ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2017

நெருப்பைக் கண்டுபிடித்து வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தை முதலில் ஏற்படுத்திவன் அகஸ்தியன்

பல கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக வந்தபின் பச்சையாக எதைச் சாப்பிட்டாலும் வாயில் அந்த வாசனைதான் வருகின்றது. உடலிலும் அந்த வாசனை வரும்.

நான்கு நாளைக்கு வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுங்கள். உடலிலிருந்து எப்படி வெங்காய வாசனை வருகின்றதோ இதைப்போன்று அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்றபின் அந்த உணர்ச்சிகள் இயக்குகின்றது.

இதைப்போலத்தான் பச்சையாகச் சாப்பிடக்கூடிய உடல்களிலே அதாவது, ஆடு மாடுகளில் இந்த மணம்தான் வரும்.

நாம் பச்சையாகச் சாப்பிட்டோம் என்றால் உடலை விட்டுப் போனோம் என்றால் ஆடு எத்தனை வகையான இலையைச் சாப்பிட்டதோ அதே மாதிரிச் சாப்பிட்டவுடன் நாம் அங்குதான் போவோம் ஆடாகப் பிறப்போம்.

அதே ஆட்டை அறுத்துச் சாபிட்டாலும், நமக்கு ஆட்டின் நினைவு வரும். உடலை விட்டுப் போனால் அந்த ஆட்டிடம்தான் செல்ல வேண்டும்.
1.ஆட்டை வேகவைத்துச் சாப்பிட்டாலும் சரி.
2.பச்சை இலைகளைச் சாப்பிட்டாலும் சரி.

அதே சமயம் இந்தப் பச்சிலைகளை வேக வைத்து விட்டால் இந்த வீரிய சக்தி குறைகின்றது. பல பொருளோடு சேர்த்து இணைத்து ருசியாகச் சாப்பிடும் பொழுது அதற்குத்தக்க அளவை நம் இரத்தங்களிலே கலந்து “நல்ல அணுக்களாக” உருவாகின்றது.

இந்த அணுக்கள் இரத்தங்களிலே கலந்து நம் உடலிலுள்ள அணுக்களுக்குச் சேர்க்கப்படும் பொழுது கொஞ்சம் விஷம் தோய்ந்த உணர்வின் நிலைகள் மாறி “அணுக்கள் திடகாத்திரமாக மாறும்..” என்ற உண்மையை அகஸ்தியர் முதல் முதலில் கண்டுபிடிக்கின்றார்.

ஒவ்வொரு செடியையும் நுகர்ந்தறிந்து அதனுடைய இயக்க நிலைகளை அறிந்து கொண்டு வருகின்றான். அறிந்தபின் காய்கறிகளை வேகவைத்து ருசியாகச் சாப்பிடப் பழகினான். அப்புறம் கனிகளைச் சாப்பிட்டான்.

கனிகளின் உணர்வினை அதிகமாகச் சாப்பிட்டாலும் அதன் உணர்வு கொண்டு உணர்வுகளின் அணுக்கள் மாறி அந்த கனியைச் சாப்பிட்ட உயிர் அங்கே சென்றபின் அதனைக் கவர்ந்து மாறிவிடும் (தனித்துச் சாப்பிட்டால்).

புல் இருக்கின்றது. பயிராகி வருகின்றது. பல செடிகளை இணைத்துப் புதுப் புதுச் செடிகளை உருவாக்கினார் அகஸ்தியர். ராகி, சோளம், அரிசி, அவைகளையெல்லாம் மற்ற புல் பூண்டிலிருந்து எடுத்து உருவாக்கினார்.

இன்று விஞ்ஞானிகள் எத்தனையோ வகையான அரிசி சோளம் இதெல்லாம் மாற்றுவதுபோல் மாற்றி அதனை வேக வைத்து மனிதன் கலவையாகச் சாப்பிடுவதும் தாவர இனங்களில் உருவாவதைச் சேர்த்து ருசியாக சாப்பிடப் பழகினார்.

1.என்று நெருப்பைக் கண்டுபிடித்தானோ
2.அதன் தன்மை கொண்டு வேக வைக்கும் உணர்வுகள் மாறுகின்றது.
3.இப்படி மாற்றி அமைத்தவர் அகஸ்தியர்.

இந்த உண்மையின் உணர்வை அறியப்படும் பொழுது இந்தச் செடி எப்படி உருவாகின்றது? என்று சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்பொழுதுதான் நமது பூமி துருவப்பகுதியில் இருந்து அதனைக் கவருவதை உணர்கின்றார். இந்த விஷத்தை அடக்கக்கூடிய சக்தி இவனிடம் இருந்ததனாலே எதையுமே தெரிந்து கொள்ளக்கூடிய சக்தி அவனுக்கு வருகின்றது.

மற்ற மனிதனைக் காட்டிலும் இவன் அந்த அறிவில் வளர்ச்சி உள்ளனவாக வருகின்றான்.

அப்படிப் பெற்றவன் வான் வீதியில் உற்றுப் பார்க்கும் பொழுது இந்த 27 நட்சத்திரங்களும் ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது “மின்னலாக மாறுகின்றது..” என்பதைக் காண்கின்றான்.

நம் பிரபஞ்சத்தைக் காட்டிலும் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மை நம் பூமிக்குள் வந்தால் மிகவும் தீங்கு செய்கின்றது என்பதனை அறிந்தான்.

இவன் உடலுக்குள் தீங்கினை மாற்றும் சக்தி இருந்ததனால் மின் கதிர்களை ஜீரணிக்க கூடிய சக்தி அவனுக்கு இருந்தது. அவைகள் வளர்ச்சி அடைந்தது. இவ்வாறு இந்த உயிரைப் போலவே இந்த அணுக்களின் தன்மை அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைகின்றது.

27 நட்சத்திரங்களும் 27 விதமான நிலைகளில் மோதும் பொழுது மின் கதிர்களை அவன் சுவாசித்து அவன் வாழ்க்கையில் அதனை அடக்கும் தன்மை பெற்றான்.

சூரியன் தனக்குள் மோதும் அனைத்தையும் பாதரசமாக மாற்றி அது வெளிப்படுத்தும் உணர்வுகள் உலகிற்கே ஒளியாகத் தருகின்றது.

அதைப்போல் உயிருடன் ஒன்றி ஒளியின் அறிவாக அகண்ட அண்டத்தையும் அறியும் உணர்வுகள் அகஸ்தியனுக்குள் வந்து சேர்கின்றது. அவன் தான் இன்று வேகா நிலையாக துருவ நட்சத்திரமாக உள்ளான். 

அந்த அகஸ்தியரைப் போன்று நாமும் வேகா நிலை அடைவோம்.