ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 25, 2017

நல்லதாக இருந்தாலும் சரி… கெட்டதாக இருந்தாலும் சரி… திரும்பத் திரும்ப ஒன்றை எண்ணி அதையே மீண்டும் மீண்டும் பேசினால் “அது தான் நமக்கு முன்னாடி ஆன்மாவில் நிற்கும்” – விளக்கம்

இப்போது நம்மை ஒருவர் திட்டிவிட்டால் நாம் என்ன நினைக்கின்றோம்…? என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்றே நாம் பேசுகின்றோம்.

இந்த உணர்வின்தன்மை நாம் ஜெபிக்கப்படும் போது சூரியனின் காந்தப்புலனறிவுகள் சும்மா இருப்பதில்லை. பேசுவதை எல்லாம் அது எடுத்து அலைகளாகக் கவர்ந்து கொள்கின்றது.

என்னை இப்படிப் “பேசினார்கள்… பேசினார்கள்…” என்று சொன்னால் அது அவர்கள் காதில் விழுந்தது என்றால் அவர்கள் நம்முடன் சண்டைக்கு வருவார்கள்.

கேட்கவில்லை என்றாலும் இந்த உணர்வின் சத்தைக் காந்த அலைகள் இழுத்து நம் உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டே இருக்கும்.
1.இதை மீண்டும் மீண்டும் எண்ண எண்ண
2.விளைய வைத்தது எல்லாவற்றையும் உடல் இழுத்து வைத்துக் கொள்ளும்.
3.நமக்குப் (உடலுக்கு) பின்னாடி முன்னாடி இதுதான் நிற்கும்.

இப்படி இந்த உணர்வுகள் நமக்கு முன் நின்று கொண்டே இருந்தால் “என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… அவன் மோசமானவன்…!” என்று சொல்லிக் கொண்டேயிருப்போம்.

இப்படி பேசினான் என்று சொல்லும்போது வேறு என்னென்னமோ கலந்து நாம் பேச ஆரம்பித்து விடுகின்றோம். இந்தப் பேச்சின் தொடர்கள் அனைத்தும் வெறுப்பை ஊட்டும் உணர்வாக வந்துவிடுகின்றது.

வெறுப்பு கொண்டு பேசுவது அனைத்தையும் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொண்டு
1.நாம் பேசப் பேசப் பேச
2.நம் உடல் பக்கம் முன்னாடியே நிறுத்திவிடும்.
3.முன்னாடி நின்றவுடனே என்ன செய்கின்றோம்?
4.மீண்டும் எங்கே பார்த்தாலும் அந்த நினைவு தான் வரும்.

வெறுப்பான நிலைகளில் இருந்தால் பெண்கள் சமையல் செய்யும் பொழுது குழம்பு வைக்கும் போது பார்க்கலாம்.

எந்தக் குணத்தின் அடிப்படையில் வெறுப்பாக இருக்கின்றீர்களோ – எரிச்சலான நிலைகள் இருந்தால் மிளகாயை அதிகமாகப் போட்டுவிடுவீர்கள்.

“என்னை இப்படியே பேசி கொண்டு இருக்கின்றார்களே…,” என்று வேதனையான நிலைகள் இருந்தால் உப்பை அதிகமாகப் போட்டு விடுகின்றீர்கள்.

உங்களை அறியாமல் உப்பை கையில் அள்ளிப்போட வைக்கும். வேண்டும் என்றால் பாருங்கள்.

சங்கடப்பட்டு நீங்கள் எதை எதை வெறுக்கின்றீர்களோ அன்றைக்குக் குழம்பு வைக்கும்போது உப்பை அதிகமாகப் போட்டு விடுவீர்கள். என்ன உப்பு இப்படி அதிகமாக இருக்கின்றது…? என்று வீட்டில் சண்டை வரும்.

கோபமாக இருந்தீர்கள் என்றால் இரண்டு மிளகாயாவது கூடச் சேர்த்துப் போட்டு விடுவீர்கள். அப்பறம் எரிச்சலாக இருக்கும்.

அதே மாதிரி நீங்கள் சலிப்பு சஞ்சலத்துடன் இருந்தால்  சீரகத்தை அதிகமாக அள்ளிப் போட்டு விடுவீர்கள். சீரக வாசனை அடித்தால் உமட்டலாகும்.

அந்தந்தக் குணத்திற்குத்தகுந்த மாதிரி அன்றைக்கு குழம்பு வைக்கச் சொல்லும். குழம்பின் சுவையும் அப்படித்தான் இருக்கும்.

ஒருவரிடம் அன்றைக்குச் சலித்துப் பேசினீர்கள் என்றால் புளிக் குழம்பு வைக்கவேண்டும் என்று சொல்லச் சொல்லும். ஆனால் புளியை அதிகமாகக் கரைத்துவிட்டு உப்பைக் குறைத்துவிடுவீர்கள். கடைசியில் புளிப்பு அதிகமாகிப் போய்விடும்.

ஏனென்றால் சலிப்பை ஜாஸ்தி எடுத்துக் கொண்டால் நிச்சயம் புளிக் குழம்பு தான் வைக்க வேண்டும் சாதித்துப்
1.புளிக் குழம்பை உங்களை வைக்க வைத்து விடும்.
2.வைத்தாலும் உப்பு போடாமல் விட்டு விடுவீர்கள். புளி ஜாஸ்தி ஆகிவிடும்.
3.வேண்டும் என்றால் உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.

(சலிப்பாக இருக்கும் பொழுது) அதே போல் இட்லியையை புளிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து உப்பு போட்டுக் கரைத்து வைத்தால் மறுநாள் காலையில் இட்லி புளித்துக் கொண்டு இருக்கும்.

அப்பறம் இட்லியைத் தின்றால் “கல்..” மாதிரி ஆகிப் போகும்.

“ஐய்யய்யோ…! நான் சரியாகத் தானே போட்டேன் இப்படி ஆகிவிட்டது என்பார்கள். அந்தந்தக் குணத்திற்குத் தகுந்தவாறு நாம் எடுத்துப் பேசும் உணர்வுகள் துரித நிலைகள் கொண்டு இவ்வாறு இயக்கிவிடும்.

மனிதனுடைய ஆற்றல் அந்த அளவிற்கு உள்ளது.

திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப குறையான உணர்வுகளைப் பேசும் போது இந்த உணர்வுகள் இப்படி வந்து விடுகின்றது. இதைப் போலானாலும் கூடப் பரவாயில்லை. நம் உடலில் சாப்பிட்ட ஆகாரத்தையும் இந்த நிலைக்கு ஆக்கி விடுகிறது.

வியாபாரத்தில் போய் உட்கார்ந்து சரக்கை எடுத்து விலையைச் சொன்னோம் என்றால் நாம் எந்த புளிப்பாக இருக்கின்றோமோ வாடிக்கையாளர்களையும் சலிப்பாக எண்ண வைக்கும்.

துணியை காட்டினல்… “என்ன துணி இது..? போ…!” போய்க்கொண்டு இருப்பார்கள்.
1.நம் சொல் அவர்கள் காதில் கேட்டு
2.இந்த உணர்வு கண்ணிலே பார்த்தவுடன்
3.அந்தச் சரக்கை மட்டமாகச் சலிப்பால் புளிப்பாக அந்த உணர்வு போகச் சொல்லிவிடும்.

அதே மாதிரி வெறுப்பான எண்ணங்களைப் பேசி பேசி இந்த அலைகள் எனக்கு முன்னால் இருக்கும் பொழுது நாம் அடுத்தவர்களிடம் பேசும் பொழுது  இதுவும் கலந்து தான் வரும்.

நண்பர்களிடம் பேசும்போது நாம் ஏதாவது சந்தோஷமாக சொல்லப் போனோம் என்றால் அவர் காதில் கேட்டவுடனே வெறுப்பாக இருப்பார்கள். நாம் பேசுவதெலாம் அவருக்கு வெறுப்பாக இருக்கும். கூட ஏதாவது பேசினால் இன்னும் கொஞ்சம் வெறுப்பாகி விடும்.

நாம் சுவாசித்ததே நமக்கு வாகனமாக வருகின்றது என்பதற்காகத்தான் மூஷிகவாகனா  என்று காட்டுகின்றார்கள். நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

நான் மாம்பழத்தை தேட வேண்டும் என்கிறபோது மாம்பழத்தைத் தேடிப் போகின்றேன். ஒருவனை உதைக்க வேண்டும் என்கிற போது அவனைக் குறி பார்த்துப் பேசித் தேடிக்கொண்டே போகின்றேன்.

இதே போல் நாம் எண்ணிய நிலைகளை அதைச் சுவாசிக்கும் போது மூஷிக வாகனா…! நாம் சுவாசித்த இந்தக் குணம் இந்த உடலை அழைத்துச் செல்லுகின்றது.

இவ்வளவு பக்குவமாக ஞானிகள் கொடுத்திருக்கின்றார்கள். ஆகையினால் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்? எதை நம் வாகனமாக்க வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் ஞானிகளின் அருள் வித்தை உங்களை எண்ண வைக்கின்றேன். அந்த எண்ணத்திற்குண்டான அருள் வித்தைப் பதிக்கின்றேன்.

அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று நீங்கள் எண்ணப்போகும் போது உங்களுக்கு அதைக் கிடைக்கும்படி செய்கின்றோம்.

அதை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொண்டால் சந்தர்ப்பத்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் அடக்கி நல்லதாக மாற்றுகின்றது. 

உங்கள் சொல் செயல் பேச்சு மூச்சு பார்வை அனைத்தும் புனிதம் அடைகின்றது. மகிழ்ந்து வாழும் அருள் சக்தி கிடைக்கின்றது. செய்து பாருங்கள்.