ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2017

இன்று கேமராக்களில் நுண்ணிய படங்களை எடுப்பது போலத் தான் குருநாதர் என் உடலுக்குள் ஏற்படும் இயக்கங்களைக் காட்டினார்

இன்றைக்கு விஞ்ஞான அறிவு கொண்டு சில கருவிகளை வைத்து மிக மிக நுண்ணிய நிலைகளை படமாக எடுத்துத் தெளிவாகக் காட்டுகின்றனர். நாம் அதிசயமாகப் பார்க்கின்றோம்.

இயற்கையின் உண்மைகளை நேரடியாகப் பார்க்கப்படும்போது அந்த உண்மையின் இயக்கங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வோம்.

விஞ்ஞான அறிவு கொண்டு யானைகளை மடக்குவதற்குக் கூட சில உபாயங்களைக் கண்டு நாம் வியக்கக்கூடிய அளவிற்குத் தக்க கேமராக்களை வைத்து எலக்ட்ரானிக் நுட்பம் கொண்டு பிரமிக்கத்தக்க அளவில் கூட இன்று படங்களைக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் இயற்கைக்கு மாறாக தான் எடுத்துக் கொண்ட திறமையைக் காட்டி உலகம் இப்படிதான் இருக்கின்றதென்று விஞ்ஞான அறிவால் சில நிலைகளைப் பார்க்கின்றோம்.

நீங்கள் கையில் ஒரு பையைக் கொண்டு போனால் இந்தப் பையைப் பிடுங்கி இன்னொருவன் கையில் கொடுக்கின்ற மாதிரி கேமராவில் எலக்ட்ரானிக் வழியில் மாற்றி டி.வி.யில் அப்படியே காட்டுகின்றார்கள்.

டி.வி.யிலும் சினிமாவிலும் இதைப் போன்ற படங்களையும் முறைகேடான நிலைகளையும் காட்டுகின்றனர். இயற்கைக்கு மாறான செயல்களையும் காட்டி அதிசய வைக்கும் நிலையும் பயமூட்டும் நிலையும் காட்டுகின்றனர்.

“ஆ…!” இதெல்லாம் எப்படி…! என்ற நிலையில் அதிர்ச்சியூட்டும் நிலைகளைத்தான் நாம் நுகர்கின்றோம். அதனின் விளைவுகளைப் பற்றி அறிவோரும் இல்லை. அறிவுறுத்துவோரும் இல்லை.

ஆனால் குருநாதர் என்னைக் (ஞானகுரு) காடுகளில் அலையச் செய்து ஒவ்வொரு நிமிடங்களிலும் ஒவ்வொரு உயிர்கள் (மிருகங்களும் உயிரினங்களும்) தன்னைப் பாதுகாக்க என்ன செய்கின்றது?

சினிமா டி.வி.யில் காட்டுகின்றார்கள் அல்லவா…! அது போல என்னை நேரடியாகவே கொண்டு போய்க் காட்டினார்.

மிருகங்கள் எப்படிப் போர் செய்கின்றது? மற்றதை எப்படித் தந்திரமாகப் பிடிக்கின்றது? தப்பி ஓட அந்த உயிரினங்கள் என்னென்ன செய்கின்றது?

அதே சமயத்தில் நான் வேடிக்கை பார்க்கும் போது என்னைத் தாக்க வரும் நிலையில் எனக்குள் எனென்ன உணர்வுகள் வருகின்றது?

அந்த உணர்வுகளை எல்லாம் நான் நுகர்ந்தபின் பதட்டமும் பயமும் ஆகி என் உடலில் எப்படியெல்லாம் மாற்றங்கள் ஏற்படுகின்றது?

அதை நுகர்ந்த ஒரு இரண்டு மணி நேரத்தில் இரத்தங்களில் வேதனை உணர்வுகள் கலக்கப்படும் பொழுது ஒவ்வொரு அணுக்களின் இயக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகின்றது என்று குருநாதர் அனுபவரீதியில் கொடுத்தார்.

மாறிய நிலைகளை மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு அடக்கி அந்தத் தீமை செய்யும் நிலைகளை நன்மை பயக்கும் அணுக்களாக ஒளியாக எப்படி மாற்ற வேண்டும் என்பது தான் காட்டிற்குள் அனுபவம்.

1.தீமைகள் எப்படி நம் உடலுக்குள் வருகின்றது?
2.அதனுடைய செயலாக்கங்கள் என்ன?
3.அதைத் தடுப்பது எப்படி?
4.ஞானிகளும் மகரிஷிகளும் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களை எப்படி அகற்றினார்கள்?
5.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை எப்படி ஒளியின் சுடராக மாற்றினார்ககள்?
6.விண்ணுலகம் எப்படிச் சென்றார்கள்? 

இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்ட பின் தான் உங்களுக்குள் அதை உணர்த்துகின்றோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்பபடிச் செய்கின்றோம்.