ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2017

“சேவல் கொடியோனே” என்று ஆறாவது அறிவின் சிறப்பை ஞானிகள் காட்டியுள்ளார்கள் – ஞானத்தை வழங்கும் ஞானஸ்தானத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமல்லவா…!

பழனி கோவிலுக்குச் சென்றால் அங்கே இது “அபிஷேக விபூதி” என்று ஏமாற்றுகின்றார்கள்.

“விபூதி” அபிஷேகத்திற்குப் போகவில்லை என்று தெரிகின்றது. ஆனாலும் பரவாயில்லை பழனியாண்டவர் சன்னதிக்கு வந்து விட்டோம் என்று விளம்பரத்தைப் பார்த்து வாங்குகின்றோம்.

பழனில் முருகனின் அருளைப் பெறலாம் என்று வருபவர்களை ஏமாற்றிக் கொண்டுதான் உள்ளார்கள். நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

நாம் முருகன் ஆலயத்தில் நேரடியாகச் சென்று வணங்க தடை ஏதும் இல்லை.

ஆனால் பழனி ஆலயத்திற்குச் சென்று தன் கண் திருஷ்டி தீரவேண்டும் என்று சிதறு தேங்காய் போடுவார்கள். இதில் சிதறு தேங்காய் எடுக்கும் உரிமை பெற்ற காண்ட்ராக்டர்கள் என்ன செய்வார்கள்?

தேங்காய் உடைக்க வருபவர்களிடம் இங்கேதான் உடைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் வேறு ஒரு இடத்தில் உடைத்தால் வேறு காண்ட்ராக்டருக்குத்தான் போகும் என்று அப்படிச் சொல்கின்றார்கள்.

சிதறு தேங்காய் உடைக்க வருபவர்கள் “நான் சாமிக்கு முன்னாடிதான் உடைப்பேன்”என்று சொன்னால் கூட இந்தக் காண்ட்ராக்டர்கள் விடுவதில்லை.

அவரை மறித்து “இங்கே தேங்காயை உடை”என்று கட்டாயப்படுத்துவார்கள்.

1.“நம்மைத் தெய்வம் காக்கும்…” என்று நினைக்கின்றோம் அல்லவா…!
2.நாம் தெய்வத்தை வணங்கி வந்தோம் அல்லவா…!
3.அந்தத் தெய்வம் இங்கே அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும் அல்லவா?

ஆசையின் நிலைகொண்டுதான் இதையெல்லாம் செய்கின்றனர்.

இதைத்தான் இராமாயணத்தில் என்ன சொல்கின்றார்கள்? வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்குப் பிரம்ம குரு என்று அதில் உணர்த்தியுள்ளார்கள்.
1.அதாவது கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ
2.அதுவே நம்ம வழி நடத்தும் என்று பொருள்.

நாம் என்ன செய்கிறோம்…? சிதறு தேங்காய் போட்டால் கடவுள் நமக்கு நல்லது செய்வார் என்று நம்புகின்றோம். அப்பொழுது இது வசியம். அதைக் கவர்ந்து கொள்ளுகின்றோம்.

1.நுகர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் பிரம்மமாகின்றது.
2.நாம் எண்ணிய எண்ணம் அருந்ததி நமக்குள் பதிவாகிவிடுகின்றது.
எப்படியும் கஷ்டப்பட்டாவது செய்தால்தான் நன்றாக இருக்கும். செய்யவில்லை என்றால் “சாமி கோபித்துக் கொள்ளும்…” என்ற நிலைகளில் தான் போகின்றார்கள்.

சிதறு தேங்காயைப் போட்டால் காண்ட்ராக்டர் எடுத்து விற்றுக் கொள்கிறார். இதே போன்று பக்தர்கள் கோவிலுக்குச் சேவலையும் நேர்த்திக் கடனாகக் கொண்டு போய் விடுகின்றார்கள்.

கோவிலில் கொண்டு போய் கோழியையோ சேவலையோ விட்டால், அவைகள் “பத்து நாளைக்குப் பட்டினி” இருக்கும்.

“சேவற் கொடியோனே…” என்று சொன்னால் நாளை வரக்கூடிய நிலைகளை தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றது நம் ஆறாவது அறிவு.

இதற்குத்தான் முருகனைச் “சேவற் கொடியோனே…” என்று ஞானிகள் அழைத்தார்கள்.

காலையில் சேவல் கூவுகின்றது. விடியப் போவதைக் காட்டுகின்றது. இதைப்போன்று ஆறாவது அறிவு பெற்றவர்கள் உண்மையின் உணர்வை அறியக்கூடியவர் என்று “சேவற் கொடியோனே”என்ற தத்துவத்தைக் கொடுத்தார்கள்.

ஆனால் சேவலை நேர்த்திக்கடன் கொடுக்கிறேன் என்று சொல்லி தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுக் காண்ட்ராக்டர் எடுத்துச் சென்று, சேவல் கொல்லப்படும் வரையிலும் அது இரண வேதனை அடைகின்றது.

சேவலை சாமிக்கு அர்ப்பணித்து காண்ட்ராக்டர் கையில் கொண்டு போய்க் கொடுத்து சேவலைப் பத்து நாளைக்கு பட்டினியாகப் போடும்பொழுது
1.சேவல் இவருடைய உணர்வை நினைத்தால் சேவலின் ஜீவன் என்ன பண்ணும்?
2.“பாவி…, என்னைப் பட்டினி போட்டுக் கொல்கிறானே…!” என்று எண்ணும்.

சேவல்களை ஏலம் போடுவதற்கு முன்னால் அவைகள் படும் அவஸ்தையைப் பார்த்தால் நமக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.

சேவலை முருகனுக்கு வேண்டி சும்மா பறக்க விட்டு விட்டுச் சென்றால் கூட யாராவது பிடித்துக் கொண்டு சென்று விடுவார்கள். தொந்தரவு இல்லை.

சேவல் கொடி கட்டியிருக்கும் இடத்திலேயே “சேவலைப் போட வேண்டும்” என்று எண்ணுகின்றோம்.
1.நம்முடைய ஆசையின் நிமித்தம்
2.நம்முடைய அறிவை இழந்து என்ன செய்கின்றோம்?

1.அருள் ஒளியை நமக்குள் கூட்டி,
2.இருளை நீக்கி உண்மையின் உணர்வை ஊட்டும்
3.நமது ஆறாவது அறிவைத் தெளிவாக்கும் “ஞானஸ்தானத்தையே சூனியமாக்கிக் கொண்டிருக்கின்றோம்”.

மனிதரை அறியாமையிலிருந்து விடுபடச் செய்து உண்மையை அறிந்துணர்ந்து தெளிந்து வாழச் செய்யும் நிலைக்கே ஆலயங்கள் ஞானிகளால் உருவாக்கப்பட்டன.

இதனின் உண்மைளை அறிந்த நாம் ஆலயங்களுக்குச் சென்று வணங்கும் பொழுது தெய்வத்தைப் பார்க்கும்போது அந்தத் தெய்வ குணம் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அங்கே வைக்கப்பட்டுள்ள கனியின் சுவையின் இனிமை என் சொல்லிலும் செயலிலும் நாங்கள் பெறவேண்டும் மலரைப் போன்ற மணம் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

தெய்வச் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க நகைகளைக் காணும் பொழுது “தங்கம் போன்று மனம் மங்காத நிலை” நாங்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த ஆலயம் வருவோர் அனைவரும் தெய்வ குணம் பெறவேண்டும்  இந்த ஆலயம் வருவோர் அனைவரது குடும்பங்களிலும் அருள் சக்தி படரவேண்டும்.

அவர்களது குடும்பங்களில் உள்ள அனைவரும் தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இதன் நிலைகள் கொண்டு நம்முள்ளும் அருள் ஞான சக்தி பெருகுகின்றது. நமது வாழ்க்கையும் அருள் ஞான வாழ்க்கையாக அமைகின்றது.

ஆலயங்களுக்குச் சென்றால் “இப்படித்தான் ஞானிகள் காட்டிய வழியில் எண்ண வேண்டும்”.