ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 5, 2017

இந்த மனித வாழ்க்கையில் தீமைகளை நுகரும் நிலைகளிலிருந்து தீமைகளை நீக்கும் பழக்கமாக நாம் அமைத்துக் கொண்டால் மகிழ்ந்து வாழ முடியும்

நம் உடல் என்ன செய்கின்றது? நாம் சாப்பிட்ட உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு நல்லதை நம் உடலாக மாற்றுகின்றது.

அப்பொழுது நன்மை தீமை என்று தெரிந்து கொள்ளக்கூடிய நிலை இருக்கின்றது. தெரிந்தாலும் நாம் என்ன செய்கின்றோம்?

மாடு ஆடு இவைகளை வளர்க்கின்றோம். சாணத்தை அங்கேயே தான் போடுகின்றது. அது மேலேயே தான் படுக்கின்றது. அதற்கு முடிந்த அளவு அது தான். வேறு வழியில்லை.

நாம் அவைகளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றோம். இவ்வாறு கட்டிப் போட்டு வைத்த நிலைகளில் வேறு வழி இல்லை என்கிற பொழுது அந்த நிலை ஆகின்றது.

கட்டிப் போட்ட நிலைகளில் இப்படி இந்த உணர்வு பழக்கமாகிவிட்டால் வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றாலும் சாணத்தை இட்டபின் மீண்டும் அதிலேயே தான் படுக்கும்.

இயற்கையின் நிலைகள் இது. ஆக எதன் உணர்வு பட்டதோ அதனின் ஞானம் அங்கே வேலை செய்கின்றது.

இதைப் போன்று தான் நம் வழக்கிலும் நம்மிடம் நல்ல குணங்கள் இருப்பினும் பிறிதொருவர் தவறு செய்யும் உணர்வுகளை நாம் நுகர்ந்து பழகி விட்டால் அதனின் உணர்வுகள் நமக்குள் வந்தபின்
1.அந்தத் தவறின் நிலையையே வளர்க்கச் செய்யுமே தவிர
2.தூய்மைப்படுத்தும் நிலை இல்லாது
3.மீண்டும் அந்த அசுத்தமான சொல்லில் செயலில் தான் வாழ்க்கை அமையும்.
4.அதனின் உணர்வாகத்தான் நம் சொல்லும் செயலும் அமையும்.

ஆகவே இதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா...? தூய்மைப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

இருளை நீக்கி ஒளி என்ற உணர்வு பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும். அந்த அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.பின் நம் குடும்பத்தில் எதனால் நஷ்டமானது?
2.எதனால் ஒற்றுமை இழந்தது?
3.குடும்பத்தில் நம் பிள்ளைகள் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை செய்தார்கள்?
4.பக்கத்து வீட்டுக்காரர் நம்மிடம் ஏன் சண்டை போட்டார்?
5.அதிலிருந்தெல்லாம் நாம் எப்படி விடுபட வேண்டும்?
6.கஷ்டங்களையும் வேதனைகளையும் திரும்பத் திரும்ப எண்ணுவதனால் உடலில் கை கால் குடைச்சல் எப்படி வருகின்றது?
7.நாம் நுகர்ந்த உணர்வுகளால் வீட்டில் எப்படி வெறுப்பை உண்டாக்கச் செய்கின்றது?
8.பிறர் சொல்லும் தீமையான நிலைகளை நமக்குள் அதிகமாகக் கேட்டால் குடும்பத்திற்குள் எப்படிப் பகைமை உண்டாகின்றது?

இதைப் போன்ற சிந்தனைகளை நாம் செய்தோம் என்றால் சிந்தித்துச் செயல்படும் உபாயங்கள் கிடைக்கும். தீமைகள் வராதபடி நம் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றவேண்டும் என்ற அருள் வழியும் கிடைக்கும்.

ஆகவே நம் வாழ்க்கையில் தீமையின் நிலைகளை நாம் கேட்டறிந்தவுடன் தூய்மை செய்து பழக வேண்டும்.

எப்படி?

அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு 10 நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் பரவி உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உள் முகமாக இந்த உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

நண்பர்களிடத்திலோ மற்றவர்களிடமோ பகைமையாக இருப்போம். அவர்களை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.
1.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
2.ஒன்றுபட்டு வாழும் நிலைகள் நாங்கள் பெறவேண்டும்.
3.ஒன்றுபட்டு வாழும் நிலைகள் நண்பருக்கும் வர வேண்டும் என்று
4.இப்படி இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டால் அந்தப் பகைமையூட்டும் நிலைகள் நமக்குள் வராது.

அவர்களும் இதே போன்று எண்ணினால் அவர்களுக்குள்ளும் உள்ள தீமைகள் அகலும்.

இதைப் போன்று தீமையை நீக்கும் பழக்கமாக நாம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும். மகிழ்ந்து வாழ்ந்திடும் நிலைகள் பெறுகின்றோம்.