ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 12, 2017

தீமையை நீக்கக்கூடிய “சிந்தனைத் திறனையும் மன வலிமையும்” கொடுக்கின்றோம்

சாதாரணமாக மனிதர் பாம்பினைக் கண்டால் அஞ்சுகின்றார்.

ஆனால் பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் ஒருவன் ஒரு பாம்பைப் பிடிக்கச் சென்றால் பாம்பு “அவனைக் கண்டு” அஞ்சுகின்றது.

அவன் கையில் ஒரு குச்சி மட்டுமே இருக்கும். பாம்பைக் கண்டு நாம் பயப்பட்டோம் என்றால் பாம்பு இந்த உணர்வை நுகர்ந்து…, “சிர்…ர்ர் என்று சீறித் தாக்கும் “பயந்த மனிதன் தாக்குகின்றான்” என்று உணர்கின்றது.

தெளிந்த மனிதன் வலிமை கண்டு “இவன் நம்மைத் தாக்கிவிடுவான் என்று பாம்பு அஞ்சி ஓடுகின்றது.  ஆனால் பயந்தவன் தாக்கும் பொழுது பாம்பும் அஞ்சி இவனைத் தாக்குகின்றது.

வலிமையுள்ளதை நுகர்ந்துணரும் சக்தி பிற உயிரினங்களுக்கு உண்டு.  மனிதருக்கும் இந்த அறிவு இருப்பினும் இந்த அறிவை சீராகப்  பயன்படுத்துவதில்லை. ஆதலால் நாம் அறியும் தன்மை இழந்திருக்கின்றோம்.

பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் இந்தப் புற்றுக்குள் பாம்பு இருக்கிறது என்று அறிகின்றான். இவனின் மணத்தை நுகரும் பாம்பு புற்றுக்குள் அஞ்சி ஒடுங்குகின்றது.

இவன் தூண்டும்போது வெளிவரும் பாம்பு இவனைத் தாக்குவதில்லை. அஞ்சி ஓடுகின்றது. ஆனால் இவன் பாம்பை எளிதில் பிடித்து கவட்டையில் போட்டுப் பாம்பு உயிருடன் இருக்கும் பொழுதே பாம்பின் தோலை உரிக்கின்றான்.

இத்தகைய உணர்வுகள் பாம்பு பிடிப்பவனிடத்தில் இருப்பதால் “அவனிடமிருந்து வெளிப்படும் மணத்தை” பாம்பினம் காண்கிறது.

ஆகவே அவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது. சாதாரண மனிதனைக் கண்டால் சீறித் தாக்குகின்றது எதிர்த்து நிற்கின்றது.

இதைப் போன்றுதான் வாழ்க்கையில் பகைமை என்ற உணர்வுகள் எத்தனையோ நம்மிடத்தில் வருகின்றது.

நாம் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு பிறருடைய கஷ்டங்களை நோய்களைக் கேட்டறிந்து உபகாரம் செய்தாலும் நாம் கேட்டறிந்த உணர்வுகள் “ஓ…ம் நமசிவாய…” என்று நம் உடலாக மாற்றுகின்றது.

அதுவே வினையாகின்றது, வினைக்கு நாயகனாக அதன் வலுவைக் காண்பிக்கத் தொடங்கிவிடுகின்றது. இது போன்ற தீமைகளிலிருந்து எங்ஙனம் நாம் விடுபட வேண்டும்…?  என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஒரு இயந்திரத்தை உருவாக்கும் இஞ்சினியர்
1.அந்த இயந்திரத்தில் எங்கெங்கே “அழுத்தம்” அதிகமாக இருக்கும்?
2.எங்கெங்கே “வலிமை” தேவை? என்பதைக் கணக்கிட்டு
3.உலோகத் தன்மையின் வலிமையையும் இயந்திரத்தில் ஏற்படும் உராய்வையும் கணக்கிட்டு
4.ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.

ஆனால் இயந்திரத்தைச் சோதித்துப் பார்க்கும் பொழுது உலோகக் கலவையில் வலு சிறிது குறைவாக இருக்கும் பொழுது இயந்திரம் நொறுங்கி விடுகின்றது.

பின் “எதனால்… இப்படி நேர்ந்தது…?” என்று சிந்திக்கின்றார். “சிந்தித்து…”  இயந்திரத்திற்குண்டான வலிமையைக் கூட்டுகின்றார் இதனைத் தொடர்ந்து சரியான ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.

இதைப் போன்று தான் ஞானத்தின் நிலைகள்.

1.தீமை என்று ஒன்று வரும் பொழுது
2.நாம் அருள் ஞானிகளின் உணர்வை நம்முள் பதிவாக்கினால்
3.உடனே சிந்தனை தூண்டப்பட்டு
4.தீமைகளை அகற்றும் தன்மை நம்மிடத்தில் உருவாகின்றது.
5.அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது நம்முள் விஷத்தின் தன்மையை அடக்கி
6.நம்மிடத்தில் சிந்திக்கக்கூடிய மன வலிமையைக் கூட்டுகின்றது.

இத்தகைய ஆற்றலை நீங்கள் பெற்றால்தான் உங்களுடைய வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும். உங்கள் வாழ்க்கையைச் சீராக்க முடியும்.

பேரருள் பேரொளி பெறும் நிலையாக தனக்குள் அருள் ஒளியின் உணர்வின் தன்மையைக் கூட்டும் பொழுது, அதன் உணர்வின் அலைகளை நீங்கள் பெற்று இந்த உடலுக்கு பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைந்திட முடியும்.

இதை உணர்ந்து ஞானிகள் காண்பித்த அருள் வழியில் அருள் ஞானத்தை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் தம்முள் நஞ்சினை வென்று பேரருள் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கின்றோம்.