ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2017

“தன் இனமாக உருவாக்க வேண்டும்” என்று விரும்பும் மெய்ஞானிகளின் விருப்பம்

மெய் ஞானிகள் சென்ற அவர்களின் வழிப்பாதைகளில் செல்ல வேண்டும் என்று நான் (ஞான குரு) எண்ணுகின்றேன்.

அப்போது அந்த எண்ணத்திற்கு வலு கொடுக்க எமது குருநாதர் பல முறைகளில் அவர் கண்டுணர்ந்த உணர்வை அவர் எனக்குள் பதிவு செய்துள்ளார்.

அவர் உடலுக்குள் விளைய வைத்த ஆற்றல்களை எண்ணத்தின் செயலாகச் சொல்லுகின்றார்.
1.அதை உற்று நோக்கும் போது அந்த உணர்வின் சத்து
2.அவர் உடலில் இருந்து வரக்கூடிய ஒலியை என் செவிப் புலன் ஈர்த்தாலும்
3.அந்த உணர்வின் சத்து எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

ஊழ்வினை என்றால் “வித்து” என்று பொருள். அதாவது ஒரு மரத்தின் சத்து தனக்குள் விளைந்து அதனின் வித்தாகும் போது அதை ஒரு நிலத்தில் நாம் பதியச் செய்கின்றோம்.

அப்பொழுது அந்த மரம் எந்த உணர்வின் சத்தை வித்தாக எடுத்ததோ அந்த வித்து அதே உணர்வின் இயக்கமாக பூமியின் துணைகொண்டு நம் முன் படர்ந்திருக்கும் தன் தாய் மரத்தின் சத்தை உணவாக எடுத்து வளரும்.

உதாரணமாக ஒரு வேப்ப மரத்தில் இருந்து வெளிப்படும் கசப்பின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கின்றது. அது இங்கே உண்டு.

அந்த வேப்ப மரத்தில் ஒரு வித்து உருவாகின்றது என்றால் அதை நாம் மண்ணிலே ஊன்றுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அப்பொழுது அது காற்றிலே பரவி படர்ந்திருக்கும்
2.தன் தாய் மரத்தின் உணர்வின் சத்துகளை காந்தப் புலன் கவர்ந்திருந்தால்
3.புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு அதைக் கவர்ந்து
4.தன் உணவாக எடுத்து அந்த உணர்வின் சத்தாக விளைந்து “வேப்ப மரமாகும்”.
5.அதன் உணர்வின் “வித்தாக” மீண்டும் விளைகின்றது.

இப்பொழுது சொல்வது அர்த்தமாகின்றதல்லவா?

இதைப் போலத்தான் குருநாதர் அவர் விளைய வைத்த உணர்வின் சத்தை எனக்குள் உபதேசித்தார்.

என் செவிப் புலனறிவால் நான் கேட்டறியும்போது அவர் உணர்வின் உணர்ச்சிகள் எனக்குள் உந்தப்பட்டு அந்த உணர்வின் ஆற்றலை
1.நான் நினைவு கொண்டு “கூர்ந்து…” எண்ணும் போது
2.”அதைக் கவரும் நிலை” ஏற்படுகின்றது.
3.கவர்ந்த உணர்வுகள் என் நினைவுகளுடன் இணைக்கப்பட்டு
4.கருவின் தன்மையாக ஊழ்வினையாக ஒரு “ஞான வித்தாக” எனக்குள் பதிவாகின்றது.

அவர் உபதேசித்த உணர்வின் தன்மை கூர்மையாகக் கவனித்த பின் அதனின் நிலைகள் எனக்குள் பதிவாகி அதனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தேன்.

 அவர் உடலிலே விளைந்த தீமைகளைக் கண்டறிந்து அதனின் உண்மையின் பொருளை கண்டுணர்ந்து மெய்யுணர்வை அவர் தனக்குள் வளர்த்த உணர்வுகளை என்னால் பெற முடிந்தது.

நமது குருநாதர் அவர் தீமைகளை அகற்றி மெய்யுணர்வைத் தனக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி இன்றும் விண்ணுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கின்றார்,

இப்பொழுது தற்காலத்தில் (1971) சப்தரிஷி மண்டலத்தில் இணைந்தவர் தான் நமது குருநாதர் “மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்”.

அவர் உடலில் விளைந்த அந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் யாம் உபதேசிக்கும் போது கேட்டுணர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

பதிந்த நிலைகளை நீங்கள் மீண்டும் எண்ணும்போது நமது குருநாதர் காட்டிய அருளுணர்வு இங்கே படர்ந்திருப்பினும் அவர் நினைவு கொண்டு அங்கே விளைந்த உணர்வை நாம் கண்டுணர முடிகின்றது. நுகர முடிகின்றது.

நுகர்ந்த உணர்வுகள் - ஒரு வித்து எவ்வாறு தனக்குள் சுவாசித்து தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து அதே மரமாக விளைகின்றதோ இதைப் போல குருநாதர் உடலில் விளைந்த
1.அந்த மெய்ஞானியின் மெய்யுணர்வின் ஆற்றல்
2.நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்று ஒளியின் சரீரமாக இருக்கும் அந்த உணர்வின் ஆற்றல்
3.நமக்குள் அது வளரும் தன்மை பெறுகின்றது.

ஒரு வித்து தாய் மரத்தின் சத்தைக் கவருவது போல் மெய் ஞானிகள்  விளைவித்த மெய் ஞான உணர்வுகளை நாம் பெற வேண்டும்

இதைப் படித்துப் பதிவாக்கும் அனைவரும் மெய் வழி நடந்து மெய் ஞானம் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து “என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்” என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன் பிரார்த்திக்கின்றேன். 

ஓம் ஈஸ்வரா குருதேவா…!