ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 23, 2017

மெய் ஞானிகள் மெய் ஞானத்தின் தொடரைத்தான் வெளிப்படுத்துவார்கள் அந்தச் சத்தை எடுத்து நாமும் ஞானிகளாக வளர்தல் வேண்டும்

1.மெய் ஞானிகள் ஞானத்தின் வழித்தொடர் கொண்டு வாழ்ந்து
2.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்று
3.மனித வாழ்க்கையில் வரக்கூடிய துன்ப நிலைகளை நீக்கி விட்டுத்
4.தன் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.

அவர் உடலுக்குள் விளைய வைத்த அந்த எண்ண அலைகள் இங்கே நமக்கு முன் படர்ந்து கொண்டுள்ளது.

அந்த உணர்வலைகளை நாம் சுவாசிக்கும் பொழுது அதே உணர்வின் தன்மை கொண்ட ஞானம் நமக்குள்ளும் வளரத் தொடங்கும்.

அந்த ஞானத்தின் தொடர் கொண்டு சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய சக்தியை நாம் பெற்று அவர்களுடன் தொடர்பு கொண்டு இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அந்தச் சப்தரிஷிகளின் சுழற்சி வட்டத்திலே நாம் சுழலலாம்.

அந்த நிலைகளுக்குச் செல்வதற்கே உங்கள் மனதைப் பண்படுத்தி நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வித்தை உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

அந்த மகா ஞானிகள் அவர்கள் பெற்ற நிலையை நாமும்  பெறும் வண்ணம் உயர்ந்த ஆற்றல்களை  வெளிப்படுத்தியுள்ளார்கள். அதை நாம் அனைவரும் பெற முடியும். பெறவேண்டும்.

1.மாம்பழம் அதனின் சுவையின் மணத்தைத் தான் வெளிப்படுத்தும்.
2.வேப்ப மரம் தன் கசப்பின் தன்மையை வெளிப்படுத்தும்.
3.வெறுப்பை வளர்த்துக் கொண்டால் வெறுப்பான பேச்சுக்களைத்தான் நாம் பேசுவோம்.
4.மற்றவர்களின் குறைகளைக் கண்டு குறையான உணர்வைப் பேசி வளர்த்துக் கொண்டால் எதையுமே குறையாகத்தான் நாம் பேசுவோம்.

5.பாசத்தின் நிலையில் உள்ளவர்கள் பாசத்தால் எண்ணும் பொழுது பிறருடைய துன்பத்தை எல்லாம் அவர்கள் உடலில் எடுத்து வளர்த்துத் தன்னை அறியாது (பாசத்தாலே) வேதனை கொண்டே தன் உடலுக்குள் நோயை வளர்த்துக் கொண்டே இருப்பார்கள்.

இதைப் போன்று தான் நாம் எண்ணிய நிலைகள் அனைத்தும் வளர்கின்றது. செடி கொடிகள் எப்படித் தன் சத்தை எடுத்து வளர்கின்றதோ அதைப் போல நமக்குள் வளர்த்து விடும்.

அந்த ஞானிகளின் அருள் வித்தை நமக்குள் எடுத்து விளைய வைக்கும் பொழுது நமக்குள் இருக்கக்கூடிய துன்பங்களை நீக்கி விட்டுப் பேரானந்தப் பெருநிலையான பெருவீடான பெரு நிலை பெறும் அந்தத் தகுதியைப் பெற முடியும்.

மகா ஞானிகளுடைய அருள் வாக்கினை… அருள் வித்தினை… உங்களுக்குள் வாக்காகச் சொல்லி அந்த உணர்வை இயக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

நாள் முழுவதும் உடலுக்காக உழைத்தாலும் சிறிது நேரமாவாது அந்த மகரிஷிகளை எண்ணி
1.அந்த மகரிஷ்களின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானித்தால்
3.யாம் உங்களுக்குள் பதியச் செய்த வித்திற்குச் சக்தி கூடுகின்றது.
4.அது வளர வளர நீங்கள் ஆற்றல் மிக்கவர்களாக ஞானியாக வளர்வீர்கள்.