ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2017

கல்கி – “பறக்கும் நிலை” பெற்று விண் செல்வோம்

ஒரு வயலைப் பண்படுத்தியது போல உங்கள் மனதைப் பண்படுத்தி மெய் ஞானியின் அருள் ஆற்றல் மிக்க சக்தியின் வித்தை உங்களுக்குள் விதைக்கச் செய்கின்றோம்.

அருள் வித்தை நீங்கள் வளர்க்க வேண்டும் என்றால்
1.ஒவ்வொரு நிமிடமும் உயிருடன் ஒன்றி
2.அவனுடனே இணைந்து அவனுடனே வேண்டி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

உயிரான ஈசனுடன் அவனுடன் ஒன்றிய பின் அந்தக் குருவின் துணை கொண்டு விஞ்ஞான அறிவால் வந்து கொண்டிருக்கும் விஷத்தின் தன்மையை நமக்குள் நுழையாது தடுக்க வேண்டும்.

விஞ்ஞானத்தால் படர்ந்து கொண்டிருக்கும் நஞ்சினை வீழ்த்தி மெய் வழியில் மெய் ஒளியாகப் பெற்று அந்த சப்தரிஷி மண்டலங்களில் இணைந்திடல் வேண்டும்.

1.கல்கியின் அவதாரமாக நாம் விண்ணில் பறக்கும் நிலை பெற வேண்டும்.
2.அதைக் காட்டுவதற்காகத்தான் கல்கி அவதாரத்தில் குதிரையைப் போட்டு
3.கையிலே வாளை வைத்திருப்பதாகக் காட்டியிருப்பார்கள்.

அந்த வாளின் தன்மை என்ன?

நாம் உட்கொள்ளும் உணவுகளில் மறைந்த விஷத்தை நஞ்சாக மாற்றி விட்டு உடலில் நல்லதைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

நாம் காய்கறிகளை வேகவைத்து அதிலிருக்கக்கூடிய காரலை நீக்கிப் பக்குவபடுத்தி பல பொருள்களை இணைத்து சமைத்துச் சுவையாக்கிச் சாப்பிடுகின்றோம்.

இதைப் போன்றுதான் விஞ்ஞான அறிவினாலேயோ மற்ற நிலைகளிலோ வந்து கொண்டிருக்கும்  விஷத்தின் தன்மைகள் உடலுக்குள் போவதற்கு முன் உயிரான ஈசனிடம் வேண்டி அங்கு குருக்ஷேத்திரப்போரை நடத்தி அந்த விஷத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

1.நஞ்சினை வென்றிடும் உணர்வு கொண்டு உடலை விட்டுச் சென்றபின்
2.இன்னொரு ஆத்மா நம்மைக் கவர்ந்து இழுக்காதபடி அதை வீழ்த்தி
3.மெய் உலகின் தன்மையை விண்ணை நோக்கி
4.அங்கே பறந்து செல்ல வேண்டும்.

அகண்ட பேரண்டத்தில் நம் சூரிய குடும்பத்தைப் போல பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்கள் இருக்கின்றது. அதிலிருந்து வரக்கூடிய நிலையும் நச்சுத்தன்மைகளை உமிழ்த்திக் கொண்டு இருக்கின்றது.

அவ்வாறு பிற மண்டலங்கள் உமிழ்த்தும் நச்சுத்தன்மைகளை நம் பிரபஞ்சத்திலில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களும் கவர்ந்து அதைக் கதிர் வீச்சாகத் தனக்குள் மாய்த்து நம் பிரபஞ்சத்திற்கு ஆற்றல் மிக்க சக்தியாக மாற்றிக் கொடுக்கின்றது. அதைப்போல
1.நம் உயிரின் நிலைகளிலும்
2.அந்த நச்சுத் தன்மைகளை மாற்றும் ஆற்றலாக தனக்குத்தானே வளர்க்க முடியும்.
3.அப்படிப் பெற்றவர்கள் தான் மகரிஷிகள்.

அன்றாட வாழ்க்கையில் உணவைச் சமைத்துச் சுவை மிக்கதாக உண்டு இந்த உடலில் எப்படி மகிழ்ச்சியாகின்றோமோ அதைப் போல விண்ணிலிருந்து வரும் அந்த நச்சுத் தன்மைகளை மாற்றி அதைச் சமைத்து ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக என்றுமே மகிழ்ச்சியாக "என்றும் பதினாறு…!"  என்று நீடித்த நாள் வாழ முடியும்.

இந்த உடலின் தன்மையில் வாழும் காலமோ மிக மிகக் குறுகிய காலம். ஆக அற்ப காலம் தான் நாம் வாழ்கின்றோம்.

ஆனாலும் இந்த உடலில் நின்று தான் “ஒளியாக…” மாற்ற முடியும்.

மெய் ஒளியின் தன்மையை வளர்த்துப் பேரண்டத்தில் எண்ணிலடங்காத நாள் விண்ணிலே சுழன்று… தீயதை வீழ்த்தி… உணர்வின் ஒளிச்சுடராக மற்றதை உருவாக்கும் நிலைக்குத்தான்… “கல்கி… என்று கையில் வாளைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்…!” ஞானிகள்.

முரடனாக இருந்த வான்மீகியும் அவர் சந்தர்ப்பம் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய ஒளியைச் சுவாசித்தபின் தன் உடலுக்குள் மெய் ஆற்றலைப் பெற்று அந்த மெய் ஒளியை வளர்த்துச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தார்.

அதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் மெய் வழி சென்ற அந்த உணர்வின் ஆற்றலைச் சேர்த்து அதைப் பெற்று வான்மீகி மாமகரிஷி உணர்த்திய அந்த உணர்வின் நிலைபோல அவர் உடலிலும் விளைய வைத்துக் கொண்டார்.

1.அந்த மகரிஷிகளைப் போல நாமும் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்று
2.நம் எண்ணத்தால் வளர்த்து
3.ஒளியின் சுடராக விண் செல்வோம்.