ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2017

பிறர் வேதனைப்படுவதைக் கண்டு எக்காரணம் கொண்டும் நாம் ரசிக்கக்கூடாது.., அவர்கள் "அதிலிருந்து மீள வேண்டும்" என்று தான் எண்ண வேண்டும் – விளக்கம்

நாம் சுவாசித்த உணர்வுகளில் “எது அதிகமோ” அதன்படிதான் நமது வாழ்க்கையில் எதுவும் நடக்கும்.

1.நமக்கு நோய் வருவதும்
2.இந்த உடலில் பல அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பல மனக்கலக்கங்கள் ஏற்படுவதும்
3.தீமையின் அணுக்கள் பெருகி உடலுக்குள்  உறுப்புக்கள் சேதமாவதும்,
4.மன நோய் வருவதும் உடல் நோய் வருவதும் மனநிலை கெடுவதும், சிந்தித்துச் செயல்படும் சக்தி இழப்பதும்
5.இவை அனைத்துமே “நாம் சுவாசித்த உணர்வுப்படிதான்” நமக்கு வருகின்றது. 

தன் வாழ்க்கையைச் சீர்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது.

நாம் வேதனை கொண்டு அடுத்ததை வேதனைப்படுத்தி ரசித்துக் கொண்டிருப்போம் என்றால் புலி நரி நாய் போன்ற உணர்வுகள் நமக்குள் தோற்றுவிக்கப்படுகின்றது.

அதன் உணர்வு அதிகரித்தால் அதன் கணக்கின்படி இந்த உடலில் கடுமையான நோய்கள் வருகின்றது. பின் அந்த வேதனை அலைகொண்டு ஆன்மா வெளியே சென்றால் நரியோ நாயோ புலியோ போன்ற நிலைகளை உருவாக்குகின்றது. இதைப் போன்று
1.நமது வாழ்க்கையில் பிறருக்குத் தெரியாமல் பல செயல்களைச் செய்கின்றோம்.
2.இவை அனைத்தையும் நமது உயிர் உருவாக்கியே தீரும்.
3.இதிலிருந்து எவரும் தப்பவே முடியாது.

நான் உங்களை ஏமாற்றலாம் ஆனால் நான் ஏமாற்றியதை எனது உயிர் கருவாக்கி அணுவாக்கி உடலாக உருவாக்கிவிடுகின்றது.

ஒருவரை வேதனைப்படுத்தி மறைமுகமாக ரசிப்போமென்றாலும் பிறரைத் துன்புறுத்தியோ பிறர் துன்பப்படும் நிலைகளை உருவாக்கியோ இத்தகைய செயல்களைச் செயல்படுத்தினால் அவர்கள் “உயிரிடமிருந்து… தப்பவே முடியாது”.

இன்றைய வாழ்க்கையில் எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ அதன்படி நோயும் இந்த உடலைவிட்டுச் சென்றபின் மனிதனல்லாத உருவையும் உருவாக்கிவிடும் உயிர்.

நாம் பல கோடிs சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து தீமைகளை வென்றிடும் அமைப்பை நமக்குக் கொடுத்ததும் நமது உயிரே. 

தீமைகளை வென்றிடும் ஆற்றலை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் இன்றைய செயல் நாளைய சரீரமாவதில் சந்தேகம் இல்லை.

நாளை புலியோ பாம்போ ஆடோ தேளோ என உருவாக்கிவிடும்.

ஒருவர் துன்பப்படுவதைக் கண்டு நாம் இன்பப்பட்டால் அதனுடைய நிலைகள் விபரீதமாக இருக்கும்.

ஒருவர் துன்பத்தின் செயலாக செயல்படும் பொழுது நாம் நுகர்ந்தறிந்தால் நாம்
1.அவர் அந்தத் துன்பத்திலிருந்து விடுபடவேண்டும்,
2.அவர் அருள் ஒளி பெற வேண்டும்
3.அவர் மெய் ஒளி காண வேண்டும் என்று
4.நம் உணர்வுக்குள் இதை இணைத்து
5.அந்தத் தீமையின் உணர்வுகள் வளராது காத்துக் கொள்பவர் எவரோ அவர் தப்ப முடியும்.

தீமையின் உணர்வை அடிக்கடி நுகர்ந்தபின் தீமையின் செயலை தன் எண்ணத்தால் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை ஆழப்பதிந்து விட்டால் மனிதனல்லாத உருவைத்தான் உருவாக்கும்.

பிறரைத் துன்பப்படுத்தி ரசித்து வாழ்பவர்கள் “அதனுடைய முதிர்வு காலத்தில்” நிச்சயம் அனுபவித்தே தீர வேண்டும்.
1.உடல்களில் பல நோய் வரும்.
2.டாக்டருக்கும் புலப்படாது, வேதனையிலிருந்து மீளமுடியாது.

காச நோயையோ புற்று நோயையோ பிறருடைய உடல்களில் நுகர்ந்தாலும் பிறருக்குத் தீமை செய்து ரசித்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலில் நிச்சயம் விளையும்.

விளைந்தபின் உடனே ஒன்றும் தெரியாது.

இன்றைய செயல் நாளைய வாழ்க்கையாக அமைகின்றது.  இன்று நாம் எந்த நிலைகளில் நல்ல உணர்வினைப் பெறுகின்றோமோ அது நாளைய உடலின் தன்மையாக நாளைய செயலாக அமைகின்றது.

நல்ல ஒழுக்கங்களையும் நல்ல பண்புகளையும் நாம் பெற்றாலும், வேதனை என்ற உணர்வுகளை நுகரப்படும்பொழுது அது மனித உடலை உருவாக்கிய அனைத்து நல்ல நிலைகளையும் அழித்துவிடுகின்றது.

ஆகவே நாம் அனைவரும் நமது குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் ஆற்றல் மிக்க அருள் சக்திகளை நமக்குள் சேர்த்து நம்மையறியாது வரும் வேதனைகளிலிருந்து விடுபடுவோம். வேதனைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறுவோம். அதைப் போன்று,
1.நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
2.அவர்களும் வேதனைகளிலிருந்து மீள வேண்டும் என்று
3.நாம் “தியானிப்போம்… தவமிருப்போம்”.