ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 2, 2017

கூர்மை அவதாரம் – பாறையைப் போன்று “வலுவான ஓடு” ஆமைக்கு எப்படிக் கிடைத்தது?

கூர்மை அவதாரம் – நாம் தெளிவாக உணர்ந்து கொள்வதற்காக ஒரு உருவம் அமைத்து ஆமையைப் போடுகின்றார்கள்.

உதாரணமாக ஒரு கண்ணுள்ள புழு பாறை மீது நகர்ந்து செல்கிறது என்று வைத்துக் கொள்வோம். தன் உணவைத் தேடிச் செல்கின்றது.

கண்களால் பார்த்துத் தான் உணவாக உட்கொள்ளும் தாவர இனத்திற்குச் சென்றாலும் சூரியனுடைய ஒளிக் கதிர்கள் சிறிது நேரம் அதிகமாகிவிட்டால் வெப்பம் அதிகமாகிவிடுகின்றது.

பாறை மீது நகர்ந்து செல்கின்றது. நகர்ந்து செல்வதற்கு ஒரு பதினைந்து நிமிடம் ஆகிவிட்டால் பாறை வெப்பமாகிவிடுகின்றது. இந்தப் புழுவின் மெலிதான உடல் தாங்க முடியவில்லை என்றால் “துடிக்கின்றது”.

இதிலிருந்து…, “தன்னைக் காக்க வேண்டும்…” என்ற நிலைகளில் கூர்மையாகத்
1.தாவர இனங்களைப் பார்க்கின்றது.
2.அதே சமயத்தில் இந்தப் பாறைகளையும் பார்க்கின்றது.
3.இந்த வெப்பம் அந்தப் பாறைக்குள் பட்டுக் “கடினமான நிலைகள்” வருவதை நுகர்கின்றது.
4.இந்தப் பாறையைக் கூர்மையாக உற்றுப் பார்த்து
5.இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை அதிகமாக நுகர்கின்றது.

நுகர்ந்த உணர்வுகள் எல்லாம் “ஓ…ம்… நமச்சிவாய” என்று அந்த ஜீவ அணுவாக மாற்றி அந்த உடலாக மாற்றுகின்றது. அதனின் மலங்களை
1.இந்தப் பாறையைப் போன்று கடினமாக வெளிவிடும் அணுக்கள்
2.இந்தப் புழுவிற்குள் உருவாகின்றது.

ஆனாலும் இந்தத் துடிப்பின் தன்மை கொண்டு நுகர்ந்த உணர்வின் அணுக்களான பின் இந்த உடலைப் பிளந்து விடுகின்றது. புழு மடிகின்றது.

புழு கூர்மையாகக் கவர்ந்த உணர்வுகள் உடலிலே விளைந்து உயிரிலே சேர்ந்து அதற்குத்தக்க அடுத்த உடலாக “ஆமையாகின்றது”.

1.எந்தப் பாறையினுடைய வெப்பத்திலிருந்து காக்கப்பட வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்ததோ
2.(அந்த உணர்வின் சத்து) ஆமையின் ஓடு வலுவாகின்றது.
3.அதற்குள் வெப்பத்தைத் தாங்கும் சக்தி (பாறையைப் போன்று) வருகின்றது.

ஆமையை நெருப்பு இருக்கும் இடத்தில் போட்டுப் பாருங்கள். அந்த வெப்பத்தைத் தாங்கக்கூடிய சக்தி அதற்குண்டு.

இந்த உணர்வின் இயக்கங்கள் “எப்படி வந்தது…?” என்ற நிலையைக் கண்டுணர்ந்தவன் அன்று அகஸ்தியன்.

அதைத்தான் கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரமாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் நாம் எதைக் கூர்மை அவதாரமாக்க வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.