ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 2, 2017

“மனிதனுடைய எண்ண வலு சாதாரணமானதல்ல” – எண்ணத்தின் வலு கொண்டு “தீமைகளை அகற்றும் உணர்வை நாம் சேர்க்க வேண்டும்” என்பதே ஞானிகள் உரைத்தது

பல கோடிச் சரீரங்களில் தீமை என்று உணர்ந்து தன்னைக் காத்திடும் உணர்வுகளைச் செயலாக்கிப் பெற்ற மனிதச் சரீரத்தில்…, “அனைத்துத் தீமைகளையும் அகற்றிடும் அணு செல்கள்” உள்ளன.

ஆகையினால்தான் கார்த்திகேயா என்றும் ஆயிரம் கண்ணுடையான் என்றும் ஞானிகள் உரைத்தனர்.  மனிதனின் நிலையில் ஆயிரம் குணங்களின் சத்து நமது உடலில் இருக்கின்றது.

இதனால் நாம் எத்திசையிலும் எந்நிலையையும் நமது உணர்வின் அறிவு கொண்டு அறிந்து கொள்கின்றோம். ஆலயங்களில் 1008  அபிஷேகங்கள் செய்வார்கள். மனிதரிடத்தில் 1008  குணங்கள் உள்ளன.

பகைமை உணர்வுகள் வரும்பொழுது அதிலிருந்து மீண்டிடும் நிலையாக அறிவைக் கூட்டி பகைமையிலிருந்து விடுபடுகின்றோம்.

பல கோடிச் சரீரங்களில் சேர்ந்துள்ள தீமைகளை வென்ற உணர்வுகள் நமக்குள் இருக்கப்படும் பொழுது பகைமையுணர்வுகளைக் கண்ணால் பார்க்கப்படும் பொழுது நமது உடலில் இருக்கும் அறிவு இது பகைமை கொண்டது என்று உணர்த்துகின்றது. அறியும் தன்மை வருகின்றது.

தீமையை வென்றவர் துருவ மகரிஷி. அவர் துருவ நட்சத்திரமானார் என்ற நிலையில் அவருடைய உணர்வை நாம் நுகர்ந்து, “ஈஸ்வரா என்று எண்ணிக் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால் இதன்வழி கொண்டு தீமைகளை வென்றிடும் சக்தியினை நமக்குள் உருவாக்குகின்றது நமது உயிர்.

ஏனென்றால் கண்ணால் காக்கும் நிலை பெற்றிருந்தாலும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றும் பொழுது உணர்வினை உயிர் வழி கொண்டு உடலில் பரப்புகின்றது.
1.உடலில் பரப்பிய உணர்வுகள் உந்தி
2.மூக்கின் வழி சுவாசிக்கும் உணர்வின் தன்மையினை இடைமறித்து
3.அருள் ஒளி என்ற உணர்வுகள் இணையும் பொழுது
4.தீமை என்ற நிலை வராது தடுக்கின்றது.

அருள் ஒளியின் உணர்வின் தன்மை நமக்குள் வலு பெறும் பொழுது பகைமையை உட்புகாது தடுக்கும் நிலை வருகின்றது. இதைத்தான், கார்த்திகேயா என்று உணர்த்தினர் ஞானிகள்.

ஏனென்றால் நாம் நமது ஆறாவது அறிவால் அனைத்தையும் அறிந்திடும் தன்மை இருந்தாலும் ஆறாவது அறிவு சேனாதிபதியாக நின்று தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது.

நம்முள் எண்ணத்தால் உணர்வின் ஒளியை உருவாக்கினால் உயிரென்ற நிலைகள் இணைந்து அருள் ஒளி எனும் பேரொளியின் தன்மையை நம்முள் உருவாக்கும்.

இவையனைத்தும் எதிர்காலத்தில் உங்களைப் பகைமையுணர்வு தாக்காது அதனின்று பாதுகாக்கும் சேனாதிபதியாக உருப்பெறுகின்றது.

உங்களுக்குள் பாதுகாப்பு கவசத்தின் உணர்வின் அணுக்களைப் பெறுவதற்குத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நீங்கள்  நுகர்ந்து உங்களுக்குள் உருவாக்கினால் இந்த உணர்வின்  எண்ணம் உங்களைக் காக்கும்.

இதுவே “சேனாதிபதி”.

ஞானிகளின் தத்துவக் கருத்துக்கள் மனிதன் தீமைகளிலிருந்து மீளும் மார்க்கத்தைத்தான் உரைக்கின்றன. அதற்காகத்தான் விநாயகரை வணங்கச் செய்தது.

நாம் பலகோடிச் சரீரங்களில்
1.தீமைகளில் இருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வைப் பெற்று
2.“தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்து
3.நம்மை மனிதனாக உருவாக்க மூலமாக இருந்தது நமது உயிர்.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து எண்ணத்தின் வலிமை பெற்றது மனித உடல்,

இன்றைய மனிதன் தன் எண்ண வலுவின் உணர்வின் துணை கொண்டு 1000 டன் கொண்ட ஒரு எடையை விண்ணில் செலுத்துகின்றான். பெரும் பாறைகளைச் சிறு கடப்பாரை கொண்டு நகர்த்தி இடம் மாற்றுகின்றான்.

இது மனிதனின் “எண்ண வலு”.

1.எண்ணத்தின் வலுகொண்டு இவன் சுவாசிக்கும் பொழுது 
2.அதனின் உணர்வின் “யுக்தியின் அணுக்கள் உருவாகி”
3.அது காலத்தால் தனக்கேற்ற உணர்வை உருமாற்றிக்  கொண்டேயிருக்கும் - அதைப் போல
4.”எண்ணத்தின் வலுகொண்டு” தீமைகளை அகற்றும் உணர்வை நமக்குள் சேர்க்கும் பொழுது
5.அந்த உணர்வினை வலுப் பெறச்செய்யும் - வளர்க்கச் செய்யும் உணர்வினைச் செயல்படச் செய்கின்றது.

ஆகவே, நாம் அருள் ஞானிகள் காண்பித்த அருள் நெறிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

“ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்த உயிரின் வழி கொண்டு தீமைகளை வெல்லும் அருள் உணர்வினைக் கவர்ந்து உடல் முழுவதும் பரப்பி தம்மையறியாது நமக்குள் சேர்ந்துள்ள “தீமைகளைப் பிளந்திடும்…” நிலை பெறவேண்டும்.

இதன் வழியைப் பின்பற்றும் அன்பர்கள் அனைவரும் தம்முள் தீமைகளை வென்றிடும் நிலையாக ஒளியின் உணர்வுகளைப் பெற்று இவ்வாழ்வில் பேரின்பப் பெருவாழ்வாகப் பெருவீடு பெருநிலை பெரும் நிலையாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.