ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2017

தெளிந்த நிலைகள் கொண்டு தியானத்தில் “உணர்வுகளைக் குவித்தால்” அகஸ்தியர் கண்டுணர்ந்த உண்மைகளைக் காட்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் உணரலாம்

ஒரு நோயாளி தன் நோய் தீர வேண்டும் என்றால் மருத்துவர் தரும் மருந்தைக் கட்டாயமாகச் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

இதே போன்று நம்முள் அறியாது சேர்ந்த நஞ்சான உணர்வுக்ளை நீக்க வேண்டுமென்றால் நமக்குள் கட்டாயப்படுத்தித்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருகச் செய்ய வேண்டும்.

ஆகவே தான் உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

அந்த உணர்வோடு கொண்டு போகப்படும் பொழுது அவ்வுணர்வின் ஒளிக் கற்றைகளை உங்களில் சேர்த்துப் பழகுங்கள். மின் கதிர்களை எண்ணிச் சுவாசிக்கப்படும் பொழுது அதன் உணர்வின் தன்மையினை உங்களிடத்தில் ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க உதவும்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களில் சேர்கின்றது இவையெல்லாம், குரு தன்மையால் வருவது.

சாமி (ஞானகுரு) சொன்னார்.., இதையெல்லாம் பெறவேண்டும் என்று எண்ணப்படும் பொழுது நீங்கள் எண்ணிய ஆற்றல் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும்.

நான் “தனித்தன்மையில் செல்வேன்” என்று எண்ணினால் முடியாது.

குரு இல்லாத வித்தை எதுவுமே வித்தையாகாது. ஆகையால், “குருநாதர் சொன்னார்... என்ற நிலையில் ஒன்றை இணைத்துப் பார்க்கும் பொழுது தனக்குள் உருவாகும்.

ஆகவே இதன் வழியில்தான் நாம் அறிய முடியும்.

நமது குருநாதர் தம் உணர்வின் தன்மை கொண்டு அகண்ட அண்டத்தையும் அகஸ்தியர் கண்டுணர்ந்த உணர்வையும் அறிந்துணர்ந்தார்.

தமக்குள் பெற்ற பேரருளின் உணர்வுகளை  எமக்குள் யாம் எவ்வாறு பெறவேண்டும் எனும் வழிமுறைகளைக் காண்பித்தார்.

உணர்வின் உணர்ச்சிகளை எமக்குள் தூண்டச் செய்து “செவி வழி ஓதி... உணர்வுகளை அறியும்படி” நுகர்ந்தறியும் ஆற்றலைக் கொடுத்தார்.

1.நுகரும்போது உடல் உணர்ச்சி கொண்டு அறிவதும்
2.உணர்வின் தன்மை கூறும்போது காட்சியாகத் தெரிவதும் போன்ற நிலைகள் கொண்டு எம்மை அறியச் செய்தார் அறிந்தோம்.
3.அதனின் உணர்வுகளை உங்களுக்குள்ளும் யாம் பதிவாக்குகின்றோம்.

இதனை உங்களுக்குள் ஏங்கிப் பெறும் நிலை வரும்பொழுது அதற்குத் தக்கவாறு உங்களில் உருப்பெறும் தன்மை வருகின்றது.

உணர்வுகளை உங்களில் குவிக்கப்படும் பொழுது அது காட்சியாகவும் உங்களுக்குத் தெரியும்.
1.கண் திறந்திருந்தாலும் சரி
2.கண் மூடியிருந்தாலும் சரி உணர்வின் அலைகளாக மாறும் தன்மை வரும்.

தெளிந்த மனம் கொண்டு கண்களை மூடித் தியானித்தால் உணர்வின் தன்மை புற நிலைகளை அடக்கும். அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையைப் பெருக்கும்.

நமக்குள் உணர்வின் தன்மைகள் காட்சியாகத் தெரியும். ஆகவே  நீங்களும் இதைப் பெறவேண்டும்.

ஏனென்றால் ஒரு வித்து ஒருவருக்குப் பசி தீர்க்காது. நீங்கள் பெற்ற அருள் உணர்வின் சத்தை மற்றவர்களிடத்திலும் படரச் செய்யும் உணர்வை  நீங்கள் உங்களிடத்தில் வளர்த்துக் கொண்டால் நாம் அனைவரும் ஒன்றென இணைந்துவிடலாம்.

சிறு துளி என்ற நிலை வரப்படும் பொழுது அதன் தன்மை புவியில் தங்கி விடுகின்றது. சிறு துளிகள் இணைந்து பெரும் வெள்ளமாக வரப்படும் பொழுது பலவற்றிற்கும் பயன்படுகிறது.

அது போன்று நாம் சிறு துளியாக இருப்பினும் பலரிடத்தில் அருளுணர்வுகளை வளர்த்து அனைவரும் ஒன்றென இணைக்கப்படும் பொழுது அரும்பெரும் சக்திகளை நாமும் பெறலாம்,
1.வரும் தீமைகள் அனைத்தையும் நீக்கவும் செய்யலாம்.
2.அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் பெருக்கவும் முடியும்.