ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 21, 2017

மகரிஷிகளின் அருளைப் பெறவேண்டும் என்று வேண்டினால் - நம் உயிரான ஈசன் பார்த்துக் கொள்வான்

மகரிஷிகளின் அருளைப் பெறவேண்டும் என்று வேண்டினால் - நம் உயிரான ஈசன் பார்த்துக் கொள்வான்

எந்த நேரத்திலும் எதனின் நிலைகள் கொண்டாலும் நாம் ஒவ்வொரு நிமிடமும் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரிடம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.இங்கே புருவ மத்தியில் வேண்ட வேண்டும்.
2.அந்த உணர்வு உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் பரப்ப வேண்டும்.
3.அப்பொழுது உயிரான ஈசன் - அவன் பார்த்துக் கொள்வான்.

அதை விடுத்து நாம் “எனக்கு இது தேவை… அது தேவை…” என்றும் “நான் இன்னாருக்கு நல்லது செய்தேன்… ஆனால் எனக்குத் தீமை செய்தான்…,” என்றால் நம்மை இருள் சூழ்ந்த நிலைக்கே அழைத்து செல்லும்.

ஆகையினால் எந்த நல்லதைச் செய்தேனோ அந்த நல்லதின் தன்மைகள் அங்கே விளைதல் வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் எண்ணுதல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வினை அதனுடன் வலு சேர்த்துக் கொண்டு இதை நாம் வலுப்படுத்தினால்
1.நமக்குள் தீமை விளையாது.
2.நம்மைப் பார்க்கும்போதே தீமையை விளைவிக்கும் நிலைகள் அங்கே ஒடுங்கும்.

இதுதான் நரசிம்மா. வாசல்படி மீது அமர்ந்து (சுவாசிக்கும் இடம்) நமக்குள் நுகரும் சக்தி இங்கு வராதபடி இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமையை விளைவிக்கும் எண்ணங்கள் நமக்குள் உருவாகாது.
2.தீமையை விளைவிக்கும் வித்து இங்கே உருவாகாது.
3.அது வினையாக வராது. வினைக்கு நாயகனாக இதை ஏற்காது.

அதைத்தான் கோதண்டத்தை முறித்த பின் சீதாவைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா என்று காட்டுகின்றார்கள். 
அதாவது தீமை செய்யும் உணர்வுகளை முறித்துவிட்டால் “மகிழ்ச்சியைத் தனக்குள் அரவணைத்துக் கொள்ள முடியும்…” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.