ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2017

புலித் தோலில் உட்கார்ந்து மந்திரம் ஜெபிப்பவர்களின் கடைசி நிலைகள்

சில விஷத் தன்மைகளை முறிக்கும் உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ந்து பல மந்திர ஒலிகளாக மந்திரங்களைப் பாய்ச்சப்பட்டு இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்துக் கொண்ட பின் என்ன செய்கின்றது…! என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்னொரு மனித உடலின் வீரிய உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதற்கென்ற மந்திர ஒலியை எடுத்துக் கண் கொண்டு பார்த்தான் என்றால்
2.புலி அப்படியே தனக்குள் ஒடுங்கிவிடும்.

மனிதனுக்குள் வந்தபின் இதே மந்திரத்தால் தனக்குள் ஜெபித்து அதர்வண வேதம் என்ற நிலைகள் கொண்டு அதை எப்படிப் பக்குவப்படுத்துவது என்று பின் வந்த “அரசர்கள்…” செய்தனர்.

அதே நிலைகள் கொண்டு வந்து (சித்தர்கள் என்ற நிலையில்) காட்டிற்குள் போனால் இந்தப் புலிகள் ஒடுங்கும்.

இந்த மாதிரி மந்திரங்களைக் கற்றுக் கொண்டவர்கள் புலித் தோலை விரித்து வைத்து அந்தப் புலி எப்படி வீரிய உணர்வுகள் எடுத்ததோ இதன் மேல் அமர்ந்து சில மந்திரங்களை ஜெபிக்கின்றார்கள்.

அப்படி உட்கார்ந்து ஜெபித்தார்கள் என்றால் அந்தப் புலியினுடைய உணர்வுகள் இங்கே வந்தபின் புலியைக் கண்டால் எப்படி அஞ்சுகின்றனரோ இதைப் போல பிறர் அஞ்சி ஒடுங்கும் நிலை வருகின்றது.

இந்த இந்த மந்திரத்திற்கு இப்படிச் செய்தால் இப்படி என்று புலித் தோல்களை விரித்து வைத்து அதன் மேல் இருந்து சில ஜெபங்களைச் செய்தார்கள்.

அவன் உடலில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளை நாம் கேட்டோம் என்றால் நாம் அவர்களுக்கு அடிமையாக இருப்போம். இது வசிய மந்திரங்களில் எதன் மேல் உட்கார்ந்து எதைச் செய்வதென்று செய்தார்கள்.

எப்படிப் புலியின் தன்மை அடைந்ததோ புலியின் உணர்வுகளை இவர் நுகர்ந்தால்
1.இவர் எவ்வளவு பெரிய சித்தராக இருந்தாலும் சரி
2.(கடைசியில்) அவர் செத்தவராகத் தான் ஆகின்றார்.
3.இந்தப் புலியின் தன்மை ஆனபின் இந்தப் புலியின் மணமே வரும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு மற்றவர்களை இவர் ஒடுக்கக் கற்றுக் கொண்டாலும் இவர் வெளியிலே சென்றபின் மனிதனின் உணர்வு இவருக்குக் கிடைக்காதபடி இவரை அடிமையாக்கிவிடும்.
1.புலித் தோலில் உட்கார்ந்தார்.  
2.கடைசியில் புலிக் குட்டியாகத்தான் போவார்.
3.இது இவர்களுக்குத் தெரியாது.

குருநாதர் இதை எல்லாம் தெளிவாக்கினார்.  

என்னைச் சில காலம் மான் தோலில் புலித் தோலில் உட்கார்ந்து இந்த உணர்வின் மணங்கள் வரப்போகும் போது இதனால் மற்றவர்களை நீ  எப்படி வசியப்படுத்த முடிகின்றது…? என்று காட்டினார்.

முந்தி நான் (ஞானகுரு) மான் தோலை வைத்திருப்பேன். அது தனக்குள் எளிமையாகப் போகும் போது அப்புறம் புலித் தோலையும் வைத்திருந்தேன்.

அந்த உணர்வுகளை நுகரப்படும்போது அந்தப் புலியின் உணர்வுகள் வரப்படும் போது மற்றவர்களை எப்படி அடிமையாக்குகின்றது…? என்று காட்டினார் குருநாதர்.

நீங்கள் வந்தவுடனே இரண்டு வார்த்தை கேட்டால் போதும். நான் சொல்கின்ற மாதிரி பூனைக்குட்டி மாதிரி நீங்கள் வருவீர்கள். இது வசியம்.

சில மந்திரங்களுக்கு இப்படிப்பட்ட இந்தச் சக்தி உண்டு.

ஆளைப் பார்த்தவுடனே அவரை வசியம் செய்ததும் ஆஹா… மகான்…, “பெரிய மகான்…!” என்று நாம் போற்றலாம்.
1.ஆனால் அவரும் மகானாகப் போவதில்லை.
2.நாம் கேட்டவர்களும் மகானாகப் போவதில்லை.
3.உடலின் தன்மை கொண்டு நம் செயலை இழந்தது தான் மிச்சம்.

ஆனால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அகஸ்தியன் தன் தாய் கருவில் பெற்ற சக்தியால் நஞ்சை வென்றிடும் நிலை வரும்போது இவன் காட்டிற்குள் சென்றால் மற்ற உயிரினங்களோ மற்ற மிருகங்கள் எல்லாமே அடங்கிவிடுகின்றது.

அதுதான் அகஸ்தியனைக் காட்டு ராஜா என்பது.

அகஸ்தியனுடைய தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது மிருகங்கள் விஷ ஜெந்துக்களிலிருந்து தன்னைக் காத்ததுக் கொள்ள பல பச்சிலைகளையும் மூலிகைளையும்  அரைத்துத் தன் உடலில் பூசியது. அந்த மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.

அந்த மணங்கள் கருவிலிருக்கும் அகஸ்தியருக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது. அகஸ்தியனுக்கு அந்தச் சக்திகள் சந்தர்ப்பத்தில் உருவானது தான்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு காட்டு விலங்குகளுடன் செல்லப்படும் போது எல்லாமே ஒடுங்கிவிடும். இவன் உடலில் வெளிப்படும் மணத்தை நுகரும் காட்டு விலங்குகள் எல்லாம் அதனுடைய வீரியத்தன்மை குறைவதால் சாந்தமாக ஒடுங்கிவிடுகின்றது.

அகஸ்தியன் காட்டுக்குள் போகின்றான் என்றால் அவன் பின் படையே போகும். அதனால் அகஸ்தியனுக்குக் “காட்டு ராஜா…” என்று பெயரை வைத்தார்கள்.

காடு இருக்கின்றது என்றால் அனைத்திற்கும் ராஜா இவன். தன் வளர்ச்சியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் ஒளியான அணுக்களைசு சுவாசித்தவர்கள் தங்களுக்குள் வளர்த்து இன்று சப்தரிஷி மண்டலமாக அவன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.
1.நாம் எடுக்க வேண்டியது மெய் ஒளியான அகஸ்தியனின் உணர்வுகளைத்தான்…
2.மந்திர ஒலிகளை அல்ல.

ஆனால் மந்திர ஒலிகள் கொண்டு சுவாசித்து அதைப் பாய்ச்சிச் சித்துகள் செய்யலாம் என்றால் மீண்டும் இந்தப் பூமியில் தத்தளிக்க வேண்டியது தான்…!