ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2017

குருநாதர் சொன்ன முறைப்படி ஞானிகளின் உணர்வை உங்களுக்கு அபிஷேகம் செய்கிறேன் - அதை எடுத்தால் உயிருக்கு நீங்கள் அபிஷேகம் செய்கின்றீர்கள் அவன் மகிழ்கின்றான்…!

குருநாதர் உங்கள் உயிரை எல்லாம் “கடவுளாக…” மதிக்கச் சொன்னார். உங்கள் உடலைக் கோயிலாக மதிக்கச் சொன்னார். உயர்ந்த சக்திகளை எடுத்து ஒவ்வொரு உயிருக்கும் “நீ அபிஷேகம் செய்…!” என்றார்.

கோயிலில் போய் பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் சந்தான அபிஷேகம் எல்லாம் நீங்கள் செய்கிறீர்கள் அல்லவா…?

அதே போல் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை எடுத்து நான் (ஞானகுரு) உங்களிடம் உபதேசித்துக் கொண்டிருக்கின்றேன். அப்பொழுது “உம்…” கொடுத்துக் நீங்கள் கேட்கும் பொழுது உங்கள் ஈசனுக்கு அபிஷேகம் நடக்கின்றது.

அப்போது அந்த மகிழ்ச்சியான உணர்வுகளைத் தனக்குள் வடித்துப் பிரம்மமாக வடித்து வைக்கின்றது.

அவ்வாறு அந்தச் சக்தியாக வடித்ததை
1.இதையே உங்கள் உயிரை ஈசனாக நினைத்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால்
3.அப்போது உங்கள் உயிரான ஈசனுக்கு நீங்கள் அபிஷேகம் செய்கிறீர்கள்.

அந்த உயர்வான சக்திகள் உங்கள் உடலுக்குள் உள்ள நல்ல குணங்களான தெய்வங்களுக்குக் கிடைக்கின்றது. உடலான சிவம் சந்தோஷமாகி நாம் என்னென்ன நினைக்கின்றோமோ அந்தந்த வேலையெல்லாம் செய்ய வைக்கும்.

அதே சமயத்தில் உங்கள் சொல்லுக்குள் மகரிஷிகள் உணர்வுகள் கலந்தவுடனே “சரஸ்வதி… ஞானம்...” சரஸ்வதி என்பது மணம்.

நீங்கள் பேசக்கூடிய உணர்வுகள் நாதம். மற்றவர்களுக்குச் சொல்லும் பொழுது அங்கே நமக்குத் தகுந்த மாதிரி இனிமையாகப் பேச வைத்து “நமக்கு உதவி செய்ய வைக்கும்.”

ஒரு அணு வேப்பமரத்தின் கசப்பை எடுத்துக் கொண்டால் அதை நாம் நுகரும் பொழுது “ஐய்யய்யோ…” என்று வாந்தி வரவழைக்கும். ஒரு ரோஜாப்பூவின் சக்தியை அதே மாதிரி ஒரு அணு எடுத்து வந்தால் அதை நுகர்ந்தவுடன் “ஆஹாஹா…” என்று சொல்லுகின்றோம்.

இதே போல மகரிஷிகளின் அருள் மணத்தை நாம் எடுத்துச் சுவாசிக்கும் பொழுது எல்லாவற்றிலும் இனிமையான நிலையை உருவாக்கி விடுகின்றது.

நம் உயிரான அந்த ஈசனிடம் இந்த உணர்வுகள் படும் பொழுது அந்த நறுமணத்தைச் சுவாசிக்கும் பொழுது நம்மை மகிழச் செய்கின்றது.

ஆனால்
1.கசப்பின் தன்மை வரும் பொழுது உயிரான ஈசனுக்கு நெளிவாகின்றது.
2.உடலுக்குள்ளும் நெளிவாகச் செய்கின்றது.
3.நெளியும் உணர்வை அதிகமாகச் சுவாசித்தால்
4.நெளிந்து திரியும் உணர்வின் உடலாக (உயிரினமாக) அது மாற்றி விடுகின்றது.

நாம் சுவாசிப்பது அனைத்தையும் உயிர் பிரம்மமாக இருந்து நம் உடலாகச் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கின்றான்.

ஞானிகள் சொன்னது… “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…!” சிருஷ்டிக்கும் ஆற்றல் நம் ஆறாவது அறிவுக்குள் உண்டு. நமக்குள் படைக்கும் சக்தி உண்டு.

இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ வகையில் புதிது புதிதாகப் படைக்கின்றார்கள்.

அதே போல மெய் ஞானிகள் காட்டிய அருள் வழி கொண்டு மெய் உணர்வுகளை நம் உடலிலே விளைய வைத்து
1.ஏழாவது அறிவான “சப்தரிஷி” என்ற நிலையில்
2.உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றும் நிலையை
3.நாம் படைக்க வேண்டும் – “படைக்க முடியும்…!”