ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 10, 2017

“எந்தத் தீமை வந்தாலும் வராது தடுக்க வேண்டும்… அதை நுகராதே…!” என்று உயிரான ஈசனிடம் டெலிபோன் செய்யும் (உயிரிடம் சொல்லித் தடுக்கும்) பயிற்சிக்கு நாம் வர வேண்டும்

இந்த உடலை நாம் எப்படிக் காக்க வேண்டும்? உயிரான ஈசன் துணை கொண்டு நாம் எதனை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்?

ஆறாவது அறிவால் தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றிய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து அதை உருவாக்குதல் வேண்டும். இந்த அருள் ஒளி பெறும் தன்மையே ஆலயம். நம் உடலே ஆலயம். நம் உணர்வே தெய்வம்.

எந்த உணர்வின் தன்மை எடுகின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப செயலாகின்றது. கோபமாக இருந்தால் காளி. சலிப்பு சஞ்சலம் என்றால் வெறுப்பும் வேதனை கொண்டு இதைப் போல ஒவ்வொன்றிற்கும் காரணப் பெயரை வைத்துள்ளார்கள் ஞானிகள்.

அந்த உணர்வின் இயக்கமாக நம் உடலை இயக்குகின்றது. தீமையான உணர்வுகளை நீக்க மகரிஷிகளின் உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.  நாம் பார்ப்போர் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

யார் யாரையெல்லாம் எண்ணுகின்றோமோ அவர்ககளின் உணர்வுகளும் இந்த உடலான குடும்பத்திற்குள் ஒன்றியே வாழுகின்றது.

ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும் நம்மைப் பார்த்ததும் ஐயா…! என்கிறான். காசைக் கொடுக்கின்றோம். நம் உடலான இந்தக் குடும்பத்தில் ஒன்றி விடுகின்றான்.

அடுத்தடுத்துக் காசு கொடுத்தவுடனே ஐயா…! என்று வருவான். உடனே காசு எடுத்துப் போடுவோம்.

இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் அவன் உடலில் எந்தத் தரித்திரம் ஆகி விளைந்ததோ அதெல்லாம் இங்கே உங்கள் உடலில் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அடப் பாவமே…! எல்லோருக்கும் தர்மத்தைக் கொடுத்தேன். கடைசியில் ஆண்டவன் என்னை ஓட்டாண்டி ஆக்கி விட்டான் என்பார்கள்.

நான் யாருக்கும் இல்லை என்று சொல்லவில்லை. ஆண்டவன் என்னை இப்படிச் செய்து விட்டானே…!

இன்று எல்லா ஆலயங்களுக்குச் செல்பவர்களும் எல்லா மதத்திலும் இப்படித் தான் “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…!” என்று ஆண்டவனைப் பழி சொல்கின்றனர்.

 ஆனால் நம்மை ஆள்பவன் யார்? அந்த ஆண்டவன் யார்…?

1.நாம் எண்ணிய உணர்வை உருவாக்குவதும் உயிரே.
2.அதை ஆள்பவனும் உயிர் தான்.
3.எண்ணியதை இறையாக்குகின்றான்.
4.உணர்வின் செயலாக உடலாக்குகின்றான்.

உணர்வின் ஆக்கமாக நினைவாக்கும் போது அதே வழியில் நம்மை நடத்துகின்றான் என்ற நிலையைத் தெளிவாக்கும் நிலைகளை மறந்து விட்டோம்.

அந்தப் பிச்சைக்காரன் வேதனைப்படுகின்றான் என்றால் அவனின் வேதனையின் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க என்ன வழி?

“ஓ..ம் ஈஸ்வரா…” என்று நம் உயிரான ஈசனை எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
3.முந்தி டெலிபோன் செய்து இருக்க வேண்டும்
4.யாரிடம்…?
5.தீமையோ வேதனையோ அதைப் போன்ற உணர்வுகள் வரக்கூடாது.. “அதை நுகர்ந்து விடாதே…” என்று உயிரிடம் சொல்ல வேண்டும்.

ஈசனிடம் சொல்லி அதை எண்ணி விட்டு,
1.மகரிஷியின் அருள் ஒளி அவனுள் பெற வேண்டும்.
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.அவன் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெற வேண்டும்.
4.அவன் வாழ்க்கை உயர்ந்திடல் வேண்டும்.
5.அந்த அருள் ஒளி அவனுக்குப் பெற வேண்டும் என்று எண்ணிக் காசை கொடுங்கள்.
அவன் பசிக்குப் போக்கலாம்.

ஆனால் ஏமாற்றும் நிலைகளில் வந்து “ஐயா பசிக்கிறது…!” என்பான். நம்மை ஏமாற்றி வாங்குவான். அவனுக்குக் கொடுக்காதீர்கள். அவனுக்கு நல் வழி போதியுங்கள். நல் வழி செல் என்று கூறுங்கள்.

ஏனென்றால் பிச்சைக்காரன் எடுக்கும் தரித்திரமான உணர்வுகள் உற்றுக் கேட்கும் போது இந்த உணர்வே பதிந்து விடுகின்றது. பதிவான பின் அது நமக்குள் இயக்கமாகி நம்மையும் அந்த நிலைக்கு இயக்கத் தொடங்கிவிடுகின்றது. 

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மாறுபடுதல் வேண்டும்.