ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 29, 2017

ஈரேழு லோகத்தையும் வென்றவன் “விண் சென்றான்”

அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே பெற்று அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்.
1.அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி
2.உங்கள் நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி இதனுடன் சுழன்று உணர்வுகளை தனக்குள் சேர்க்கப்படும் பொழுது அகண்ட அண்டத்தில் வருவதையும் உங்கள் உணர்வுக்குள் அது பெறும் உணர்ச்சியின் நிலையை அணுவாக மாற்றும் நிலை கொண்டு அது உருப்பெற்று விட்டால் தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.

உங்களால் “நினைத்த நேரத்தில்” அகண்ட அண்டத்தினையும் அதன் செயலாக்கங்களையும் காணமுடியும்.

அதில் வெளிப்படும் உணர்வில் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்த்துப் பகைமை உணர்வு உங்களுக்குள் வராது பேரின்ப உணர்வினை உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது.

எமது அருள் குரு அருளால் கிடைத்தது.  குரு அருள் பேரருளைக் கவர்ந்து அவர் உணர்வு என்னை பக்குவப்படுத்தியது போல் உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன்.

இதில் எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும் அடுத்துச் சீராக என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும் இது உதவுகின்றது.

குறுகிய காலமே இருக்கும் இந்த உடலுக்கு வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும் உயிருக்கு அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும்.  இதுதான் வாழ்வின் கடைசி எல்லை.

ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஒளியின் உணர்வாக நம் அணுக்களை ஆறாவது அறிவின் துணை கொண்டு உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான்” என்பது.

உயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது. அதே சமயத்தில் அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாகும் பொழுது உயிரைப் போன்றே உணர்வின் தன்மை ஆக்கப்படும் பொழுது நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது.

இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒளியின் தன்மை கூடுகின்றது.

சற்று சிந்தனை செய்து பாருங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து இது  தவறு இது கெட்டது என்று உணர்வினை நுகர்ந்து நுகர்ந்து இதனைக் கலந்து கலந்து இந்த உடலினை உருவாக்கியது உயிர்.

1.ஈசனாக இருந்து அவனே உருவாக்கினான்
2.கடவுள் என்ற நிலையில் உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான்,
3.நாம் எதனை நுகர்ந்தோமோ அவை நம்முள் நின்று அதனின் துணை கொண்டு அங்கே இயக்குகின்றது.
4.அவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை.
5.அவன் தான் உருவாக்குகின்றான்.
6.ஆகவே உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.

நம் குரு என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து உங்கள் கண்ணின் நினைவை என்னிடத்தில் செலுத்தினாலும் “நீங்களும்… அண்டத்தில் மிதக்கின்றீர்கள்”.

அதனின் உணர்வை நினைவை கொள்ளும் பொழுது அதன் அருளை நீங்களும் பெறமுடியும்.

அண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு அகண்ட அண்டத்தைத் தெளிவு படுத்தியவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமானான். அவன் அகண்ட அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றுகின்றான்.

அதன் உணர்வின் தன்மை இந்தப் பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது  அகண்ட அண்டத்தில் வருவதையும் ஒளியாக மாற்றிடும் திறன் நீங்கள் பெறவேண்டும்.

நீங்கள் சிறிதளவே இருப்பினும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்த பூமியிலும் பரவுகின்றது. அதன் உணர்வின் நினைவு கொண்டு கவருங்கள்.

சூரியனில் இருந்து வரக்கூடிய நிறங்கள் ஆறு ஏழாவது ஒளி. இதைத்தான் “சூரிய பகவான் வருகின்றான்…” என்று வேக ஓட்டத்தைக் காட்டி ரதத்தைக் காட்டியது.

அந்த ஏழு கலர் ஓட்டத்தை நமக்குள் எடுத்தால் நம்மை அந்த உலகத்திற்கு இட்டுச் செல்லும்.

மனிதனான ஆறாவது அறிவின் நிலைகள் வரும்போது… “ஏழாவது”  ஒளியின்  நிலைகள் அடைதல் வேண்டும்.
1.இதுதான் “ஈரேழு லோகத்தை வென்றவன் விண் சென்றான்”  என்பது.
2.அவன் தனி உலகமாக ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான்.
3.அவன் ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.

சூரியனில் இருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு. ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு மற்றதைத் தெளிந்து உணர்ந்து ஒளியாக மாற்றுவது ஏழு.

காவியங்களில் ஈரேழு லோகத்தையும் தேடிப் பார்த்தேன் என்று சொல்லுகின்றனர். மனிதனுக்குள் உணர்வுக்குள் இந்த ஏழு லோகத்திற்குள் தேடி நாம் காணுதல் வேண்டும்.

மேலே ஏழு என்ற உணர்வுகள் மனிதனுக்குள் உண்டு.  நமக்குள் தேடினால் உண்டு.

பேரருள் என்ற உணர்வினை எடுத்து நமக்குள் பேரொளியாக மாற்ற வேண்டும். அந்த உணர்வின் தன்மையை உங்களில் உருவாக்கத்தான் இந்த நிலை.