ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 14, 2017

“விண் செல்லும் மார்க்கம்” – குருநாதர் தான் விண் செல்வதை என்னைக் கண்ணுற்றுப் பார்க்கச் செய்தார்

வைகுண்ட ஏகாதசி என்ற நந்நாளில் தான் குரு பூஜையாக வைத்துள்ளோம்.

குருநாதர் ஏகாந்த நிலைகள் கொண்டு ஒளியின் சுடராக ஒளியின் சரீரமாகி எந்த உடலின் ஈர்ப்புக்குள்ளும் சிக்காது இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றார். (1971)

ஒளியின் சுடராக அவர் தனக்குள் மலரச் செய்து மனித வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த நஞ்சினை மாய்க்கும் ஆற்றல்மிக்க சக்திகளை  அவர் வெளிப்படுத்தியுள்ளார்,

அந்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றது. அவர் விண் சென்றது போல் நீங்கள் அனைவரும் அந்த ஆற்றல்களைப் பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் “குரு பூஜை”.

1.”குரு...” என்பது
2.நாம் எதை ஆழமாகப் பதியச் செய்கின்றோமோ
3.அதை மீண்டும் செய்ய எண்ணும் பொழுது
4.அது குருவாக நின்று நமக்குள் செயல்படுத்துகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராகச் சென்ற அந்த நாள் தான் வைகுண்ட ஏகாதசி.

அவர் ஒளிச் சரீரத்தைப் பெற்றபின் தான் உடலை விட்டுச் செல்லும்போது “என்னைக் கண்ணுற்றுப் பார்க்கச் செய்தார்”.

இந்தப் பூமிக்குள் நான் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ உணர்வு கொண்டு எல்லோரிடமும் பழகினேன். அதே சமயம் எல்லோருடைய நோய்களையும் நீக்கவும் உதவினேன்.

அவர்கள் அனைவரும் என் பால் பற்றுதலும் கொண்டார்கள். இருப்பினும்
1.அவர்களுடைய பாச உணர்வுக்குள் சிக்காது
2.அவர்கள் எண்ணும் ஏக்கம் என்னை இயக்காது
3.அவர்களுக்குள் உள்ள இருள்களை நீக்கிடவும்
4.மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் என் உணர்வுகள் செயல்பட்டது.

இந்த உடலை விட்டு (உயிரான்மா) “நான் செல்கின்றேன்”. ஒளியின் சுடராக எவருக்கும் சிக்காது இந்த உயிரான்மா எப்படிச் செல்கிறது என்று “பார்...” என்று உணர்த்தினார்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி சுமார் 30 வருடங்கள் காடு மேடெல்லாம் அலைந்து யாம் அனுபவபூர்வமாகப் பெற்ற நிலைகளைத்தான் “விண் செல்லும் மார்க்கமாக” உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

5000 வருடங்களுக்கு முன் விண் சென்றவர்கள் பலர். அதன் பின் விண் சென்றவர்கள் மிகவும் சொற்பம் தான். ஆதிசங்கரருக்குப் பின் முற்றிலும் அது தடையாகி விட்டது.

1.அதையெல்லாம் குருநாதர் தெளிவாக்கி விண் செல்லும் ஆற்றல்களைக் கொடுத்தார்.
2.என்னையும் பெறும்படி செய்தார்.
3.இதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்றார். 

அவர் இட்ட கட்டளைப்படித்தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்.