ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2017

“ஒளிக் கற்றைகள்…” நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களிலும் பட்டு ஒளியின் உணர்வாக மாறுவதற்காகத்தான் “வைரக் கிரீடங்களை” தெய்வத்திற்கு அணிவித்தார்கள் ஞானிகள்

மக்கள் அனைவருக்குள்ளும், உயர்ந்த பண்புகளை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ஆலயங்களில் தெய்வச் சிலைகளுக்கு வைரக் கிரீடங்களை அணிவிக்கின்றார்கள். வைர ஒட்டியாணம் மாற்றுகின்றார்கள். “பள…பள… வென்று மின்னும் நகைகளை அணிவிக்கின்றார்கள்.

இவைகளை எல்லாம் பார்க்கும் நாம் எப்படி இருக்கவேண்டும்?

1.சங்கடம் சலிப்பு வெறுப்பு இவைகளை நீக்கி
2.சிலைக்கு அணிவிக்கப்பட்ட வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ, 
3.அதைப் போன்று என்னுடைய சொல்லின் நிலைகள் ஜொலிக்க வேண்டும்
4.என் சொல்லைக் கேட்போர் வாழ்வில் அந்த ஜொலிப்பு ஏற்படவேண்டும்
5.என் பார்வையின் நிலைகள் அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும். 
6.என் குடும்பத்தில் மகிழ்ச்சி பெறும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி
இதை நுகர்ந்தால் அதனின் உணர்வின் அணுக்கள் நம்முள் விளையும்.

வைரமோ விஷம் கொண்டது. மின்னிடும் இயல்பு கொண்டது. அதைத் தட்டி சாப்பிட்டால் நம்மைக் கொல்கின்றது.

1.மின்னும் அணுவின் நிலையைக் கண்ணுற்றுப் பார்த்து
2.அந்த உணர்வின் நிலையை நாம் நுகர்ந்து
3.அந்த உணர்வைப் பெறவேண்டும் என ஏங்கி எண்ணும் பொழுது,
4.இந்த உணர்வின் தன்மை மின் அணுவாக மாறி,
5.உடலில் விளைந்த விஷத்தை ஒடுக்கி,
6.உணர்வின் ஒளியின் அறிவாக வளரச் செய்வதற்குத்தான் வைரக் கிரீடம்.

ஏராளமான நகைகளுடன் வெங்கடாசலபதியின் படம் போட்டு இருப்பார்கள். அவனை வணங்கும் பொழுது அவனுக்குக் காசு கொடுத்தால் நிறையப் பணம் கொடுப்பான் என்ற எண்ணம்தான் வருகின்றது.

1.வெங்கடாசலபதி எனும் பொழுது நம்மை ஆட்சி புரிபவன் நமது உயிர்…, நமக்கு அதிபதி
2.அதில் நாம் எத்தகைய உணர்வை இணைக்க வேண்டும்?
3.எந்த உணர்வாக, நமக்குள் இயக்கப்பட வைக்க வேண்டும்? என்பதைத்தான் காவியமாகப் படைத்துள்ளார்கள்.

அன்று ஞானிகள் பொருள் செல்வத்தை விரும்பவில்லை.

ஒளியின் சுடராக நமக்குள் அருள்ஞானத்தை வளர்த்தோம் என்றால் நம் சொல் இனிமை பெறும். இருளைப்  போக்கிடும் அருள்ஞான உணர்வுகள் நம்மில் பெருகிடும், என்ற இந்த உண்மையின் உணர்வைப் பெறும் நிலையாக துவைத நிலை கொண்டு சிலை வைத்தார்கள்.

1.“திருவேங்கடம்” இந்த உடலை ஆட்சி புரிபவன் “உயிர்” என்ற நிலைகளுக்குக் காரணப் பெயர் சூட்டி
2.சிலையாக உருவாக்கி உணர்வின் காவியமாகத் தீட்டி,
3.கருத்தினைப் பதிவு செய்து
4.சிலையை உற்று பார்க்கச் செய்து,
5.அதனின் கருத்தை உணர்வை நுகரச் செய்து,
6.நுகர்ந்த உணர்வை உயிருடன் இணையச் செய்து,
7.இந்த உணர்வின் அலைகளை நமது உடல் முழுவதும் படரச் செய்தனர் ஞானிகள்.

1.சிலைக்கு அணிவிக்கப்பட்ட வைரங்களின் ஜொலிப்பினைக் கண்ணால் பதிவாக்கப்பட்டு
2.நினைவின் ஆற்றல் உயிருடன் ஒன்றப்படும் பொழுது
3.இந்த உணர்வின் “ஒளிக்கதிர்கள்…” நமது உடலில் ஊடுருவி
4.நமது ஒவ்வொரு அணுவிலும் "பளிச்சிடும்…" உணர்வுகள் விளைகின்றது.

எப்படி விஷத்தின் தன்மைகள் மோதி ஒளியின் சுடராக மாறுகின்றதோ இதைப் போன்று அதன் உணர்வின் தன்மை நம்முள் வேதனையின் உணர்வின் தன்மையை ஒடுக்கி நமது உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

ஞானிகள் காண்பித்த அருள்வழி கொண்டு நீங்கள் உங்களை நலியச் செய்யும் மயங்கச் செய்யும் வேதனையான உணர்வுகளுக்கு உங்களிடத்தில் இடம் தராது மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

அஞ்ஞானத்தைப் போக்கி பேரின்பப் பெருவாழ்வை பெறச் செய்யும் அருள்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் இணைத்து உயிரான்மா அழியா ஒளிச் சரீரத்தினைப் பெறும் நிலையாக உங்களில் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் ஒற்றுமையுடனும் தொழில் வளத்துடனும் செல்வச் செழிப்புடனும் மலரைப் போன்ற மணத்துடனும் மகிழ்ந்த உணர்வுகளுடனும் என்றும் பேரின்பப் பெருவாழ்வுடனும் நீங்கள் வாழ்ந்து வளர்வதற்கு எமது அருள் ஆசிகள்.