ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2017

நிலையான ஆயுள் ஹோமம் எது…?

ஒன்றும் அறியாத மூடனான இரக்கமற்ற வான்மீகி சந்தர்ப்பத்தால் பட்சியின் மூலமாகத் தான் நுகர்ந்த உணர்வுகளால் மெய் ஒளி பெறும் தகுதியைப் பெற்றான். தனக்குள் மெய்யை வளர்த்துக் கொண்டான்.

தனக்குள் விளைந்த அந்த உணர்வின் ஆற்றலால் அவன் இராமாயணக் காவியத்தையே வெளிப்படுத்தினான். அவன் எப்படி வெளிப்படுத்தினானோ அதைப் போன்ற நிலைகளைத்தான் உங்களிடம் இப்போது சொல்வது.

1.மெய் ஞானிகளின் உணர்வின் ஒளி அலைகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே
2.அவர்கள் உணர்வின் எண்ண அலைகளை உங்கள் கண்ணிற்குள் பாய்ச்சச் செய்து
3.மெய் உணர்வின் ஒலியைத் தட்டி எழுப்பச் செய்கின்றோம்.

உங்களுக்குள் பதிவாக்கும் அந்த ஞான வித்தை வளர்க்கும் விதமாக விண்ண நோக்கி ஏங்கித் தியானித்து அந்த ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் பெருக்க வேண்டும்.

அதைப் பெறவேண்டும் என்ற அந்த உணர்வை நீங்கள் ஈர்ப்பீர்களேயானால்
அந்த மெய் ஒளியைக் காணும் தகுதி நீங்களும் பெறுவீர்கள். ஆகையினாலே உங்களை நம்புங்கள்.

இப்போது
1.சாமியை நம்புகின்றீர்கள்.
2.சாமியாரை நம்புகின்றீர்கள்
3.ஜோசியத்தை நம்புகின்றீர்கள்
4.மந்திரத்தை நம்புகின்றீர்கள்
5.ஆயுள் ஹோமம் செய்கின்றீர்கள்.

அதை எல்லாம் செய்து எதுவும் ஆவதில்லை.

ஒவ்வொரு நிமிடமும்
1.அந்த ஞானியின் அருள் ஒளியைப் பெறுவேன்.
2.அந்த அருள் சுடரை நான் பெறுவேன் என்ற
3.இந்த ஹோமத்தைச் செய்தால் உங்களுக்கு நிலையான ஆயுள் ஹோமம் இதுதான்.

ஞானிகள் வெளிப்படுத்திய அந்த உணர்வின் ஒளிகள் இந்தக் காற்றில் இருக்கின்றது. ஒளியின் நிலையாக அதைப் பெற்று நமக்குள் அந்த ஞான வழியின் தொடர் கொண்டு நம்மைச் சார்ந்தோருக்கும் அதைப் பாய்ச்சிடல் வேண்டும்.

ஹோமத்தின் நெருப்பிலே இடப்பட்ட பொருளின் தன்மை கருகி அதன் மணத்தின் தன்மை சுழல்வது போல உங்களுக்குள் வரும் தீயதை மாற்றிவிட்டு மெய் உணர்வாகப் படைக்கும் நிலைகள் பெற முடியும்.

1.படைக்கும் பிரம்மமாக நமக்குள் இயங்கிக் கொண்டு இருக்கும் உயிரின் துணை கொண்டு
2.அந்த உயிரின் நெருப்புக்குள் ஞானியின் அருள் ஞான வித்தை
3.உயர்ந்த சரக்கான (ஞானிகளின் உணர்வுகளை) ஹோமமாக நாம் போடும் நிலைக்குத்தான் இதைச் செய்கின்றோம்.

இதுதான் நிலையான ஆயுள் ஹோமம். புற நிலைகள் கொண்டு தீயிடும் நிலை அது ஹோமம் அல்ல.

சிலருக்குத் தெளிவாகவில்லை என்பததற்காகப் பல ரூபங்களிலும் உங்களுக்கு விளக்கமாகக் கொடுக்கின்றோம்.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் கோணத்தில் அது எக்கோணத்தில் பார்த்தாலும் அவர்கள் நிலைக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வழிகளிலும் மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளை உணர்த்திக் கொண்டு வருகின்றோம். 

ஏனென்றால் புத்தகத்தைப் படித்து யாம் சொல்லவில்லை. குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து விளைய வைத்து அதன் வழியில் அனுபவபூர்வமாக உணர்ந்த மெய் உணர்வுகளைத்தான் வெளிப்படுத்துகின்றோம்.