ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 17, 2017

சாங்கியப்படி செய்யும் வளைகாப்பால் பிறக்கும் குழந்தையின் எதிர்காலமும் வேதனையாகின்றது – அதை மாற்றும் வழி என்ன?

கர்ப்பமாக இருக்கும் போது சாங்கியப் பிரகாரம் என்ன செய்ய வேண்டும்? அந்த ஏழாவது மாதம் வளைகாப்பு செய்ய வேண்டும்.

உங்கள் அப்பன் வீட்டிலிருந்து என்ன செய்கிறார்கள்..? ஏது செய்கிறார்கள்….? என்று கேட்பார்கள். ஒரு தங்க மோதிரமும் தங்கத்திலே ஒரு வளைகாப்பும் செய்ய வேண்டும்.

கூட்டங்களைக் கூட்டிச் சொந்தக்காரர்களுக்கு எல்லாம் வித விதமான சாதம் கொடுக்க வேண்டும் என்பார்கள்.

இது தான் வளைகாப்பு….! என்று இப்படித்தான் அனைவரும் நினைக்கின்றோம் செய்தும் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் கருவுற்ற பெண்ணுக்கோ தன்னுடைய தாய் தகப்பன் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தெரிகின்றது.

நமக்காக வேண்டி இப்படிச் செய்கின்றார்களே… கஷ்டப்படுகின்றார்களே…! என்று தான் அந்தப் பெண் வேதனையுடன் எண்ணுகின்றது.
1.அந்த வேதனைப்படும் உணர்வைத்தான்
2.கருவில் இருக்கும் குழந்தைக்கு வளைகாப்பு செய்கின்றோம்.

அதிலே இன்னொன்று என்ன செய்கின்றோம்…?

1.தங்கத்தில் மோதிரமோ வளையலோ செய்யவில்லையே என்றால் அது ஒரு வேதனையும்
2.செய்தாலும்… இதில் என்னென்ன செய்தார்கள் என்று எண்ணிச் சங்கடப்படுவதும்
3.பெரிதாக என்னத்தைச் செய்து விட்டார்கள் என்ற வகையிலும் குறைகளைச் சொல்வார்கள்.

மருமகள் மேல் கொஞ்சம் பிரியம் இருந்தால் “சரி பரவாயில்லை…!” என்பார்கள். மருமகள் மேல் கொஞ்சம் பிரியம் குறைவாக இருந்தால் என்ன… பெரிதாகச் செய்துவிட்டார்கள்…, என்று குறையாகச் சொல்வார்கள்.

தன் மகன் மீது பிரியமாக இருந்தால் அந்த மருமகளைச் சீராகக் கவனிப்பார்கள். மகன் மீது சற்றுப் பற்று இல்லை என்றால்
1.அவன் சம்சாரத்தைக் கேலி செய்து கிண்டல் செய்து பேசுவது தான் இன்று நாட்டு வழக்கத்தில் உள்ளது.
2.மகன் மேல் வெறுப்பு இருந்தது என்றால் மருமகளையும் சேர்த்துப் பேசுவார்கள்.

இந்த கர்ப்பமான நேரங்களில் பல குறைகளை… அப்படி இருந்தான்… இப்படி இருந்தான்… இந்த மாதிரி இருந்தான்… என்ற நிலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசுவார்கள்.

இதையெல்லாம் கருவுற்ற அந்தத் தாய் நுகர்ந்தால் என்ன உண்டாகும்…? வேதனையும் வெறுப்பும் தான் உண்டாகும்.

நல்லதைப் பெற முடியாத நிலைகளாகத் தாய் ஆன்மாவில் அது பெருகுகின்றது. தாய் கருவில் இருக்கக்கூடிய குழந்தையின் ஆன்மாவிலும் இது பெருகுகின்றது.

இதுவும் வளைகாப்பு தான். இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடும் நிலைக்குப் பெரும் பகுதி பெண்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

தாயாக இருக்கும் அவர்கள் தன் குழந்தைக்கு நல்ல விதத்தில் செய்ய வேண்டும் (தன் குழந்தையாக இருந்தால்) என்று எண்ணுகின்றது.

அதே சமயத்தில் “மருமகள்…” என்றால் அந்நியம் என்ற நிலைகள் பார்க்கப்படுகின்றது.  அந்தப் பாகுபாடான நிலைகள் வரும் பொழுது வெறுப்பின் உணர்வே வளர்க்கப்டுகின்றது.

ஆக அதன் வழிகளில் கர்ப்பமாக இருக்கும் பெண் வேதனையையும் சங்கடத்தையும் துயரத்தையும் தான் வளர்க்கின்றது.

கருவில் வளர்வது பெண் குழந்தையாக இருந்தால் இந்தத் தாய் எத்தகைய வேதனைப்பட்டதோ அது பூர்வ புண்ணியமாக அமைந்துவிடுகிறது.

குழந்தை பிறந்து வளர்ந்தபின் இது எந்த வீட்டிற்குத் திருமணம் செய்து சென்றாலும் எந்த குடும்பத்திற்குப் போனாலும் அந்தப் பூர்வ புண்ணியத்தின் வழிப்படி
1.இந்தப் பெண்ணின் உணர்வுகள் சொற்கள் எதிர் நிலையாக அமைந்து
2.அந்தக் குடும்பங்களில் பெரும் சிக்கல் ஏற்படும்.

ததாய்க் கருவில் இருக்கும் போது எத்தகைய நிலை பெற்றதோ அந்தப் பூர்வ புண்ணியம் பிரகாரம் அதன் வாழ்க்கையே நசிந்து அதனால் பல தொல்லைகள் படுகின்றது. வேதனைகள் படுகின்றது.

இதிலிருந்தெல்லாம் மீள வேண்டுமா இல்லையா…? ஜாதகத்தையும் மந்திரத்தையும் மற்றதையும் தான் எண்ணிக் கொண்டுள்ளோமே தவிர ஞானிகள் காட்டியதை நாம் சிந்திக்கின்றோமோ…!

ஞானிகள் காட்டிய நிலைகள் வளைகாப்பு என்றால் அங்கே குழுமியுள்ள அனைவரும்
1.கருவிலே வளரும் குழந்தைக்கு அருள் ஞானம் பெற வேண்டும்.
2.உலக ஞானம் பெற வேண்டும்.
3.உலகைக் காத்திடும் அருள் ஞானம் பெற வேண்டும்.
4.மகரிஷிகள் அருள் வட்டத்தில் வாழ்ந்திடல் வேண்டும்.
5.அந்த அருள் சக்தி அந்தக் கருவிலே விளைய வேண்டும்.
6.இந்தக் கர்ப்பிணி  மகரிஷிகள் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்
7.அதன் வாழ்க்கையில் அந்தப் பேரருளைப் பெறும் அருள் சக்தி பெற வேண்டும்.
8.அதற்குப் பாதுகாப்பான நிலை பெற வேண்டும்.
9.கருவில் வளரும் அந்தச் சிசுவிற்கு உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும் என்று
இவ்வாறுதான் எண்ணுதல் வேண்டும்.

இதைச் செய்தால் தாய்க்கு மகிழ்ச்சி கணவனுக்கு மகிழ்ச்சி எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாகும். பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடனும் அறிவின் ஞானத்துடன் பிறக்கும்.

அது வளர்ந்து எங்கே சென்றாலும் அதே ஞானத்தின் வழித் தொடரில் தன்னை அறிந்து உலகை அறிந்து எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாக வரும்.

மகிழ்ச்சியான சமுதாயமாக உருவாகும். செய்து பாருங்கள்.