ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2017

“உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய்…” என்ற நிலையை மாற்றி “உன்னாலே நான் நல்லதானேன் என்னாலே நீ நல்லதானாய்…” என்ற நிலைக்கு மாறவேண்டும்

ஒரு நண்பர் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனைகளை நம்மிடம் சொல்லும் பொழுது அவர் வாழ்க்கைக்கு நல்ல வழி காட்டுகின்றோம்.

வழி காட்டிய நிலைகளில் அவர் கஷ்டங்களை நாமும் கேட்டு அறிந்து கொண்டோம். அறிந்து கொண்டாலும் அவர் வாழ்க்கைக்கு நல்ல வழி வகுக்கின்றது. இந்த வழியில் செயலின் தொடரை நாம் செய்கின்றோம்.

ஆனால் அடுத்து நாம் நம் தொழிலுக்குச் செல்லும் பொழுது இந்த வேதனைப்பட்ட மனம் கூடவே நிற்கும். நல்ல மனதில் படும் இந்த வேதனையைச் சுத்தப்படுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

சுத்தப்படுத்துகின்றோமா…!

நண்பருக்கு நல்ல வழிகாட்டிவிட்டோம். ஆனால் நாம் கேட்டறிந்த வேதனையை அடுத்த நிமிடமே சுத்தப்படுத்திவிட்டு இனி உன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சொன்னால் நாம் சொல்வதை அவரும் ஏற்றுக் கொண்டால் அங்கே சிறப்பாகின்றது. அவருக்கு லாபமும் வருகின்றது.

ஆனால் “ஐயோ…! இப்படிக் கஷ்டப்படுகின்றாயே… என்று எண்ணி..,
1.“இந்தா இந்தப் பணத்தை வைத்துக் கொள்” என்று சங்கடப்பட்டுக் கொடுத்தால் சங்கடமே வரும்.
2.வேதனையான உணர்வுகள் தான் வரும். அவரும் வேதனையுடன் தான் வாங்குவார்.
3.இந்த ஒலியின் மாற்றங்கள் இந்த வேலையைச் செய்யும்.
4.இரண்டு பேரும் கெட்டோம். உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று தோப்புக்கரணம் போட வேண்டியது தான்.

இதுவெல்லாம் இயற்கையின் செயலின் நிலைகள். “உணர்வின் இயக்கங்கள்” தான் இவைகள்.

உணர்வின் இயக்கமாக நாம் செல்லாமல் ஞானிகள் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் வலுக் கூட்டி அந்த அருள் உணர்வுடன் அவரிடம் சொற்களை வெளிப்படுத்தினால் அவருடைய கஷ்டமோ துயரமோ வேதனையோ நமக்குள் வராது.

அவரால் நாம் ஞானிகளின் உணர்வை அதிகமாக நுகர்கின்றோம். அந்த உணர்வுடன் அவருக்கு உதவியும் செய்கின்றோம்.

அப்பொழுது அவருக்குள்ளும் ஞானிகளின் உணர்வுகள் இணைகின்றது. அவரும் தீமைகளை வென்றிடும் ஆற்றல் பெறுகின்றார்.

இரக்கப்படுவது மட்டும் முக்கியமல்ல. நாம் செய்யும் உதவி நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயப்பதாக இருத்தல் வேண்டும். 

இது மிகவும் முக்கியம்.