ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 30, 2017

“சந்தேக உணர்வுகளும்… கலக்க உணர்வுகளும்…,!” நமக்குள் தோன்றுவதன் காரணம் என்ன?

உதாரணமாக நாம் மிகுந்த வெறுப்பாகும்படி ஒருவர் செயல்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் வெறுப்பான உணர்வுகள் செயல்படுவதைப் பார்த்தவுடன் அந்த வெறுப்புடன் நான் இருக்கின்றேன்.

அந்த வெறுப்பின் தன்மை வரப்படும்போது என் நண்பன் வருகின்றான். நம்மைப் பார்த்து.., “ஏம்ப்பா பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது…! என்று சொல்லிச் சிரிக்கின்றான்.

நண்பன் சிரிப்பதைப் பார்த்தவுடன் இந்த வெறுப்பின் தன்மையுடன் இருக்கும் பொழுது “என்ன..! இவன் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றான்…?” அவன் அப்படிப் பேசினான்.., ஆனால் இவன் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றான்.

ஆக சந்தோஷமாகச் சிரித்தாலும் இங்கே வெறுப்பு வருகின்றது.

அப்பொழுது என்ன செய்கின்றது? அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகள் இதனுடன் கலந்தபின் நண்பனின் உணர்வு இங்கே “எதிரியாகத் தெரிகின்றது”.

விஷத்திற்குள் நல்ல பொருளைப் போட்டால் என்ன செய்யும்? ருசியாக இருக்குமா…? அதுவும் மயக்கத்தான் செய்யும்.

இதைப் போன்று இயற்கையின் நிலைகள் வருவதை நாம் மனத் தூய்மை செய்ய வேண்டும். நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் யார் சங்கடப்பட்டார்களோ வேதனைப்பட்டார்களோ அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் அவர்கள் மன பலம் பெறவேண்டும் சிந்தித்துச் செயல்படும் திறன் பெறவேண்டும் அவர்கள் செயல்கள் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்பொழுது அவர்கள் உணர்வை நாம் எடுப்பதில்லை.

ஆனால் நாம் வேதனையாக இருக்கும் பொழுது நண்பன் சிரித்ததைப் பார்த்தவுடன் இந்த வெறுப்பின் உணர்வை ஊட்டி என்ன செய்கின்றோம்?
1.அந்த நண்பன் மேல் உணர்வு வரப்படும் பொழுது
2.அவனைப் பார்க்கும் பொழுது நம்மைக் கேலி செய்கின்றான் கிண்டல் செய்கின்றான்
3.நாம் இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது என்ற இந்த உணர்வு வரும்.

சில பேரைப் பார்த்துமே…, “நம்மைப் பிடிக்கவில்லை போலத் தெரிகிறது…” என்று சொல்வோம். அப்பொழுது எது நம்மை இயக்குகின்றது?

1.“நாம் நுகர்ந்த உணர்வை நம் உயிர் இயக்குகின்றது”.
2.தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
3,நல்லதைக் கெட்டதாகக் காட்டும். கெட்டதை நல்லதாகக் காட்டும் (நாம் நுகரும் உணர்வுகளே அதற்குப் பொறுப்பு).

ஆகவே அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அந்த உணர்வை உயிர் இயக்கும்படி நாம் பயிற்சியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

மற்ற தீமையான உணர்வுகள் வந்தாலும் அதன் மீது பற்று கொள்ளாது அருள் உணர்வைப் பற்றுடன் பற்றிக் கொள்ள வேண்டும். 

இதையெல்லாம் நாம் பழக்கப்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும்.