ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2017

இந்த உடலை இழந்தால் அடுத்து மனித உடல் பெற பல கோடி ஆண்டுகள் ஆகும்...! ஏன்...?

நாம் எத்தகைய தீமையைக் கேட்டுணர்ந்தாலும் யாம் உபதேசிக்கும் அருள் உணர்வின் துணை கொண்டு நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று பல முறை எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும்
1.வரும் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும்
2.துயர் பட்ட நிலைகள் இருந்தாலும் வேதனைகள் இருந்தாலும்
3.இதற்கு முன் நம் உடலில் அறியாது சேர்ந்த பல உணர்வுகள் இருந்தாலும்
4.இன்னல்களால் விளைந்த நோய்கள் இருந்தாலும்

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீயவினைகள் நீங்க வேண்டும்
4.சர்வ நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணித் தியானியுங்கள்.

எத்தகைய தீமையாக இருந்தாலும் அதை மறக்க இவ்வாறு செய்யுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுங்கள்.

எனக்கு வந்த தீமை மற்றவர்களுக்கு வரக்கூடாது. உலக மக்கள் அனைவரும் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் பரப்புங்கள்.

நாம் ஒவ்வொருவரும் இதைச் செய்வோம் என்றால் இந்த உலகில் உள்ள நஞ்சான நிலைகள் மாறும். பத்தாவது நிலையாக கல்கி தீமை அகற்றும் உணர்வு நமக்குள் விளையும்.

ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் விளைந்த உணர்வு கொண்டு உடலை விட்டு அகன்றாலும் தீமையற்ற உலகில் நாம் வாழ்ந்திட முடியும். இங்கேயும் வாழ்ந்திட முடியும்.

1.எப்போதும் தீமைகள் நம்மை நாடாத  நிலைகள் கொண்டு
2.என்றும் அழியாத ஒளிச் சரீரமாக நிச்சயம் நாம் பெற முடியும்.
3இந்த உடலை வைத்துதான் அந்த நிலை பெற முடியும்.

இந்த உடலை இழந்துவிட்டு நஞ்சால் இழக்கப்பட்டால் நஞ்சின் செயலாக மாறி மீண்டும் அந்த நஞ்சான சரீரத்திலிருந்து மீண்டிடப் பல கோடிச் சரீரங்கள் ஆகலாம்.

அது வரையிலும் இந்தப் பூமி இருக்குமோ… மனிதனாகப் பிறப்போமோ…! என்று சொல்ல முடியாது.

மனிதனாகப் பிறந்தோம், மனிதனாக வாழவேண்டும். இந்த உடலிலே தீமைகள் அகற்றும் உணர்வை விளைய வைக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

இந்த வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தகைய தீமைகளைப் பார்த்தாலும் உடனுக்குடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒட்டு மொத்தமாகச் சுத்தப்படுத்துவேன் என்றால் முடியாது.

இரவிலே படுத்துத் தூங்கும் போதெல்லாம் அதற்கு முன் உங்களால் எவ்வளவு தூரம் எண்ண முடியுமோ அந்தத்  துருவ நட்சத்திரத்தினை எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.


துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று உங்கள் உடலைத் தூய்மைப்படுத்துங்கள். இந்த உணர்வின் நினைவாற்றலை உடலுக்குள் செலுத்துங்கள்.

இதற்கு முன் கேட்ட பதிவு செய்த தீய உணர்வுகளைப் பிளந்து தள்ளுங்கள். கல்கி பத்தாவது நிலையான ஒளி நிலை அடையுங்கள்.