ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 5, 2017

உடலை விட்டு எவ்வாறு வெளி செல்ல வேண்டும்...?

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் ஞான வித்தை எமக்குள் ஆழமாகப் பதிவு செய்தார்.

பதித்த வித்தை எமக்குள் வளர்ப்பதற்கு “எங்கெங்கெல்லாம் மகரிஷிகளின் அருள்ஞான சக்தி தொடர்ந்து உள்ளதோ... அங்கெல்லாம்...” எம்மைக் கால் நடையாக சென்றுவர கட்டளையிட்டார்.

ஞானிகளின் உடலில் விளைந்த அருள் ஞான சக்திகள் அந்த இடங்களில் பதிந்திருப்பதை படர்ந்திருப்பதை எம்மை நுகர்ந்தறியச் செய்தார்.

மேலும் அதனின் “ஆனந்த நிலையினை” எமக்குள் விளைவித்துக் கொள்ளச் செய்தார்.

பூமியில் மனிதராக பிறந்த நாம்
1.எவ்வாறு இந்த உடலை விட்டு வெளியே செல்ல வேண்டும்?
2.சென்றபின் எவ்வாறு நிலைத்திருக்க வேண்டும் என்று அதையும் குருநாதர் செய்து காட்டுகின்றார்.
3.உயிரான்மாவை உடலை விட்டுபிரியச்  செய்கின்றார்... “ஒளியின் சுடரைக் காட்டுகின்றார்”.
4.ஒளியின் சுடராக ஆனபின் இந்த உயிரான்மா எந்த நிலையில் இருக்கும்? என்பதையும் நிலைக்கச் செய்து காட்டுகின்றார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துருவ நட்சத்திரத்தின் இயல்புகளைக் காட்டி அதிலிருந்து ஆற்றல்மிக்க சக்திகள் வருவதை எம்மை நுகரும்படி செய்தார்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எமக்கு எவ்வாறு பெறும்படி செய்தாரோ அதே வழியில் தான் உங்களுக்கும் பெறச் செய்துகொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி உயிர் வழி சுவாசியுங்கள்.

பேரருள் பேரொளியின் உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கும் பொழுது உங்களுக்குள் தீமையை அகற்றிடும் சக்தியாக “ஒளியின் சுடராக” விளைகின்றது.

நீங்கள் அனைவரும் அதனைப் பெறவேண்டும் என்பதற்காக அருள் உரைகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

1.நீங்கள் எந்த அளவிற்கு உபதேசங்களைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ 
2.அந்த அளவுக்கு ஆழமாக
3.யாம் கொடுக்கும் அருள் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகின்றன.

யாம் கொடுக்கும் உபதேசங்களை அடிக்கடி நினைவு கூர்ந்து உங்கள் வாழ்வில் கடைப்பிடித்துப் பாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
1.உங்கள் உயிரை எண்ணி ஏங்கும்போது
2.அங்கே உங்களுக்கு உடனடியாக அந்தச் சக்தி கிடைத்து
3.உங்களிடத்தில் தீமையின் தன்மைகள் சேராது காக்கப்படுகின்றீர்கள்.

இந்த உபதேசத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளும் அன்பர்கள் அனைவரும் இருள் சூழ்ந்த இவ்வுலகில் நஞ்சான நிலையை நீக்கி நன்மைகளைப் பெறும் விதமாக
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெறவேண்டும்
2.மெய்ஞானிகள் காட்டிய உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்
3.“என்றும் பதினாறு” என்ற நிலைத்த ஒளி சரீரத்தை பெறவேண்டும் என்று
4.நெஞ்சில் அவா கொண்டு இதை வெளிப்படுத்துகின்றோம்.

குருநாதர் காட்டிய மெய் வழியைக் கடைப்பிடித்து வரும் அனைவருக்கும் எமது அருளாற்றலைப் “பூரணமாக” வழங்குகின்றோம். 

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை மகாஞானிகளின் அருளாற்றலின் துணை கொண்டு வளர்த்துக் கொள்ளுங்கள். 

இதன் மூலம் விண்ணும் மண்ணும் போற்றும் மகாஞானிகளில்... “நீங்களும்” ஒருவராக இருப்பீர்கள்.