ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 13, 2017

ஒருவர் இறந்துவிட்டால் உடலைப் புதைக்கலாமா…! எரிக்கலாமா…! சமாதி கட்டலாமா…! என்று அழுகும் சரீரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் “அந்த உயிரான்மா விண் செல்ல வேண்டும்” என்று உந்திச் செலுத்துங்கள்

யாம் சொல்லும் முறைப்படி தியானம் இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் கூட்டுக் குடும்ப தியானமிருக்க வேண்டும்.

தியானமிருந்த பின்
1.உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
3.எல்லோரும் சேர்ந்து விண்னை நோக்கி உந்தித் தள்ள வேண்டும்.

அவர்கள் அங்கே சென்று ஒளிச் சரீரமானபின் அங்கிருந்து எங்களுக்கு நல் ஒளிகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் அங்கே போகாதபடி நாம் அங்கே செல்ல முடியாது.

மூதாதையர்களின் உணர்வுகள் தான் நாம். முதலில் நம் குலதெய்வங்களை விண்ணுக்குச் செலுத்திவிடுகின்றோம். பின் அவர்கள் இருக்குமிடத்திற்கு நாம் போகலாம்.

நம்மை மனிதனாக உருவாக்கியவர்கள் அவர்கள். முதுமையாகும் பொழுது போகின்றார்கள். அவர்கள் உடலை விட்டுச் செல்லும்போது அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ள வேண்டும்.

1.அதற்காக வேண்டித்தான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும்
2.உங்கள் உணர்வின் எண்ணங்களுக்கு விண்ணை எட்டிப் பிடிக்கும் நிலையும்
3.விண்ணிலே ஊடுருவிச் செல்லகூடிய நிலைக்கும் பழக்கப்படுத்துகின்றோம்.

அந்த வலுவின் துணை கொண்டு ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்தது என்றால் அதை நீங்கள் உந்திச் செலுத்தும் ஆற்றலைப் பெறச் செய்வதற்கும் உங்களைப் பழக்குகின்றோம்.

இவைகள் எல்லாம் “சிறு துளி… பெரு வெள்ளம்”.

இப்பொழுது எல்லோரும் நன்றாக இருந்தாலும் கூட யாராவது ஒருவர் உடலை விட்டுப் பிரிந்தால் “ஐய்யய்யோ.., இப்படி இறந்துவிட்டாரே…” என்று எண்ண வேண்டியதில்லை.

நீங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த இந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணித் தியானித்தால்
1.அந்த ஆன்மா “ ஜிர்..ர்ர்…ர்ர்..” என்று
2.(அவர்) மேலே போய்விடலாம்.
3.அதற்கு இந்த ஒற்றுமை (கூட்டுத் தியானம்) தேவை.

ஆனால், இதை விட்டுவிட்டு… இந்தச் சரீரத்தை இங்கே புதைக்கலாமா… அல்லது அங்கே எரிக்கலாமா… என்று “அழுகக்கூடிய சரீரத்திற்கு” முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

ஆக சமாதியைக் கட்டினேன்… அதற்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் அதை மிகவும் விரும்பிச் செய்து கொண்டிருந்தால் மீண்டும் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் தான் சிக்க வேண்டும்.

1.இந்த நாய் எப்படியோ போகின்றது
2.பூராம் குப்பை என்று இதைத் தூக்கி எறிந்து விட்டு
3.அந்த உயிரான்மா அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும்.
4.அதை நிலைத்த இடத்தில் நிலையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி
5.சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். ஆனால் இந்த உடலிலிருந்துதான் உயிரான்மாவை ஒளியாக மாற்ற வேண்டும்.

ஆகையினால் இந்த உணர்வின் நிலையை மெய் ஒளியாக்கி இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அனைவருமே அந்த மெய்ஞானிகள் சென்ற இடத்திற்குச் செல்ல வேண்டும்.
1.இந்த உடல் மண்ணிலிருந்து பெற்ற சக்தி தான் இது.
2.மண்ணுடன் கலந்து இந்த உடல் மக்கட்டும்.
3.மண்ணுக்குள் இருந்து சத்தை எடுத்து ஒலி ஒளியாக மாற்றிய பின்
4.ஒளியின் சரீரமாக நாம் பெறவேண்டும். 

நீங்கள் எல்லாம் ஒளியின் சரீரம் பெறுவதற்காகத்தான் இத்தனை உபதேசமும் செய்கின்றோம். உங்களை நீங்கள் நம்புங்கள்.