ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2017

“அதிகாலையில் கடவுளின் தரிசனத்தைக் காணலாம்…” என்று எல்லோரும் சொல்கிறார்கள் ஏன்?

மகரிஷிகள் இந்த உலகப் பற்றை உடலின் பற்றை விட்டுவிட்டு உயிரின் பற்றிலே சென்றவர்கள் உடல் பற்றாக இருப்பதை விட்டு உயிர் பற்றை வளர்த்தவர்கள்.

“உயிரின் சேர்க்கை” அதாவது உயிரின் ஒளியால் உணரப்பட்ட உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றப்படும் பொழுது உயிருடன் ஒன்றிய சேர்க்கை – ஒளி.

அவ்வாறு ஒளியானவர்கள் மகரிஷிகள்.

அந்த நிலைகளில் குருநாதர் காட்டும் இந்த நெறியை நாம் அனைவரும் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஏனென்றால் விண்ணுலக ஆற்றலை இந்த மண்ணுலகில் வந்து அதனைத் தனக்குள் கண்டான் விஞ்ஞானி. மண்ணுக்குள் கண்டாலும் புவியின் ஈர்ப்பு நிலைகளை உணர்ந்தான்.

அதே சமயத்தில் இராக்கெட்டை ஏவும் போது இந்தப் பூமியின் ஈர்ப்பு நிலை சுற்று அதைப் போல பன் மடங்கு வேகத் துடிப்பினை உந்து விசையாக்கி அனுப்புகின்றான்.

புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்றபின் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு தானே “மிதக்கும் நிலை” வருகின்றது.

எந்த வேகத் துடிப்பின் நிலை கொண்டிருக்கின்றானோ அதை நிலை கொள்ளவும் செய்கின்றான்.

இதைப் போலத்தான் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்தான். “அகஸ்தியன் கண்டுணர்ந்ததை” இதனுடன் இணைத்துப் பதிவு செய்து கொள்ளத்தான் இதைப் பதிவாக்குகிறோம்.
1.குருநாதர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் இணைத்தார்.
2.அதை யாம் இப்பொழுது உங்களுக்குள் இணைக்கின்றோம்.

அணுவின் ஆற்றலைத் தனக்குள் அறிந்த அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதையும் சேர்க்கின்றார்.

நமது பூமி தனக்குள் இழுக்கும்போது இடைமறித்து உணர்வை நுகர்ந்து அந்த வலுவைப் பெறுகின்றார். அதனால்தான்
1.அதிகாலையில் 4.00 மணிக்குத் துருவ நட்சத்திரத்தை இடைமறித்து
2.அந்த வழிகளில் உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.

மற்ற மதங்கள் 4.30 மணிக்கு கடவுளின் தரிசனத்தைக் காணலாம் என்று சொல்வார்கள். அது இதெல்லாம் தெரிகிறது என்று, இந்து மதத்திலும் சொல்வார்கள். ஆனால் மூலம் தெரியாது. ஏனென்றால் மறைக்கப்பட்ட உண்மையைத் தான் நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகையினால் இதைக் கடந்து சென்று அந்த மெய் உணர்வின் தன்மையை உங்களிடம் பதிவு செய்வதற்குத்தான் இதைச் செய்வது.

இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சியாக வளர்ச்சியாக அந்த மகரிஷிகள் கண்ட உண்மைகளை இங்கே வளர்க்கின்றோம். இந்த மனித வாழ்க்கையில் இருளைச் சேர்ப்பதை நாம் இப்பொழுது விலக்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அங்கிருக்கும் பொருள் தெரிவது போல் அந்த மகரிஷிகள் உடலில் விளைந்த உணர்வுகளை நமக்குள் ஒளியாக மாற்றும்போது நம்மை அறியாது பிறிதொரு உடலில் விளைந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது என்பது தெரிகின்றது.

திடீரென்று “ஒருவர் ஏதாவது சொல்லிவிட்டார்… என்றால் நம்மால் அடக்க முடிகின்றதா…?” அவர் உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் பாய்ந்தபின் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து நமக்குள் சேர்க்கப்படும்போது நமக்குள் அந்த உணர்வின் இயக்கத்தையும் உணரமுடிகின்றது.

ஏனென்றால் பிறிதொரு உணர்வு நமது தெளிந்த அறிவை அது மறைக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது.

இருளிலிருந்து விடுபட முடியாத போது அருள் ஒளி என்ற உணர்வைச் சேர்க்கும்போது
1.அந்த ஒளி கண்டபின்
2.இருளிலிருந்து விடுபடும் மன பலம் கிடைக்கின்றது.

அதனால்தான் உங்களை அதிகாலையில் எப்படியும் அந்த நேரத்திற்குத் தட்டி எழுப்பி விடுவதும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

1.நம் நினைவினை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
3.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து
4.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.
5.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்ற வேண்டும்.