ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 13, 2017

மந்திரங்களை ஜெபித்தேன் சித்து நிலை பெற்றேன் என்பார்கள் – “உடலுக்குப் பின் என்ன…!” என்று தெரிந்து கொள்ளுங்கள்

உதாரணமாக இன்று ஒரு புத்தகத்தில் முருகன் படத்தைப் போட்டு அந்த முருகனை வசப்படுத்துவதைப் பற்றி அதில் எழுதியிருப்பார்கள்.

1.இன்னென்னெ மந்திரங்களைச் சொல்லி
2.இன்னென்ன புஷ்பங்களைப் போட்டு
3.இன்னென்ன நிலைகளில் நீ இருந்தால் முருகன் உனக்கு வசப்படுவான்
4.முருகனை நீ கைவல்யப்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் எழுதி இருப்பார்கள்.
5.அதற்கென்று ஒரு சக்கரம் வரைந்து
6.அதற்குண்டான மந்திரத்தையும் சொல்லி
7.அதற்கு இன்னென்னெ புஷ்பம் என்றும் சொல்லி இருப்பார்கள்.

அதைப் படித்தபின் அந்த மந்திரத்தை ஜெபித்து அவர்கள் சொன்ன முறைப்படி இந்த உணர்வுகளை ஜெபித்து ஜெபித்துச் சுவாசிக்கும்போது என்ன நடக்கின்றது?

1.என் உயிரிலே அந்த உணர்வின் “ஒலிகள்” படுகின்றன.
2.அந்த உணர்வுகள் “உமிழ் நீராகச் சேர்ந்து” என் உடலுக்குள் சேர்கின்றது.
3.நான் எடுக்கும் அந்த உணர்ச்சியின் தன்மைகள் என் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் “அனைத்திலுமே பரவுகின்றன”.

இப்படி 1008 ஒரு கோடி இரண்டு கோடி என்ற நிலைகளில் அவர்கள் சொன்ன மந்திர ஜெபங்களை ஜெபிக்கும் பொழுது எதை எதையெல்லாம் சொன்னேனோ இந்த உணர்வுகள் எனக்குள் பதிவாகின்றது.

எந்தெந்த மணங்களெல்லாம் சேர்கின்றதோ அதுவும் எனக்குள் பதிவாகின்றது.
1.நான் சொல்லும் மந்திரங்கள்
2.எனக்குள் ஒலியின் நாதங்களாக “இறுகுகிறது”.

ஆக இன்னது செய்தால் இன்னது வரும் என்று புத்தகத்தில் சுட்டிக் காட்டியிருப்பார்கள். பல காலம் அந்த முயற்சிகளை எடுத்து அதையே எண்ணி அந்த உணர்வின் தன்மையை நான் சுவாசித்து எனக்குள் சேர்த்துக் கொண்டிருப்பேன்.

அதில் என்னென்ன விதிகள் என்னென்ன குணங்களுக்கு எந்தெந்தக் காரியங்களுக்கு எந்தெந்த ஒலிகளை எழுப்ப வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள்.

அதன்படி எனக்குள் சேர்த்துக் கொள்கின்றேன். அந்த உணர்வுகள் எனக்குள் வளர்ந்து கொள்கிறது.

அடுத்து அந்த ஆற்றல் எனக்குள் பெருகி யாருக்காவது நல்லது செய்ய வேண்டும் என்றால் அதை எண்ணி நல்லதாக வேண்டும் என்று அந்த உணர்வை எடுத்துச் சுவாசிக்கின்றேன்.

அப்படி அவர்களுக்கு எண்ணிச் சொல்லும்போது “அந்த மந்திரத்தை” ஜெபிக்கின்றேன்.

ஜெபிக்கும்போது…, எந்த குணத்தின் உணர்வு கொண்டு அந்த குணத்தின் தன்மை அங்கு “வியாதியாக” உண்டானதோ அதே உணர்வு ஒரு மனிதனுக்குள் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும்.

அந்த உணர்வை மந்திரத்தால் ஜெபிக்கும்போது அந்த உணர்வு இங்கே இயக்கப்படும். ஆனால் அவருக்கு (நோயாளிக்கு) நல்லதாகும். ஆக இதைப் பரீட்சையாகச் சிலர் செய்வார்கள்.

இதில் நான் “வெற்றி கொண்டேன்…” என்ற நிலையை இந்த மந்திரத்தின் ஜெபத்தாலே இவர்கள் உருவாக்கும் பொழுது அவனுக்கு ஒரு நிலை கிடைக்கின்றது.

ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்கிறபொழுது இவன் பெற்ற வெற்றி இவன் “சித்து பெற்றுவிட்டேன்…” என்பான்.

அதே சமயத்தில் ஒருவரைக் கேட்கச் சொல்லி இந்த உணர்வின் ஒலியைத் திரும்பத் திரும்பச் சொல்லப்படும்போது இந்த உணர்வின் ஒலியை அவர் செவி கொண்டு கேட்டால் அந்த உணர்வுகள் அவர் உடலிலே பட்டவுடன் மயங்கச் செய்யும் அல்லது அவருடைய எண்ணத்தை மாற்றச் செய்யும்.

இந்த மாதிரி உணர்வு கலந்து எடுத்துகொண்ட நிலைகளைப் பார்க்கும்போது நான் வெற்றி கண்டேன் என்ற நிலையை நான் எந்தச் சக்கரத்தை எந்த மந்திரத்தைச் சொல்லி எதற்காக இந்த புஷ்பத்தை எடுத்து வளர்த்தேனோ காற்றிலிருக்கக்கூடிய இதே உணர்வை எடுத்து அதை இறுகச் சுவாசித்துக் கொள்கிறேன்.

ஆகவே இவ்வாறு எடுத்துக் கொண்டதால்
1.சில அற்புதங்கள் நடந்தவுடன்
2.எனக்கு முருகன் என்று காட்டிய நிலையில்
3.”முருகனுடைய அருள் எனக்குக் கிடைத்துவிட்டது…” என்ற எண்ணத்தில்தான் நான் அதை ஜெபிக்கின்றேன்.

இவ்வாறு நான் ஜெபித்துக் கொண்ட நிலையில் நான் இறந்தபின் இப்படி ஜெபித்த உணர்வுகள் அனைத்துமே என் உணர்வின் நாதங்களுக்குள் பரவியிருக்கின்றது. என் உடலில் வளர்த்திருக்கின்றேன்.

என் உடலை விட்டு நான் பிரிந்த பின்பு இதே புத்தகத்தைப் போன்று அடுத்தவர்கள் ஜெபிக்கப்படும் பொழுது என்னுடைய உயிராத்மா அவருடைய உடலுக்குள் போகிறது.

நான் எதை எதையெல்லாம் ஜெபித்தேனோ எந்தெந்த உணர்வை மணத்தை எதையெல்லாம் பதிவாக்கினேனோ அந்த உணர்வுகள்
1.அடுத்தவர்கள் மந்திரம் ஜெபிக்கும் பொழுது
2.இந்த மந்திரத்தில் என் உயிராத்மா போகும்.

கடைசியில் அங்கே “எந்த நோயுடன்…” அந்த ஆன்மா பிரிகின்றதோ அடுத்த உடலாக பாம்பாகவும் விஷ ஜெந்துக்களாகவும்தான் நம்மை உருவாக்கிவிடும் நம் உயிர்.

இதுதான் அதனின் முடிவு.

ஏனென்றால் இந்த மந்திர சக்தியின் தன்மைகள் “பின் விளைவு…!” என்ன என்கிற நிலைகளில் இன்று நாம் எதில் சிக்குண்டு இருக்கிறோம் என்ற நிலையைத் தெரிந்து கொள்வதற்காக வேண்டித்தான் இந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் தெளிவுற உணர்த்துகின்றோம்.

“விண்ணுலக ஆற்றலை” எடுத்துத்தான் ஞானிகள் விண் சென்றார்கள். இன்னொரு உடலுக்குள் செல்லாது பிறவி இல்லா நிலையாக அழியா ஒளியின் சரீரமாக இன்றும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள். 

மந்திரம் சொன்னால் மீண்டும் இன்னொரு உடலுக்குள் செல்லலாம். இதில் எது உங்களுக்குப் பிரியமோ அதைச் செய்யலாம்.