ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 6, 2017

அனைவரும் மகிழ்ந்திடும் நிலையில் அதனைக் கண்டு “நாம் அடையும் மகிழ்ச்சியே” நம் உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அழியாச் சொத்து

நமது பூமியே நமக்குத் தாய்.

நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது அதனைக் காணும் தாய் மனமும் மகிழ்ச்சி அடைகின்றது. அது போன்று நாம் மகிழ்ச்சியடையும் பொழுது வெளிப்படும் மூச்சலைகள் நமது தாய்பூமியில் படர்கின்றது.

இந்த மகிழ்ச்சியான உணர்வுகள் பரவும் பொழுது நமது தாய் நாடு மகிழ்ந்திருக்கும். இதில் வாழும் கோடிக்கணக்கான மக்களும் மகிழ்ச்சியின் உணர்வுகளைப் பெறுவர்.

பூமியில் ஒரு வெடிகுண்டை வீசினால் அதனின் நச்சுத் தன்மை காற்றில் பரவி அதனைச் சுவாசிக்க நேர்பவர்கள் மடிகின்றனர்.

ஆனால் மகிழ்ச்சியான உணர்வுகள் காற்றில் பரவும் பொழுது அதனை நுகர்பவர்கள் மகிழும் நிலை வருகின்றது.

நமது பூமியே நமக்குத் தாய் என்கின்ற பொழுது அந்தத் தாய்க்கு நாம் சேவை செய்வது எவ்வாறு இருக்க வேண்டும்...? என்ற நிலையில் சிந்தித்தல் வேண்டும்.

1.இந்தப் பூமியில் பிறந்த நாம்
2.இந்தத் தாயின் பிள்ளைகள் என்று ஒருங்கிணைந்து
3.தாயுடன் நாம் எவ்வாறு அரவணைத்துச் செல்கின்றோமோ
4.தாய் எவ்வாறு நம்மை அரவணைத்து வாழ்த்துகின்றதோ
5.இது போன்று நாம் தாயுடன் அணுகிய நிலைகள் கொண்டு
6.நாம் அனைவரும் சகோதரர் என்றும்
7.இன பேதமின்றி மத பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி நாம் வாழ்நிடுவதே நலம்.

நாம் அனைவரும் “ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்” என்று எண்ண வேண்டும்.  இந்த எண்ணமானது நம் பூமியைக் காக்கும்.

இந்த பூமித்தாயைக் காப்பது போன்று நம்மை ஈன்ற தாயும், மகிழ்ந்திடும் நிலையாக நாம் செயலாற்றிட வேண்டும்.

நமது தாய் தந்தையர் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் நம்மிடத்தில் அன்பைக் காட்டி நல்லறிவை ஊட்டி நம்மை வளர்த்தனர். உணவும் உடையும் கொடுத்துக் கல்விக்கு வேண்டிய வசதிகளும் செய்து கொடுத்தனர்.

ஆகவே  நாம், நம் தாய், தந்தையை மகிழ்ந்திடச் செய்யும் நிலை பெறவேண்டும்.
1.தீய உணர்வுகளை அடக்க வேண்டுமென்றால்
2.தாயின் பேரன்பைப் பெறவேண்டும்.
3.தாயின் பேரன்பைப் பெற்றால் மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும்.
அதைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய உணர்வுகளை அடக்கிடல் வேண்டும்.

மெய்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்து உங்கள் அன்னை தந்தையைப் பேரின்பப் பெரு நிலை பெறச் செய்ய வேண்டும்.

உங்கள் அன்னை தந்தை அவர்கள் பெறுகின்ற மகிழ்ச்சியினால் வெளிப்படும் மூச்சலைகள் இந்த பூமியில் படர்கின்றன.

நம் தாய் பூமியான இந்த உலகில் நாம் அனைவரும் மகிழ்ந்திடும் உணர்வை வெளிப்படுத்தினால் தாய் பூமியும் மகிழ்ந்திடும் நிலை உருவாகும். 
1.அனைவரும் மகிழ்ந்திடும் நிலையில்
2.அதனைக் கண்டு நாம் அடையும் மகிழ்ச்சியே
3.நம் உயிரான்மாவிற்குச் சேமிக்கும் “அழியாச் சொத்து”.