ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 14, 2017

ஒரு தீயவனின் சக்தி அவன் சாபமிட்டால் உடனடியாக வேலை செய்கிறது ஏன்...?

ஒருவர் பிச்சையோ யாசகமோ எடுத்துக் கொண்டு வருகின்றார் என்றால் அவனிடத்தில் கடும் வேதனையும் சங்கடமும் துன்பமும் இருக்கும்.

விரக்தியின் நிலைகள் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராது நம்மிடத்தில் யாசகத்திற்கு வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனைக் கடுமையான சொற்கள் கொண்டு திட்டும் பொழுது பதிலுக்கு அவன் கடுயான வாக்கு கொண்டு நம்மைச் சொல்லிவிட்டால் அந்த வாக்கு உடனடியாகப் பலிக்கும்.

ஏனென்றால் அது நஞ்சின் தன்மை.

நான் (ஞானகுரு) பல வருடங்கள் சிரமப்பட்டு பல ஆற்றல்கள் பெற்று நீங்கள் நலம் பெறவேண்டும் என்று ஒரு வாக்கைக் கொடுத்தால் அந்த வாக்கை நீங்கள் ஏற்றுக் கொண்ட நிலைகளுக்கொப்பத்தான் அது நல்லதாகின்றது.

இது கால தாமதமாகும்.

நான் கொடுத்த வாக்கின்படி நல்லதாக ஆனாலும் நீடித்த நாள் அது செயல்பட வேண்டும் என்றால் உங்கள் எண்ணத்தைக் கொண்டு அதை ஊடுருவச் செய்து நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் ஒரு தீயவனின் சக்தியோ அவன் சாபமிட்டால் அந்த உணர்வுகள் உடனடியாக வேலை செய்யும்.

பாலுக்குள் விஷம் பட்டால் அந்த விஷமான பாலைக் குடித்தால் எப்படி நஞ்சாக மாய்த்துவிடுகின்றதோ அதைப் போல சாதாரண மனிதனாக இருந்தாலும் அவன் சாபமிடுகின்ற நிலைகள் அப்படி விஷத் தன்மை வாய்ந்தது தான்.

நம்மைச் சாபமிட்டான் என்றால் நாம் என்ன செய்வோம்?

என்ன சொன்னாய்...? என்று எதிர்த்துக் கேட்போம். அவன் மீண்டும் ஏதாவது சொன்னால் அடிக்கத் துணிவோம்.

அந்த ஆத்திரத்தை நாம் ஊட்டப்படும் பொழுது அவன் மீண்டும் கடுமையான சொற்களைச் சொன்னால் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடும்.

அவ்வாறு சேர்ந்துவிட்டால் அந்தச் சாப அலைகள் குடும்பப் பரம்பரைக்குள் வந்துவிடும். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அது ஆட்டிப் படைத்துவிடும்.

செல்வம் இருக்கும். ஆனால் உடலுக்குள் துன்பம் இருக்கும். அவர்களுக்குள் மகிழ்ச்சி இருக்காது. ஆசையின் நிலைகளில் அதிகமாகப் பேசலாம். இதைப் போன்ற துன்புறும் நிலைகள் நிச்சயம் வந்தே தீரும்.

ஆனால் சாபமிட்டவன் அது எப்படி ஏழ்மை என்ற நிலைகளில் எப்படியெல்லாம் துன்பம் அனுபவித்தானோ
1.பணமில்லாது உள்ளுக்குள் வேதனை கொண்டு அனுபவித்தாலும்
2.பொருள் இல்லாததால் அவன் தாங்கும் சக்தி இருக்கின்றது. 
3.ஏனென்றால் அந்த விஷத்தின் தன்மை வரப்படும் பொழுது அவன் தாங்கிக் கொள்ள முடிகின்றது.

செல்வச் செழிப்புடன் ஆனந்தமாக இருப்பவர்கள் இத்தகைய சாபத்தினால் அவர்களுக்கு வேதனையாகிவிட்டால் அவர்களுக்கு அதைத் தாங்கக்கூடிய சக்தி இல்லை.

வேதனைகள் அதிகமாக இருக்கும். பொருள்கள் எல்லாம் இருக்கும். உள்ளுக்குள் அதைச் சுவைக்கும் நிலை இல்லை. மகிழும் நிலை இல்லை.

உடல் முழுவதற்கும் நரகத்தை அனுபவிப்பது போல் ஒவ்வொரு நிமிடமும் வேதனையை அனுபவிப்பார்கள். இதைப் போன்ற வேதனையான உணர்வுகளை இந்த உடலில் விளையை வைத்தால் உடலை விட்டுச் சென்ற பின் எதுவாகப் பிறக்க முடியும்?

மிருகங்கள் அனைத்தும் விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொண்டது. அதைப் போல இவர்கள் இறந்தால் இவர்கள் உடலிலிருக்கக்கூடிய வேதனையான உணர்வின் அணுக்கள் விளைந்த அனைத்துமே அந்த செல்கள் உயிராத்மாவில் சேர்ந்து மிருகத்தின் தன்மையாகத்தான் பிறக்க முடியும்.

மிருகத்தின் அலைகளின் உணர்வுகள் சேர்க்கப்பட்ட அணு செல்கள் அந்த வாசனை வரப்போகும் பொழுது இவன் எத்தனை அநாகரிகமான முறையில் சாபமிட்டானோ அந்தச் சாபத்தின் நிலைகளுக்கொப்ப உடல் உருமாறிவிடும்.

ஒரு மெய்ஞானி சொல்லக்கூடிய வாக்கைக் காட்டிலும் ஏழ்மையிலே தரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய உணர்வின் விஷத்தன்மைகள் அவ்வளவு சீக்கிரம் வேலை செய்யும்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால் யாம் சொல்லும் முறைப்படி கணவனும் மனைவியும் தியானத்தையும் ஆத்ம சுத்தியையும் சரியானபடி செயல்படுத்துதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அடிக்கடி எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

எது வந்தாலும் உடனடியாக “ஈஸ்வரா..” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து உடலுக்குள் இணைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

இதைச் சேர்க்கச் சேர்க்க மற்ற உணர்வுகள் சிறுத்துவிடும். அதனின் இயக்கமும் செயலிழந்துவிடும். தீமைகளை அகற்றும் பழக்கம் வந்துவிடும்.

அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றினால் தீமைகளப் பற்றற்றதாக்கிட முடியும். தீமைகள் அருகில் வராதபடி நம் ஈர்ப்புக்குள் புகாதபடி “பாதுகாப்பு அரணாக” அமைக்க முடியும்.

குடும்பத்திலுள்ளோர் அனைவரும் சேர்ந்து கூட்டாகத் தியானமிருந்து அருள் சக்திகளை அனைவரும் பெற வேண்டும் என்று வலுப்படுத்துதல் வேண்டும்.

செய்து பாருங்கள்.