ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 27, 2017

வீட்டிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய “உண்மையான யாகம்”

ஜோசியம் ஜாதகம் கேட்டு அவைகளால் நன்மை ஏற்படும் என்று யாகங்கள் செய்து பாவங்களில் விழ வேண்டாம். யாகம் செய்தால் அது நம்மைப் பாவ நிலைக்கே அழைத்துச் செல்கின்றது.

“உண்மையான யாகம்” என்பது நமது குடும்பத்தில் உள்ளோர் அனைவரும்
1.துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியின் உணர்வைப் பெறவேண்டும் என்று
2.இதனின் உணர்வைப் புருவ மத்தியிலிருக்கும் நமது உயிரான நெருப்பினுள் “ஓ,,,ம் ஈஸ்வரா…” என்று போட்டு
3.”அந்த உணர்வின் எண்ண அலைகளை” நமது வீட்டினுள் பரப்ப வேண்டும்.

அப்படிப் பரப்பப்படும் பொழுது நமது வீட்டில் எத்தகைய சாப அலைகள் இருந்தாலும் சரி எத்தகைய கொடிய நிலைகள் இருந்தாலும் சரி அவைகள் அனைத்தும் அகன்று “ஓடி விடும்”.

இதைப் போன்று ஒவ்வொரு நாளும் காலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து துருவ தியானத்தில் அமரும் பொழுது “பிரதோஷம்…” அதாவது
1.மற்றவர்களுடைய கஷ்டங்களை வேதனைகளைக் கேட்டறியும் பொழுது
2.அவைகள் நம்மிடத்தில் தோஷங்களாக மாறி
3.தீய வினைகளை உண்டாக்குவதைத் தடுக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் இல்லம் முழுவதும் படர வேண்டும் எங்களுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் பெறவேண்டும் எங்களிடம் பணிபுரிகின்ற அனைவரும் பெற வேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு அரவணைத்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியின் உணர்வுடன் இணைத்து “உங்கள் எண்ணங்களை…” வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதனால் உங்களுக்குள் உள்ள அரும்பெரும் சக்தியை நீங்கள் காண முடியும் உணர முடியும்.

பக்கத்து வீட்டுக்காரர்களோ மற்றவர்களோ உங்களைத் துயரப்படுத்திக் கொண்டிருந்தால் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்.

அவர்கள் அறியாது சேர்ந்த இருள் நீங்கவேண்டும், அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படி எண்ணி அவர்கள் உணர்வுகள் வருவதை “நாம் தடுத்து… நமது உணர்வுகளை அவருக்குள் பரப்பப்படும் பொழுது” அவர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள். பகைமை உணர்வுகளை மாற்றவும் முடியும்.

இதைப்போன்று அகஸ்திய மாமகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மையை அருள் ஒளியின் உணர்வினை நாம் பெற்றோம் என்றால்
1.நாம் தெளிந்த மனம் பெறலாம்.
2.உலகை அறியலாம்,
3.உலகைக் காக்கலாம்,
4.நாட்டைக் காக்கலாம்,
5.நமது குடும்பத்தையும் காக்கலாம்.

இன்றைய காலம் விஞ்ஞான யுகமாக இருக்கின்றது. ஆனால் விஞ்ஞான அறிவு மனிதர்களைத் தீமைகளின் நிலைகளுக்கே அழைத்துச் செல்கின்றது. மனிதரின் உணர்வுகளைச் சீர்குலையச் செய்யும் நிலைகளையும் மனிதர்களிடையே சிந்தனையற்ற நிலைகளையும் உருவாக்குகின்றனர்.

இந்த நிலையில் நமது குருநாதர் காண்பித்த அருள்வழியில்
1.“தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…” என்று
2.மீண்டும் இவ்வுலகத்தைக் காக்கும் நிலைகள் அகஸ்தியன் உருவான இந்தத் தென்னாட்டில்தான் தோன்றும்.

தென்னாட்டிலுள்ள ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் அரும் பெரும் சக்தியை உருவாக்கி இந்நாட்டு மக்களும் உலக மக்கள் அனைவரும் உண்மையின் உணர்வுகளைப் பெறும்படி செய்யுங்கள்.

உலகத்தை காக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்த்து நம்மையும் காத்து இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை என்ற நிலையை அடையும் தருணத்தை நாம் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால் நமது உடல் எப்போதுமே நமக்குச் சொந்தமில்லை. இந்த உடலால் தேடிய செல்வமும் நமக்குச் சொந்தமில்லை.

1.நமது உயிரில் ஒன்றும் உணர்வாக துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை இணைத்து
2.அதைச் சொந்தமாக்கி உயிருடன் ஒன்றி
3.என்றுமே அழியா ஒளிச்சரீரமாக என்றும் பதினாறு என்ற நிலையாக வாழ்ந்து வளர்ந்திடும் நிலைகள் அனைவரும் பெறவேண்டும்.

உங்களால் முடியும்.