ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 14, 2017

“நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்கு வேண்டும்” என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்...?

வாழ்க்கையில் நல்லதை ஏற்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வதற்காக வேண்டி அடுத்தவர்களிடம் நமக்குத் தெரிந்த அந்தப் பக்குவங்களை நாம் சொல்வோம்.

எப்படியும் அந்தப் பக்குவம் எல்லோரும் அடைய வேண்டும் என்பதற்காகத் திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

கேட்கவில்லை என்றால் என்ன ஆகிறது?

இவ்வளவு நல்லது சொல்கிறோம்… எத்தனை தடவை சொல்கிறோம்… “ஆனால் கொஞ்சமாவாது ஏற்றுக் கொள்கின்றார்களா…,?” இவர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள் தானா..? என்று நாம் கேட்கின்றோம். 
1.சகஜ வாழ்க்கையில் அடிக்கடி அதைத்தான் பேசுவோம்
2.இப்படித்தான் கேட்போம். இல்லையா…!
3.நல்லது சொன்னால் யார் கேட்கிறார்கள்…? அதைக் கேட்பதே இல்லை என்று இப்படித்தான் சொல்வோம்.

ஆனால் அவர்கள் சங்கடமாக இருக்கும் பொழுது “நல்லது சொன்னால்…” எப்படி எடுத்துக் கொள்வார்கள்...!

“அட போய்யா...,” தொழில் போய்விட்டது எல்லாம் போய்விட்டது காசெல்லாம் போய்விட்டது. ஏதோ இருந்தோம்… சாப்பிட்டோம்… போனோம்… நாளைக்கு என்னமோ ஆகிறது “எல்லாம் போய்விட்டது… விடு போ…,!” என்ற நிலையில் அவர்கள் இருப்பார்கள்.

1.அப்படி வெறுப்பாக இருப்பவரிடம் போய்
2.நீங்கள் என்ன பக்குவம் சொன்னாலும் அது என்ன செய்யும்?
3.காது கேட்காதவர்களிடம் போய்ப் பேசினால் எப்படி இருக்கும்? என்ன செய்வார்கள்?
4.ஒரு உணர்வைக் கிரகிப்பதற்காக வேண்டி அந்த விஷயத்தைச் சொன்னால் என்ன சொல்வார்கள்?
5.அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பக்குவத்தை ஏற்படுத்த நாம் என்ன செய்யவேண்டும்?

நாம் முதலில் நம் குடும்பத்தில் இந்தச் சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ அதைச் செய்ய வேண்டும். “அந்தப் பயிற்சியை” எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் அத்தகைய சிக்கல்கள் வரும்போது பெரும்பகுதியானவர்களுக்குக் கோபம் அதிகமாக வரும். அந்த மாதிரிக் கோபம் வரப்படும் பொழுது யாம் சொன்ன “ஆத்ம சுத்தியைச் செய்து பாருங்கள்”.
1.நம்மைப் பார்த்தவுடன் அவர்களுக்கு உணர்வு மாறும்.
2.அந்த நல்ல எண்ணம் வர வேண்டும். 
3.அதே மாதிரித் தொழிலில் செயல்படுத்தும் பொழுது நல்ல எண்ணங்கள் வர வைக்க வேண்டும்.
4.அப்பொழுது அந்தப் பக்குவ நிலைகளை நாம் சொல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும்.

அதை விடுத்துவிட்டு இதைப் போன்ற நிலைகளிலிருந்து மாற்றிக் கொள்ள
1.குடும்பக் கூட்டுத் தியானமிருந்தோமா...?  
2.”என்னத்தை…, நாம் சொன்னால் இவன் எங்கே கேட்கப் போகிறான்..,” என்று இதை இணைத்துவிடக் கூடாது.

அதற்குப் பதிலாக அவரும் தியானத்தில் அமரவேண்டும். அவரும் கலந்து கொள்ள வேண்டும். அந்த அருள் சக்திகளைப் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று இந்தப் பிரசாதத்தைக் கொடுத்துப் பாருங்கள்.

வரவில்லை… என்றாலும் கூடக் “கூப்பிட்டுக் கொடுங்கள்”.

சிறிது நாள் இப்படிச் செய்துவிட்டு
1.உனக்கு ஆன்ம ஞானம் கிடைக்கும்.
2.உன் வாழ்க்கையில் எதிர்காலம் சிறந்திருக்கும் என்று
3.கட்டாயமாக இதைச் சொல்லிக் கொண்டே வாருங்கள்.

இது நடக்கும்.

சீராகத் தியானத்தில் உட்கார்பவர்களே சில நேரம் “எங்கே முடிகிறது…!” என்று சோர்வடைந்து விடுகின்றார்கள்.
1.தியானம் செய்ய முடியவில்லை… வர மாட்டேன் என்கிறது. 
2.இப்படித்தான் சொல்ல முடிகின்றதே தவிர சீராக்கும் பக்குவ நிலைக்கு வரவில்லை.

ஒரு தோசையைச் சுட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆனால் அடியில் பிடித்துக் கருகி விட்டால் சாப்பிட முடியவில்லை.

ஆனாலும் அதைச் சுரண்டி எடுத்துவிட்டு எண்ணையை வைத்துத் தேய்த்து மறுபடியும் ஒட்ட வைத்து அதை அழகாகச் சுட்டுச் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றோம்.

திருப்பி மாவை ஊற்றிச் சுட்டாலும் கூட அது சிறிது சட்டியுடன் ஒட்டிக் கொண்டு சுருங்கிப் போய்விட்டால் ருசி இருப்பதில்லை.

ஆனால் அதே நெருப்பு தான். “பக்குவமாகச் சுடுபவர்கள்” அந்த வெப்பத்தைச் சீராக்கி எண்ணையைத் தேய்த்து அழகாகச் சுடுகிறார்கள். ருசி வருகின்றது.

அதைப் போன்று தான் அருள் ஞானிகளைப் பற்றி யாம் உபதேசத்தைக் கொடுக்கின்றோம். எல்லாம் கேட்கின்றார்கள். ஆனாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பம் இப்படி ஆகிவிட்டது.

அப்பொழுது நாம் அதை எண்ணத்தில் எண்ணாது மனப்பக்குவம் வர வேண்டும்.

தோசை முதலில் சுட்டது ருசியாக வரவில்லை.

மறுபடியும் அதைச் சீராக்கி அடுத்துத் தோசையைச் சுட்டோம். இப்பொழுது வந்துவிட்டது.

வந்துவிட்டது என்று அதை எப்படிச் சாப்பிடுகின்றோமோ இந்த மாதிரி வாழ்க்கையில் அந்த மனப்பக்குவம் வர வேண்டும்.

வாழ்க்கையில் எதைத் தேடி வருகின்றோம்? நிம்மதியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

நிம்மதியும் மகிழ்ச்சியும் வேண்டும் என்றால் அதற்குண்டான பொறுமையும் பக்குவமும் வேண்டும். அத்தகையை பரிபக்குவ நிலைகளை ஏற்படுத்தத்தான் யாம் உங்களுக்கு இதைப் பதிவு செய்கின்றோம்.

சில நேரங்களில் தோல்வி அடைந்தாலும் அதைக் கண்டு துவண்டு விடாது “எது நம்மை மாற்றியது…?” என்று சிறிது நேரம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணித் தியானித்தீர்கள் என்றால் உங்களுக்குள் அந்தப் பரிபக்குவ நிலை தெரியும்.   

பழகிக் கொண்டால் நாம் போக வேண்டிய பாதை “தன்னாலே” தெரியும்.