ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2017

அர்ச்சுனன் போர் முனையில் சகோதரர்களைக் கொல்ல மனம் வரவில்லை எனும் பொழுது “கண்ணன் உபதேசம்” செய்ததாகக் காவியப் படைப்பு உண்டு – விளக்கம்

பரிணாம வளர்ச்சியில் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையில் ஒவ்வொரு உடலிலும் காத்துக் கொள்ளும் உணர்வின் தன்மைகளை எடுத்துக் கொண்டு மனிதனாக வளர்ச்சியின் தன்மை அடைந்ததைக் குறிப்பிடுவதற்குத்தான்
1.அர்ச்சுனன் சகலகலாவல்லவன்,
2.சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டவன்
3.வல்லமை பெற்றவன் என்று ஞானியர்கள் உணர்த்தினார்கள்.

கண்ணன் கீதா உபதேசம் செய்வதாகத் தத்துவங்களைச் சொல்கின்றனர். அன்று ஞானியர்கள் உணர்த்திய உண்மைகளைப் பார்ப்போம்.

கண்ணனின் நிலைகளுக்கு வரப்படும் பொழுது தன் சகோதரர்கள் எதிர் நிலையில் இருந்து போர் செய்கின்றார்கள். 

சகோதரப் பாசமான உணர்வுகள் அர்ச்சுனனுக்குள் இருந்ததினால் சகோதரர்களைப் பார்த்ததும் கொல்ல மனம் வரவில்லை. 

அவர்களை விட்டுவிட்டால் அவர்கள் உன்னை அழித்து விடுவார்கள்,  ஆகையால் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தாகச் சொல்வார்கள்.

அதன் விளக்கம்
1.ஒருவன் தவறு செய்கிறான் என்றால்
2.அந்தத் தவறான நிலைகளை நாம் கூர்ந்து கவனித்தால்
3.அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது.

அதே போன்று
1.வேறு ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால்
2.அந்த வேதனையான உணர்வை நம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது,
3.அந்த உணர்வுகள் நமக்குள் மாறி
4.நமது நல்ல குணங்களைச் செயலற்றதாக ஆக்கிவிடும்.

ஆகையால் நீ சகோதரன் என்று பார்த்தாலும் அந்த இரக்க உணர்வால் நீ இதைச் செயலாக்கவில்லை என்றால் அது உன்னை அழித்துவிடும். நீ கற்றுணர்ந்த வல்லமை எங்கே செல்கின்றது…! என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்ததாக "கீதையின் தத்துவத்தைச்" சொல்கின்றனர்.

கண்ணன் சொன்னதின் நிலைகள் தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வரக்கூடியது தான்.

எதிரியுடன் இருந்து நின்று அவர்கள் போர் செய்யும் பொழுது தவறான உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலைகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும்.

அதை எவ்வாறு மீட்க வேண்டும் என்ற நிலையைக் கண்ணன் உபதேசித்ததாகவும் கீதையிலே எழுதுகின்றனர்.

1.ஒருவன் செய்யும் தவறான உணர்வை உன் உடலுக்குள் சேர்க்கா வண்ணம் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அவன் செய்யும் தவறான உணர்வை எண்ணாதபடி அவனுக்குள் உன் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.
3.அவன் அறியாத இருள்களிலிருந்து மீள வேண்டும்.
4.தன் சகோதரன் என்று உணர்ந்தாலும் தீய விளைவுகளிலிருந்து அவர்கள் தீயவர்கள் என்று உணர வேண்டும்.
5.இதை உணர்த்தவே அங்கு அம்பாக எய்யச் சொன்னது.
6.அதாவது இந்த எண்ணத்தைக் கொண்டு மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர்களுக்கு பாயச் செய்வது.

அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் நமது நல்ல குணங்களை இங்கு அழித்துவிடுகின்றது.

எதிரிகளிடம் இருக்கும் உண்மையின் நிலைகளை தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று “உணர்வின் இயக்க நிலைகளை” அன்று ஞானியர்கள் கண்ணன் சொன்னதாக உணர்த்தினார்கள்.