ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 5, 2017

“நம் உடல்” என்று எண்ண வேண்டியதில்லை… “உயிரால் உருவாக்கப்பட்டது” – நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவோம் என்று சபதம் எடுப்போம்

உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலைச் சிவமாக மதியுங்கள் கண்ணைக் கண்ணணாக மதியுங்கள்.

நம் கண்கள் நல்லது கெட்டதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. கெட்டது என்று பார்க்கும் பொழுது அந்தக் கெட்டதை நீக்குகின்றோம்.

கண்களால் பார்த்துத்தான் புறப்பொருள்களில் உள்ள கெட்டதை அறிந்து பின் அதை அகற்றுகின்றோம்.
1.புறப்பொருளில் கெட்டதை அகற்றுவது போல
2.நம் ஆன்மாவிலும் உடலிலும் சேர்ந்த தீமையான உணர்வுகளை
3.மகரிஷிகளின் அருள் ஒளியால் துடைத்துப் பழகுங்கள்.

உடலான சிவத்திற்குள் தீமையான உணர்வுகள் சேர்ந்ததும் நோயாக வளருகின்றது. உடலான சிவத்திற்குள் கெட்ட சக்திகள் வராதபடி அதைத் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.யாருடைய உடலோ…! என்று எண்ண வேண்டாம்.
2.உங்களுடைய உடல்…! என்று எண்ண வேண்டாம்.
3.உயிரான நிலைகள் இத்தனையும் உடலாகப் படைத்து
4.நமக்குள் செயலாக்கும் நிலைகள் கொண்டு இயக்குகின்ற அந்தச் சக்தியே உயிர் தான்…” என்று உணர்ந்து
5..இந்தப் பொறுப்பினை எடுத்துக் கொண்டால் நாம் புனிதத் தன்மை பெறலாம்.

அதைத் தெரிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் நான் யார்? தான் யார்? இந்தப் பிள்ளை யார்? என்று பிள்ளையார் சுழி போட்டுக் காட்டுகின்றார்கள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைக்களுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலைக் கொடுத்தது உயிர். நமக்குள் இருக்கக்கூடிய கணங்களுக்கு எல்லாம் ஈசனாக இயக்குவது உயிர்.

மூஷிகவாகனாநாம் எந்தெந்த குணங்களைச் சுவாசித்தோமோ அந்த உணர்வுகலே வாகனமாக நேற்றைய செயல் இன்றைய சரீரமாக உருவாக்கி வைத்திருக்கின்றது. ஈசன்.

கணங்களுக்கு அதிபதியாக கணபதியாக இருப்பதும் உயிர் தான். எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதை அதிபதியாக்கி மற்ற உணர்வுகளை ஒடுக்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றான் உயிர்.

இவை எல்லாம் யார்…? இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…!

நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு உடலானது. உடலின் நிலைகளிலிருந்து நமக்குள் உள் நின்று அவன் இயக்குகின்றான்.

நுகர்ந்த உணர்வுகள் உடலாக ஆனாலும் அது அது தன் தன் உணர்வைக் காக்கும் நிலையாக (உடலைக் காக்கும் உணர்வுகள்) அதனின் வழிக்குச் செல்லாது
1.உயிரான ஈசனின் அருளைப் பெறுவோம்
2.உயிருடன் ஒன்றி நாம் என்றும் நிலையான சரீரம் பெறுவோம்
3.இருளை வென்று பேரொளியாக ஆன மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம்
4.நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக நாம் பெறுவோம் என்று சபதம் எடுப்போம்.

ஆகவே நமக்குள் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் நோய்கள் வந்தாலும் நம்மை அணுகாது தடுக்க மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை உங்களுக்கு வெறும் சொல்லாகச் சொல்லவில்லை. அருள் மருந்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இதை எண்ணி எடுக்கும் பொழுது உங்கள் துன்பத்தைப் போக்க இது உதவும். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இப்படித்தான் அருளினார். அதைத்தான் உங்களுக்குள் பதியச் செய்கின்றேன்.

நம் எண்ணத்துக்குள் தான் அனைத்தும் உள்ளது. எந்த நிலையைப் பெறவேண்டும் என்று நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதுவாக ஆகின்றீர்கள்.

வாழ்க்கையில் துன்பத்தைத் துடைக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவீர்கள். தன்னுள் அறியாது வந்த இருளை நீக்குவீர்கள்; மெய் ஒளி காண்பீர்கள்; மெய் வழி செல்வீர்கள்; மெய் ஒளி பெறுவீர்கள். 

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் நிலையான பெரு வீடு பெரு நிலையாக அனைவரும் பெறவேண்டும் என்று பிரார்த்தித்திக்கின்றேன்.