியானிக்க வேண்டும்.

ஆகவே நம்முடைய முன்னோர்களின் நினைவு நாட்களைக் கொண்டாடி விட்டோம். அவர்களுடைய உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையவேண்டும் என்று தியானித்து விட்டோம்.

அதன் மூலம் அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றி விட்டோம் என்று கருதுவோமேயானால் அதன் பிறகு நாம் வளர்வதே இல்லை. பதிலாக
1.நம்மிடத்தில் முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்திய நினைவுகளும்
2.அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்ற ஏக்கமும்
3.நம்மிடம் என்றும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.