ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 26, 2017

உயிரினங்களின் ரூப மாற்றம் எப்படி நடக்கின்றது…? புழு குளவியின் ரூபம் எப்படிப் பெறுகின்றது…!

ஒரு கண்ணில்லாத புழுவை குளவி அது கூட்டிலே எடுத்துக் கொண்டு வந்து தன் இனமாக மாற்றுகின்றது எப்படி என்று பார்ப்போம்.

குளவி முதலில் மண்ணைப் பிசைகின்றது. குளவிக்கு உமிழ் நீர் ஊறுகின்றது. உமிழ் நீர் ஊறுவதற்குத் தக்கவாறு அது மண்ணைத் தோண்டுகிறது.
1.உமிழ் நீரை மண்ணுக்குள் கொட்டி
2.மண்ணைப் பிசையும் பொழுது
3.“கொய்ங்…கொய்ங்.. கொய்ங்..கொய்ங்…,” “டுய்ங்…டுய்ங்… டுய்ங்…டுய்ங்…,” அதைப் போன்று
4.குளவி தன் ரீங்காரத்தால் இறைகின்றது.

இறக்கையில் வரும் நாதங்கள் அந்த உணர்வுகள் மண்ணுக்குள் இணைகின்றது. பறந்து பறந்து அந்த நாதத்தைக் கொடுக்கிறது. தன் உணர்வின் ஓலிகளை அதன் மேல் கொடுக்கின்றது.

ஆரம்பத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் மண்ணும் வளர்ச்சியின் தன்மை பெற்றது.
1.மண்ணிற்குள் கலந்திருக்கக்கூடிய அந்தக் காந்த ஈர்ப்புக்குள்
2.குளவி தன் நாதங்களைச் செருகுகின்றது.
3.செருகிய நிலைகள் கொண்டு உருண்டைகளாகச் சேர்த்து அந்தக் குளவி கூடுகட்டுகின்றது.
4.கூடு கட்டிய பின் புழுவைத் தேடிச் செல்கின்றது.

தேடிச் சென்று ஒரு புழுவைத் தூக்கி வந்து கூட்டுக்குள் வைத்து லேசாக அதைக் கொட்டுகின்றது. கொட்டியபின் புழுவிற்குக் “குளவியின் நினைவே…” வருகின்றது. அதனால்
1.புழுவின் உயிரின் துடிப்பின் வேகம் அதிகமாகக் கூடுகின்றது.
2.இயக்கச் சக்தியின் நிலைகள் அதிகமாகின்றது.

தேள் கொட்டினால் எப்படித் துடிக்கின்றோமோ விஷமான பூச்சி கடித்தால் எப்படித் துடிக்கின்றோமோ இதே போல புழுவைக் குளவி கொட்டிய பின் இந்த உணர்வுகள் தூண்டி எழுந்து வேகத்தின் நிலைகள் அதிகமாகின்றது.

கொட்டிய வேகத்தில் விஷத்தின் தன்மைகள் அந்தப் புழுவின் மேல் தோலை உடனடியாகக் கருகச் செய்து விடுகின்றது. கருகிய பின் சருகு போல ஆகின்றது.

சருகு போல ஆனபின் குளவி இரண்டாவது முறை கொட்டுகின்றது. அதன் துடிப்பு நிலை இன்னும் அதிகமாகின்றது.

1.ஒரு கோழி முட்டையில் எப்படி மேலே ஓடு உருவாகின்றதோ
2.அதே போல புழுவின் தசைகள் அனைத்தும் அழுகி
3.சருகு போலக் “கருவாக” உருவாகின்றது.

இரண்டாவது தடவை குளவி கொட்டியதும் அந்த விஷத்தன்மை பாய்ந்து புழுவை உருவாக்கிய தசைகள் அனைத்தும் அணுக்கள் அனைத்தும் அதீதமாகத் துடிக்கும் நிலைகள் பெறுகின்றது.

இந்த நிலையில் புழுவைக் கூட்டிற்குள் வைத்து மண்ணை வைத்து மூடி விடுகின்றது. மூடிய பின் (விஷத்தின் தாக்குதலால்) அந்தக் கருவுக்குள் அடங்கிய புழுவின் உயிரின் துடிப்பின் வேகம் அதிகமான இயக்கமாகும் பொழுது காந்தம் அதிகமாகின்றது.

புழுவின் உயிருக்குள் இருக்கக்கூடிய காந்தம் வேகத் துடிப்பாகும் பொழுது வெளியில் இருக்கக்கூடிய காந்தங்களை ஈர்க்கும் நிலைகள் வருகின்றது.

மண் கூட்டில் ஏற்கனவே விஷத்தைக் குளவி உமிழ்த்தியிருப்பதால் அதன் வழியாகத் தனக்குள் ஈர்க்கும் நிலைகள் வருகின்றது.

உயிரின் துடிப்பு வேகத்தால் காந்தப்புலன் அதிகமாகி ஈர்க்கப்படும் பொழுது தன் உடலுக்குள் இருக்கக்கூடிய அழுகிய புழுவின் தசைகளை ஆவியாக மாற்றுகின்றது.

1.ஒரு மத்தாப்பை நெருப்பு வைத்துக் கொளுத்தினால்
2.அதில் பல ரூபங்கள் எப்படி வருகின்றதோ அதே போல
3.உயிரின் துடிப்பிற்குள் அந்த அலைகள் வரும் பொழுது
4.குளவியின் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளைச் சேர்த்து
5.அது குளவியின் ரூபமாக மாறுகின்றது.

புழுவாக இருந்து குளவியாக உரு பெற்றபின் தாய்க் குளவி போல் உமிழ் நீர் சுரக்கின்றது. அந்தக் கூட்டுக்குள் உமிழ் நீரைக் கொட்டுகின்றது.

மண் கூடு ஈரமான பின் துவாரமிட்டுத் தன்னிச்சையாக வெளியே வருகின்றது. முதலில் புழுவை அடைத்து வைத்த அந்தக் குளவி வந்து திறப்பதில்லை.

வெளியே வந்த பின் முதலில் இருந்த குளவி எதைச் செய்ததோ இந்தக் குளவியும் தாய்க் குளவியின் உணர்வுக்கொப்ப அதே வேலையைச் செய்கின்றது.

ஒரு மாங்கனி உருவான பின் தனக்குள் சேர்த்துக் கொண்ட ஆற்றலை அந்த விதையைப் பூமியில் நடும் பொழுது தன் உணர்வின் ஆற்றலை அது பெருக்கி அந்த உணர்வின் தன்மை இயக்கப்பட்டு மாமரத்தின் இலையைப் போன்ற ரூபங்களை உருவாக்குகின்றது.

அது எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல அணுக்களாகச் சேர்த்து அது வெளியில் வந்து மீண்டும் பல அணுக்கள் கலக்கப்படும் பொழுது வேறொரு புது வித்தாக மாறுகின்றது.

இதே போலத்தான் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் அத்தனை சக்தியும் நமக்குள் விளைந்து விளைந்து மனிதனாக நாம் உருப் பெற்றிருக்கின்றோம் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

“தன்னைத்தான் அறிதல்…” என்ற நிலையில் உயிரின் இயக்கங்களை அறிந்து கொள்ள… நம்மை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.